இரவு வானத்தில்
நிறமற்ற தூரிகைகளால்
தங்களுக்கான வானவில்லை
அடர்ந்த கானகத்தில்
வரையத் தொடங்குகிறார்கள்
பழங்குடிகளின் குழந்தைகள்.
தார்ச்சாலையைப்போல்
தேகத்துக்கும் வாழ்வுக்குள்ளும்
பிணைந்திருக்கும்
ஒரே வண்ணத்தை
உடும்பின் தோலைப்போல்
உரிக்க முயல்கிறார்கள்
காயடிக்கப்பட்ட
மூதாதைகளின்
மூளையைப் பிளந்து
கானக அடங்கலில்
கல்வியின் குருத்து
முளைவிடத் தொடங்குகிறது.
நீலமும் வெயிலும்
நிறைத்த கூரையினடியில்
எதிர்கால விடியல்களை
உரத்து உச்சரிக்கிறார்கள்.
காட்டுக் கிழங்குகளின்
வேர்களின் ஆழத்தில் மரணித்த
கல்விக் கடவுளை உயிர்ப்பித்து
மண்சுவற்றின் மாடங்களில்
விளக்கென ஏற்றுகிறார்கள்
அரிதாய் சில ஆசிரியர்கள்.
இடிந்த பள்ளிக்கூடம் அகன்று
குட்டிச்சுவராக்கப்பட்ட
தலையெழுத்தை
மரத்தினடியிலிருந்து
மாற்றி எழுத முயல்கிறார்கள்.
பசி மேயும் வகுப்பறையில்
ஆசிரியரின் நிழலும்கூட
அவர்கள் இனி
கைப்பற்ற வேண்டிய
எதையோ போதிக்கிறது.
ஆசீர்வதிக்கப்படாத
நிலத்திலிருந்து எழும்
மழலைகளின் பாடச் சத்தங்கள்
சாபங்களாய் உறங்கும் மூதாதைகளின்
கல்லறைகளை சாந்தப்படுத்துகிறது.
பாதியாய் உடைந்து நிற்கும்
கரும்பலகைகள்
துயரத்தின் ரேகைகளை
பெற்றோர் கைகளிலிருந்து
நிரந்தரமாய்த் துடைக்கும்
சுண்ணாம்பு வனமாய் விரிகின்றன.
திறந்த வெளிகளில்
எழுத்தாணிகளால்
காலத்தை உழுது
கல்வியின் விதைகளை
நினைவுகளில் ஊன்றுகிறார்கள்.
தமக்கான சுகங்களை
உடைந்த நாற்காலியின்
அடியில் ஒளித்து
புதர் மறைவில் சிக்கியிருக்கும்
பூர்வகுடி பூக்களுக்கு
அறிவு திருத்தி
ஆரம்ப வகுப்பெடுக்கிறாள்
ஆசிரியை ஒருத்தி.
சொற்ப நேர வகுப்பு முடியும் வரை
காத்திருக்கும் வறுமை
மீண்டும் அவர்களை
தின்னத்தொடங்கலாம்
எனினும்
பசியை எரித்து அவர்கள்
படித்தாக வேண்டும்.
சந்துரு_ஆர்சி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

