பறத்தல்
**************
1) வெளிச்சத்துக்கு பேய் பிடித்து விட்டது
திடீரென உள்ளே நுழைந்த வெளிச்சம்
அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த
என் மீது பரவியது
நான் திடுக்கிட்டுவிட்டேன்
போர்வையை விலக்கி விட்டு என் முகத்துவாரங்களில் கண்ணாடி வண்டுகளாக உள்நுழைந்தது
நல்லவேளையாக
என் போர்வைக்குள் பதுங்கி இருந்த இருட்டு
சரேலென வெளியே பாய்ந்து வெளிச்சத்தின் மென்னியை பிடித்துப் புரண்டது
நான் தப்பித்து வெளியே ஓடிவந்தேன்
புஙகை மரத்தடியில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்த இருள் கூட்டம்
தபதபவென ஒடிவந்து எனை அணைத்துக் கொண்டன
வெகுநேரம் எனக்கு படபடப்பு குறையவில்லை
2) என் தந்தை ஊரில் மதிப்புமிக்க ஒரு பறவை
என் தாய் எனக்காக இரைதேடி கொண்டுவருவாள்
பறக்கக்கற்று நான் வானேகும் போது கூடப்பறந்து வந்த என் தாய் சொன்னாள்
மகனே இந்த வானம் நமக்காக படைக்கப்பட்ட மலர்
இதனுடைய எல்லையின்மையின் இதழ்மீது நீ தவழ்ந்து செல்வாய்
எதையும் சொந்தமாக்கிக் கொள்ள நினையாதபோது
எல்லாமே நமக்கு சொந்தந்தான்
நீ எங்கு பறந்தாலும் வானத்தின் பிரியம் உன்னை பின் தொடரும் என
சொல்லிவிட்டு தாய்ப்பறவை வழிமாறிவிட்டது
நான் தன்னந்தனியாக பறந்து அடுத்த பிறவி வரை வந்துவிட்டேன்
3) குலாப் ஜாமூன்
**********************
என்னை நானே காதலிக்க தொடங்கியதிலிருந்துதான் இப்படி எல்லாம் நடக்கிறது
என்னுடைய உடைகளை அவிழ்க்கும் போது
எனக்கே கூச்சமாக இருக்கிறது
என்னுடன் நானே தயங்கித் தயங்கி பேசுகிறேன்
என்னுடைய கற்பனைகளை ரகசிய இடங்களில் முத்தமிடுகிறேன்
எனக்கு நான் எழுதிய காதல் கடிதத்தை
எனக்கு கூட காட்டாமல் நானே மறைத்து வைத்துக் கொள்கிறேன்
எனக்கும் எனக்குமிடையில் தூதாக நானே போக வேண்டி இருக்கிறது
என் நுனி நாக்கில் குலாப் ஜாமூன் போல சுழன்று கொண்டிருக்கும் பூமி நழுவி நழுவி என் நாக்கிலேயே விழுகிறது
4) கண்ணாமூச்சி
**********************
ஒளிந்து கொள்ள இடம் தேடுகிறான்
எவரின்
பார்வையின் கூர்மையிலோ
பாசத்தின் திவலையிலோ
தன் மிதப்பிலோ
தாபத்தின் பசப்பிலோ
எங்கும் வசதியாக ஒளிய முடியவில்லை
எங்கெல்லாம் தேடி
கனவின் ஒளி திரண்டு கதகதப்புடனும் இருக்கும்
அவள் மார்பின் இடைவெளியில் மறைந்து கொண்டான்
புற்றுநோயால் அகற்றப்பட்ட அவளது
மார்புகள் மெல்ல அவன் கன்னங்களை வருடிக் கொடுத்தது
அன்பின் புகலிடங்கள் எப்போதும் அரூபமானவை
5) இரண்டு நீர்த்துளிகள்
ஒரு கம்பியில்
அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தன
குளிர் கொஞ்சம் அதிகம் என்றபடி
அருகருகே நெருங்கி அமர்ந்தன
அதேதான் நீங்கள் நினைப்பது சரிதான்
இரண்டும் புணர்ந்து கொண்டன
இனி அவற்றை இரண்டாக பிரிக்க முடியாது
மூலக்கூறுகளால் பிணைந்த இரண்டு சதைத் துளிகள்
மிகையுணர்வில் துடிப்பது போல்
அது துடிக்கிறது
மேலும்
அது திரண்டு விழுப்போவது
காலமற்ற வெளி என்பதால்
அது ஒருபோதும் பூமியைத் தொடாது
– கார்த்திக் திலகன்