கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடர் கட்டுரை – 3
கூட்டாஞ்சோறு அரங்கு – தமுஎகச, தென்சென்னை மாவட்டம்.
தமிழ்ஒளியின் கனவு
28/8/1963
லிங்கன் நினைவிடம்
வாஷிங்டன்.
அங்குக் குழுமியிருந்த மக்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சம். உலகம் தன் அத்தனைக் கண்களாலும் பார்த்துக் கொண்டிருந்தது. அன்று அமெரிக்காவில் கறுப்புச் சூரியன், கறுப்பு நிலவு. தென்பட்ட இடமெல்லாம் கறுப்பின மக்கள்.. ஏறக்குறைய ஐம்பதாயிரம் வெள்ளை நிறத்தினர் அவர்களிடையே… கலகம் விளைவிக்க அல்ல; லிங்கனின் விடுதலைப் பிரகடனத்தை ஏற்றவர்களாய் அவர்களுக்கு உறுதுணையாக மார்டின் லூதர் கிங் ஜூனியரின் உரையைக் கேட்க வந்திருந்தார்கள். சரித்திரம் வாய் பேசுமானால் தன் கண்ணீரால் நனைந்த அந்த உரையைச் சொல்லும் “எனக்கொரு கனவு இருக்கிறது!”
வந்த விடுதலை யாருக்கடா ? என்றொரு கவிதையை எழுத வேண்டிய அவசியம் ஏன் கவிஞர் தமிழ்ஒளிக்கு நேர்ந்தது? நேற்றைய , நேற்றையக் கவிதை என்று வாசலில் இருக்கும் செருப்பை மாட்டிக்கொண்டு நாம் கையசைத்து விடை பெற முடியாது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தரணியெங்கும் விடுதலை வேண்டி சம உரிமை கோரி நடந்த போராட்டங்கள் தான் எத்தனை எத்தனை! காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் இரண்டாம் உலகப் போர் செய்த விளைவுகளின் இன்றியமையாத பங்கை நாம் மறக்கக் கூடாது. எது விடுதலை ஏன் விடுதலை என்றெல்லாம் தெரியாத நிலையிலும் வெள்ளையனை வெளியேற்றத் துடித்தவர்கள் அநேகர். ஆனால் நம் தமிழ்ஒளிக்கோ வெள்ளையனைத் துரத்துவது வெறும் ஆட்சி மாற்றம் என்று நன்கு தெரிந்திருந்தது. உண்மையான மக்களின் விடுதலை எது என்று 1947 லேயே ” வந்த விடுதலை யாருக்கடா? ” என்று எழுதி விட்டார். கறுப்பின மக்களுக்காய் வாழ்ந்து மறைந்த லூதர் கிங் ஜூனியரின் எனக்கொரு கனவு இருக்கிறது என்ற உரைக்கும் நம் கவிஞர் தமிழ்ஒளியின் கனவுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே வயிறு :
எங்களுக்கும் உங்களுக்கும் ஒரே இரத்தம் மட்டுமில்லை; உங்களைப் போலவே ஏன் உங்களை விட அதிகமாகவே எங்கள் வயிறுகள் பசி ஓலமிடும். ஏனெனில் நாங்கள் பாட்டாளிகள்.
“ஏழையின் துன்பங்கள் மாறவில்லை”
” பட்டினி என்னும் சொல் ஓடவில்லை – பிச்சைப்
பட்டாளத்தின் துயர் நீங்கவில்லை – இங்கு
வட்டிக் கடைக்காரன் வாழுகிறான் – எனில்
வந்த விடுதலை யாருக்கடா?”
இன்று இந்த நாட்டில் வட்டிக் கடைக்காரர்கள் கார்ப்பரேட்டுகளாய் பதவி உயர்வும், அரசு அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்கள். வந்த விடுதலை யாருக்கு? நாம் சிந்திய இரத்தம் யாருக்கு?
மக்களை ஏய்க்கும் மதவெறியர்கள்:
மதம் ஒரு அபின் – மார்க்ஸ்.
அபினை அதிகமான அளவில் எடுத்துக் கொண்டால் என்னவாகும். எனவே தான் முன்னுணர்ந்து சொன்னார் தமிழ்ஒளி
” மத ஏடுகள் இன்னும் மாயவில்லை”
” சாமி திருவிழா ஓயவில்லை – மடத்
தம்பிரான் செல்வாக்கு மாயவில்லை – கலைப்
பூமியிலே ஒளி பாயவில்லை – வெறும்
பொட்டல் விடுதலை யாருக்கடா?”
தோழர்களே! அனைத்து மதங்களின் மடத் தம்பிரான்களின் பிடியிலிருந்து நாம் எப்போது விடுதலை ஆவோம்?
