*வட்டார மொழிநடை
தமிழ் மொழி பேச்சு வழக்கில் இடம் சார்ந்து அல்லது சமூகம் சார்ந்து அல்லது தொழில் சார்ந்து வட்டார மொழி வழக்குகளாக உள்ளன.
தமிழ்நாட்டில் வட்டார வழக்குகள் பல இருப்பினும், “மதுரை, நெல்லை, குமரி மற்றும் சென்னை ” வட்டார வழக்குகள் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
மக்களின் வாழ்வியலை உடல் மொழியாலும், பேச்சு மொழியாலும் ஓரளவு அவர்களின் வட்டார மொழியை புரிந்து கொள்ள முடியும். ஆனால் எழுத்தின் வழி அவர்களின் மொழியை புரிந்துகொள்ளுதல் அவ்வளவு எளிதல்ல.
மதுரைத் தமிழைக் குடித்து வளர்ந்து வந்த எனக்கு சென்னைத் தமிழ் கொச்சைத் தன்மையாக இருப்பதாக, பெருங்களத்தூரில் நானிருந்த ஆரம்ப காலத்தில் உணர்ந்தேன். பின்னர் மக்களின் வார்த்தைகளின் வழி கசியும் அன்பின் சொற்களை மெல்ல மெல்ல உட்கிரகித்து இதயத்துள் சேமித்து வைத்தேன்.
அந்த சேமிப்பு தற்போது கரன் கார்க்கியின் கறுப்பர் நகரம் நூலைப் படிப்பதற்கு உதவியாக இருந்திருக்கிறது. ஆம். கறுப்பர் நகரத்து மக்களின் வாழ்வியல் மொழியை புரிந்துகொள்ள அன்று நான் காதுற்றது இன்று கண்ணுற்று படிக்க உதவிற்று.
*ஆராயி என்னும் கருப்பட்டி
ஆராயி… இந்த ஒற்றை பேரை எத்தனை முறை உச்சரித்து விடுகிறோம் செங்கேணியும் நாமும். அவன் நினைவுகளிலும் கனவுகளிலும் அந்த ஒற்றைப் பெயர், அவன் காற்றிலும் இதயத் துடிப்பிலும் கலந்து எந்நேரமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அந்த பெயரில் அவனுடைய அம்மாவின் ஆன்மா கரைந்திருக்கிறது மட்டுமல்லாது அவனுடைய ஆன்மாவும் கலந்திருக்கிறது. இருண்டு போன அவன் உலகிலும் கடைசி வரை ஒலித்துக் கொண்டிருக்கும் ஒற்றை நாதமாய் அது இசைக்கிறது.
செங்கேணியின் வாயிலாக அந்த கருப்பட்டி அழகியை கரன் கார்க்கி, வார்த்தை கவிகளால் வர்ணிக்கும் அழகை படிக்கையிலே, அப்பேர்ப்பட்ட ஒருத்தியை தேட துடிக்கிறது மனம்.

*சினிமாவிலும் ஒலிக்கும் பெயர்
எந்த ஒரு படைப்பு இலக்கியத்தையும் படிக்கும் வாசகர்கள் அந்த படைப்பில் தனக்கு பிடித்தமான அல்லது பாதித்த கதாபாத்திரத்தை தன்னுடைய படைப்புகளில் பயன்படுத்த விரும்புவர்.
உதாரணமாக இயக்குநர் பாலா ல.சா.ரா.வின் “அபிதா” நாவலின் மீதான தாக்கத்தால் அந்த நாவலின் கதாநாயகி அபித குசலாம்பாளை தன்னுடைய “சேது” படத்தின் நாயகிக்கு பயன்படுத்திருப்பார்.
அதேபோல், இயக்குநர் கீரா தன்னுடைய “எட்டுத்திக்கும் பற” திரைப்படத்தில் “கறுப்பர் நகரம்” நூலின் தாக்கத்தாலோ என்னவோ கருப்பட்டி அழகியான ஆராயி பெயரை தன்னுடைய கதாபாத்திரத்திற்கு இட்டு அழகு பார்த்துள்ளார்.
வெள்ளயர் நகரம் – கறுப்பர் நகரம் – நன்றி Dinamani*விளிம்புநிலை மக்களின் வாழ்வியல்
ஆண்டைகளின் அட்டூழியங்களை தனி ஒருத்தியாய் எதிர்கொண்டு தன்னையே அழித்துக் கொள்ளும் செங்கேணியின் அம்மா.
உரிமைக்காக குரல் கொடுத்து மாய்ந்து போகும் பாளையத்தின் அப்பா. ஊரே எதிர்த்த போதும் எதிர்க்குரல் கொடுக்கும் அவனின் உடன்பிறந்தோன். மக்களின் அறியாமை இருளை அகற்ற கல்வியே விளக்கு என போதிக்க ஆவண செய்யும் பாளையம்.
இளம் வயதில் கல்லாமையால் பல்வேறு இடங்களில் அவமானப்படுவதும், கற்பதற்கு வயது ஒன்றும் தேவை இல்லை என்பதை உணர்ந்து கற்க முற்படுவதும், எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல்காரனும், அன்பிற்கு ஏங்குபவனுமான செங்கேணி.
இவை போன்று விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை கார்க்கியின் எழுத்தின் வழி உணர்கையில் நெஞ்சம் நனைகிறது.
கார்க்கி சொல்வது போல இந்தப் புதினம் யாரைப்பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்…
ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால் இந்தப் புதினம் *கறுப்பர் நகரத்து கறுப்பு சரிதம்*…
பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் இந்நூலின் விலை. ரூ. 200
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/karuppar-nagaram-2331/
பேரன்புடன்
தினேஷ் பாரதி

