பள்ளித் தோழி

கலப்பு வண்ணங்களில்
கை புகுந்திருக்கும்
கண்ணாடி வளையல்களை
எண்ணிக் கொண்டே
பேசும் அவள்
அப்படித்தான் இப்போதும்
யாருடனோ அருகமர்ந்தபடி…
ஒவ்வொரு சொல்லுக்கும்
பொருத்தமான கையசைவில்
அச்சுப் பிசகாத
அதே அபிநயம்…
நீண்ட கயல்விழியில்
நிறைந்திருக்கிறது
அதே சாயல்…
தொங்கட்டான்கள் அலங்கரித்த
செவிகளில் இப்போது
பட்டன்கள் தாங்கும்
முத்துக் கம்மல்தான்
தடுமாறச் செய்கிறது கொஞ்சம்…
முடிச்சிட்டு அவிழ்க்கும்
பழக்கத் தோசத்திற்கு
தாவணிக்குப் பதிலாய்
நீலவண்ணச் சேலை…
மெதுக்கு மெதுக்கென்று
நெற்றியில் அமர்ந்திருக்கும்
அவள் மச்சத்தினை
தொட்டு விளையாடிய
என் விரல்கள்
அத்துமீறுகிறது இப்போதும்…
இழுத்து மூச்சுவிட்டு
நின்ற தொடர்வண்டியில்
கேட்கத் தயங்கிய
ஒரு கணத்தில்
என் காலத்தைச் சுழற்றி
இறங்கிப் போய்விட்டாள்
அவளான இவள்…!
சிற்றொலி

நிகழ்ந்தவைகளின் சிறகுகள்
உதிர்ந்து நிறைந்த
உள்ளப் பாதாளத்தை
கிளறி எடுக்கையில்
சிரிப்பொன்றின் சிற்றொலிக்
கிடைக்காமலா போய்விடும்…?
மௌன முடிச்சு

மௌன முடிச்சுகளை
யார் அவிழ்ப்பது
நீயா…? நானா…?
பொறுப்பின்றியே…
ஒதுங்கிக் கடக்கும் நேரத்தை
தடுத்து நிறுத்த வழியின்றி
மிதப்பில் கிடக்கும் மனத்தினை
என்னதான் செய்ய …?
கனகா பாலன்

