பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்

பெண்(பேராண்)மை கவிதை – பிரியா ஜெயகாந்த்




நிஜத்தினில் சாதித்தேன்
நீ என்
கனவினைக் கலைத்ததால் !

கலைகளில் தேர்ந்தேன்
நீ எனைக்
காலடியில் கிடத்தியதால் !

உரிமைக்குரல் எழுப்பினேன்
நீ என்
உணர்வை உதாசீனப் படுத்தியதால் !

நிமிர்ந்து நின்றேன்
நீ எனை
நிலம் பார்க்கச் சொன்னதால் !

பேச்சாளரானேன்
நீ எனை
மௌனிக்கச் செய்ததால் !

உயர்கல்வி பயின்றேன்
நீ எனை
அடுக்களையில் அடைத்ததால் !

மேடை ஏறினேன்
நீ எனைப்
படியேற விடாததால் !

முன்னேற்றம் அடைந்தேன்
நீ எனைப்
பின்னுக்குத் தள்ளியதால் !

தன்னம்பிக்கை கொண்டேன்
நீ எனைத்
தனித்து விட்டதால் !

தைரியம் கொண்டேன்
நீ எனைத்
தாழ்த்த நினைத்ததால் !

பன்முகத்தன்மை கொண்டேன்
நீ என்
முகவரியை மறைத்ததால் !

சிகரம் தொட துணிந்தேன்
நீ என்
சிறகை ஒடித்ததால் !

சரித்திரம் படைத்தேன்
நீ எனைச்
சதி ஏற்ற துணிந்ததால் !

பேராண்மை கொண்டேன்
நீ என்
பெண்மையைப் பழித்ததால் !

நீ எனை
வார்த்தை உளிகளால்
சிதைக்கச் சிதைக்கச்
சிற்பமானேன்.

பிரியா ஜெயகாந்த்,
சென்னை,
மின்னஞ்சல்: [email protected]

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 4 Comments

4 Comments

  1. Neya Puthuraja

    அருமையான வரிகள்…எத்தனை இடர்களுக்கு மத்தியிலும் நம்மை நானே செதுக்கிக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும் என்பதை அழகிய வரிகளில் கூறியுள்ளது சிறப்பு தோழர்… வாழ்த்துகள்💐💐💐💐

  2. Jayasree

    சிறப்பான வரிகள். உண்மையில் பெண்மைக்குள் இருக்கும் பேராண்மை வெளிப்படுகிறது உங்கள் வரிகளில் வாழ்த்துக்கள்

  3. Muthuraman

    எழுச்சி வரிகள், பெண்மை வீரு கொண்டு எழும் வரிகள், வாழ்த்துகள் தோழர்.

  4. Viji

    Super
    Ella penkalukkum intha
    Varikal vazhikaati.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *