பாரத்மாதாகி ஜெ.. கோஷம்
கேட்கும் போதெல்லாம்
பயமவளுக்கு
என்ன செய்யலாம்
எங்கு செல்லாம்
எப்படித் தப்பிக்கலாம் -அல்லது
யாரை உதவிக்கு அழைக்கலாம்
பாஞ்சாலிக்கு ஆடை கொடுத்த
கிருஷ்ணனை அழைத்தால் உதவுவனா?
இல்லை அவனொரு கோழை
துகில் உரிந்தவன் கையை
துண்டிக்கத் தெரியாத
துணிவற்ற கோழை.
அவனும் அவதாரமெடுத்த
அம்மணப் பித்தன்தான்.
அயோத்தி ராமனை அழைக்கலாமா?
அய்யோ.. அவனும் வேண்டாம்.
கற்பை காலிடுக்கில் தேடுவான்
என்னையே தீக்குளிக்கச் சொல்லிச் சோதிப்பான்.
வேறு நாட்டுக்குச் செல்லலாமா?
இல்லை
வேறு கிரகத்திற்கு செல்லலாமா?
வேண்டாம்.
பாரதமாதா ஓடிப்போய் விட்டாளென்று
ஓடுகாலி பட்டம் கட்டுவார்கள்.
தற்கொலை செய்து கொள்ளலாம்
எப்படிச் சாவது?
விஷம் குடித்துச் சாகலாம் -ஆனால்
விஷமிகள் அசைவற்ற சதைகளையும்
ஆசைக்கு அழைப்பார்களே..
தூக்கிட்டுச் சாகலாம் – ஆனால்
தூக்கிட்ட பின்பும் துகிலுரிவார்களே..
வேண்டாம்.
மூச்சு நின்ற பின்னும்
முலையும் யோனியும்
தேடும் தேக வெறியர்களாயிற்றே
அவர்கள்.
என்ன செய்வது
அறுத்து எரிந்து விடலாம்?.