பொருளில்லார்க்கு அருள் ஏன் இல்லை? :
இரண்டாம் உலகப் போரின் முடிவில் தன் காலனிக் கடையைக் காலி செய்ய ஆரம்பித்தது இங்கிலாந்து. உலகத்தின் கால்வாசிப் பகுதியை தன் காலடியில் வைத்துக் கொண்டு காலனி நாடுகளை சுரண்டியே மிடுக்காய் திரிந்தவர்கள் ஆடிப் போனார்கள். கட்டிய கல்லா முழுமையாகத் தீர்ந்து விடும் என்றெண்ணி அல்லவா அவர்களின் கப்பலைக் கிளப்பினார்கள்.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாயிற்று. விடுதலைக் கொடி விண்ணில். இந்திய இறையாண்மையைக் கட்டமைக்க ஆரம்பித்தோம். ஆனால் உழைக்கும் வர்க்கம் ஏன் எலும்புக் கூடாய் இருக்கிறது? பொருளாதார வளர்ச்சி ஒரு சாராரை உயர்த்த நம் மக்கள் ஏன் இன்னும் பொருளாதாரத் தன்னிறைவு இன்றித் தவிக்கிறார்கள்? எனவேதான் முதலாளிகளையும், அவர்களுக்கு சேவகம் புரியும் ஆட்சியாளர்களையும் கேள்விகளால் துளைக்கிறார்.
” வெள்ளையன் ஓடும் நேரத்திலே – அவன்
விட்டுச் செல்லும் ஆட்சி மேடையிலே – பின்
கொள்ளைக் கடைக்காரர் ஏறுகிறார் – இந்தக்
குருட்டு விடுதலை யாருக்கடா?”
“பஞ்சைத் தொழிலாளர் ஓங்கவில்லை – அவர்
பார்வையில் சோகமும் நீங்கவில்லை – தமிழ்
நெஞ்சந் துடிக்குது நீதியில்லை – எனில்
நேர்ந்த விடுதலை யாருக்கடா?”
” பணப் பேழைகள் கையினில் ஆதிக்கமாம் – எனில்
பேசும் விடுதலை யாருக்கடா?”
லூதரும், தமிழ்ஒளியும் :
லூதர் கிங் ஜூனியருக்கும் தமிழ்ஒளிக்கும் மக்களின் விடுதலை, நல்வாழ்வில் பல ஒத்தக் கருத்துக்கள் உள்ளன. இருவரும் சம உரிமை, சம வாய்ப்பு, சம நீதி, சகோதரத்துவம், வறுமை ஒழிப்பு, ஆட்சி மாற்றம், எல்லாருக்கும் கல்வி என்ற கொள்கைகளில் நம்பிக்கை வைத்துப் போராடியவர்கள்.
” பொதுவில் உடைமை ஆகிடவும் – பணப்
பூதங்கள் ஆட்சியும் ஏகிடவும் – இருள்
மதங்கள் எலாம்ஓடி பட்டிடவும் – எழில்
வாய்ந்த விடுதலை வேண்டுமடா!
எல்லாரும் செந்தமிழ் கற்றிடவும் – இந்தி
இங்கு நுழையாமல் எற்றிடவும் – பொருள்
இல்லாமை இல்லாமற் செய்திடவும் – நமக்
கேற்ற விடுதலை வேண்டுமடா!”
லூதருக்கும் தமிழ்ஒளிக்கும் இருக்கும் ஆகப் பெரிய வேறுபாடு மத நம்பிக்கையே. லூதர் கடவுளை நம்பினார். நம் தமிழ்ஒளியோ பொதுவுடைமைத் தத்துவத்தை நம்பி ஏற்றுக் கொண்டார்.
குருட்டு விடுதலை யாருக்கடா? :
மக்கள் யாவரும் சமமாய் சுதந்திரமாய் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சமநீதியோடு வாழ இயலாது என்றால் இது குருட்டு விடுதலை அல்லவா? என்று கேட்கும் தமிழ்ஒளி புது சமூகம் அமைக்கச் சொல்கிறார்.
அமெரிக்கக் கறுப்பின விடுதலைக் கவிஞர் லாங்ஸ்டன் ஹியூஸின் அழைப்பைக் கேளுங்கள் தோழர்களே!
நான் உலகத்தைப் பார்க்கிறேன்
– லாங்ஸ்டன் ஹியூஸ்
நான் உலகத்தைப் பார்க்கிறேன்
கருப்பு முகத்தில் விழித்தெழுந்த கண்களிலிருந்து
மேலும் நான் பார்ப்பது இதுதான்:
இந்த வேலியடைக்கப்பட்ட குறுகிய இடம்
எனக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நான் வேடிக்கையான சுவர்களைப் பார்க்கிறேன்
இருண்ட முகத்திலிருக்கும் இருண்ட கண்கள் வழியாக –
மேலும் எனக்குத் தெரிந்தது இதுதான்:
இந்த சுவர்கள் அனைத்தும்
அடக்குமுறையை உருவாக்குகின்றன
இவை போக வேண்டும்!
நான் என் சொந்த உடலையே பார்க்கிறேன்
கண்கள் குருடாக இல்லாமல் –
மேலும் மனதில் இருக்கும் உலகத்தை
என் கைகளால் செய்ய முடியும்
என்பதை நான் காண்கிறேன்.
சீக்கிரம் வாருங்கள் தோழர்களே
பாதையைக் கண்டுபிடிக்க …
இருண்ட உலகும், பார்வையற்ற விழிகளும் நம்மை விட்டகல தமிழ்ஒளியின் கனவை நனவாக்குவோம்.
“கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்!”
– எஸ்தர் ராணி
அடுத்தது🚩கழைக்கூத்தாடி