நத்தை உணர்ச்சி
**********************
மாடு பிடித்து வருகையில்
எண்ணெய் தடவி
படிய வாரிய தலையில்
அழகு உணர்ச்சியும்

பட்டாம் பூச்சியின் கவனம் போல்
தோசை சட்டியை
கவனமாக கையாளும் போதும்

கேரட்டை முயல் கடிக்கும் சப்தத்தில்
ஸ்கூட்டர் ஓட்டும் பொழுதும்

பேசிக் கொண்டிருக்கையில்
காலின் பெரு விரலை
நாணத்தால் மடக்கும் பொழுது
உண்மையில்
ஆமைக்கும் நத்தைக்கும்தான்
போட்டியோ என
எண்ணத் தோன்றுவதும்

பெண்ணே
உன் அறிவு உணர்ச்சியை
வியக்கிறேன்

புத்தயாயணம்
******************
புத்தனே
உன் சொற்களில்
இசை இல்லை
நீரோடையின் ஓசை இருக்கிறது
லயம் இருக்கிறது

உன் சொற்களில்
எதுகை மோனை இல்லை
கவிதை இருக்கிறது

உன் சொற்களில்
ஓவியம் இல்லை
பூ பூத்த வண்ணம் இருக்கிறது

உன் சொற்களில்
வனம் இல்லை
இளைப்பாறுதல் இருக்கிறது

உன் சொற்களில்
பறவை இல்லை
வானம் இருக்கிறது

உன் சொற்களில்
காதல் இல்லை
தன் நேசம் இருக்கிறது

க. புனிதன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *