
kavithai : aarthezhu thozhane ! - kovi.baala.murugu கவிதை : ஆர்த்தெழு தோழனே! - கோவி.பால.முருகு
மண்ணை ஆய்வுசெய்!மாத்திறம் காட்டு!
விண்ணை வசமாக்கு! விரித்திடு உலகை!
எல்லாப் பொருளையும் மக்களுக் காக்கிடு!
பட்டினிச் சாவைப் பாரினில் போக்கு!
உழைப்போர் உலகை உயர்த்து தோழா!
சாதிச் சண்டை,சமய மோதல்
மேதினி மீதினி மேவா வழிசெய்!
ஆதி நாள்முதல் அன்பில் திளைத்த
நீதி நிலைத்திட நீநட நண்பனே!
எளியோன் தோளில் ஏறி அமர்வதும்
வலியோன் காலில் வணங்கிக் கிடப்பதும்
ஆண்டான் அடிமை ஆதிக்க சக்தி
அறவே அழித்திட ஆத்திரம் கொள்க!
உலகம் பொதுவென ஓங்கி உரைப்பாய்!
உலுத்தப் பழங்கதை உதவா என்றுரை
அன்பால் பண்பால் அவனியை ஆக்கு!
அணைத்திடு மக்களை ஆர்த்தெழு தோழனே!