கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம்.
வெள்ளையனே வெளியேறு என்று முழங்கிய சங்கு
“பைந்தமிழ்த் தேர்ப்பாகன். அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந் நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு; நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா; காடு கமழும் கற்பூரச் சொற்கோ; கற்பனை ஊற்றாம் கதையின் புதையல் திறம் பாட வந்த மறவன்; புதிய அறம் பாட வந்த அறிஞன்; நாட்டிற் படரும் சாதிப் படைக்கு மருந்து! மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்; அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்; என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்’ தமிழால், பாரதி தகுதி பெற்றதும் தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்”
என்று பாரதியை யாரென்று உலகிற்கு தன் பாவினால் சிறப்பித்துக் காட்டியவர் நம் பாவேந்தர் பாரதிதாசன். தான் வாழும் காலத்தில் பாரதியை நாம் கொண்டாடிய விதத்தை நாமே அறிவோம். நீடு துயில் நீக்க வந்த நிலவே மீளாத்துயில் கொண்ட போது, அவர் தம் கவிமரபை, எண்ணங்களை, கனவுகளை அணையாமல் காத்து, மேலும் செம்மைப்படுத்தி தமிழும், தமிழரும் வாழ வழி செய்த கவிப்பரம்பரையொன்று இருந்தது. தமிழ் எனும் பெருவானில் உலவித் திரிந்த விண்மீன்கள்! தனித்தன்மைப் போற்றி மக்கள் நலனுக்காய் பாடிய கவிக்குயில்கள்.
டிக்கெட் கவுண்டர் வழிய வழிய இருகால்களும் வலிக்க வலிக்க ஒரு வார உழைப்பை மூன்று மணி நேரப் பொழுதுபோக்கு திரைக்காக செலவழித்து தலைமைப் பண்பில்லாதவர்களை கதாநாயகர்களாக, தலைவர்களாக வரித்துக் கொண்டுச் சண்டையிடும் நமக்காய் உரிமைக் குரலை அன்றே எழுப்பிய கவிமீன்கள். இவர்களே நம் உண்மையான சூப்பர் ஸ்டார்கள். நீங்கள் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்.
பொதுநலன் வேண்டி முற்போக்குக் கருத்துக்களை மையாக்கி மக்களோடு மக்களாக வாழ்ந்து மறைந்தப் பாவலர்களை இருக்கும் போதே மறந்தோம். இப்போது எப்படி அவர்கள் நம் நினைவில் நிற்பார்கள்?
உருப்பெருக்கி எடுத்துக் கொள்ளுங்கள். நூறாண்டு கண்ட விடுதலைக் குயிலின் கவியொன்றை காணப் போகிறோம். விடுதலைக் குரல் எழுப்பி நம் உணர்வுகளை எழுப்பிய வீரக்கவிஞர்
தமிழ் ஒளி!!
வெள்ளையனே வெளியேறு!
“வெள்ளையனே வெளியேறு! இருநூறாண்டு வேட்டையிலே கிடைத்ததெல்லாம் சுருட்டிக் கொண்டாய்!”
என்றே ஆரம்பிக்கிறார் இக்கவிதையை.. 1947 ஏப்ரலில் இந்திய விடுதலைக்கு முன்பாகவே கவிதையின் முதல் அடியிலேயே வெள்ளையனின் தலையில் குட்டுகிறார்.
இந்திய விடுதலையின் வேட்கைத்தீ நாடெங்கும் பற்றி எரிய தம் சொற்களைக் கங்குகளாக்கி காற்றில் பறக்க விடுகிறார்,
” இங்கென்ன உன்அப்பன் சொத்தா உண்டு?
எங்களுடைய நாடாள நீயார் தம்பி?
நங்கூரம் தூக்கிவிடு கொள்ளைக் கப்பல்
நகரட்டும் உன் சிறிய தீவு நோக்கி!”
பரங்கியனின் தன்மானத்தைத் தகர்த்து அவன் முகம் நோக்கி விரல் சுட்டி நீ வெள்ளையன் மட்டுமல்ல எம் நாட்டைச் சூறையாடியக் கொள்ளையன் என்று அச்சமின்றி அவனைச் சாடுகிறார்.
இங்கிலாந்து வம்சம் நமக்கு இம்சையாய் நீடிக்க அவர்தம் காலனி நாடாய் நாம் துயருற ஆங்கிலக் காலணிகளுக்கு காவலும், ஏவலும் புரிந்து உண்டுக் கொழுத்தக் கூட்டத்திற்கு சொற்களால் சவுக்கடிக் கொடுக்கிறார்,
‘தந்திரத்தைக் கையாண்டு பிற்போக்காளர்
தயவினிலே அரசியலை நிர்ணயிக்க
முந்துகிறாய்! முதுகுத்தோல் ஊறும் போது
முதலடியில் நகர்வாயா? முதலாளித்துவ சந்தையினை ‘அரசியல்சீர் நிர்ணயிக்கும் சபை’ யென்றால் நம்புவதார் யோசித்தாயா?’
விடுதலைக் குறித்தும், நாட்டின் நலனுக்கு எதிரானப் புல்லுருவிகளின் மனப்பாங்கைக் குறித்தும் அவரின் புரிதலை மேற்கண்ட வரிகளே நமக்கு அறிவிக்கின்றன.
‘அஞ்சிடுவோம் என நினைத்தா சுட்டுக் கொன்றே
அடக்குமுறை நடத்துகிறாய்’ என்று வெகுண்டெழுந்து ‘கொடுமையினை எதிர்ப்பதொன்றே வேலையெனக் கொள்கின்ற வீரர் காலில் மிகஎளிதில் பகைவர்தலை வீழுமன்றோ?’ என்று வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கும், அவர்களின் பின் நின்ற கொள்ளை ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக அறைகூவல் விடுக்கிறார்.
இறுதியாய், உறுதியாய் இப்படியே முடிக்கிறார் கவிதையை ‘ஆங்கிலேய துருப்பிடித்த ஏகாதிபத்தியத்தின் சுரண்டுதலை, உள்நாட்டு முதலாளித்துவ
கருங்காலிக் கூட்டத்தை ஒழிப்போமென்றே கங்கணத்தைக் கட்டுகிறோம்! முழங்கு சங்கே! ‘
நாடெங்கும் விடுதலை வேண்டி மக்களின் போராட்டம். இந்தியர்களை விலங்குகளாக நடத்திய வெள்ளைக் கூட்டத்திற்கு எதிராக கவியிசைத்துப் பாடி மக்களின் போராட்டத்தை மங்காமல் வழிநடத்திய கவிஞர் தமிழ் ஒளி அன்றோ தமிழரின் பேரொளி வீசும் விண்மீன்!!!
– எஸ்தர் ராணி
தொடங்கிற்று கவிஞர்
தமிழ் ஒளி நூற்றாண்டு கொண்டாட்டங்கள். முதலில் தொடர் கட்டுரைகள்…
அடுத்தது 🚩 சுதந்திரம்