கவிதை – கவிஞர் சிற்பி, கவிஞர் இந்திரன்
அவரவரும் அவசர அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குள் ஓர் அவஸ்தை. இது மனிதர்கள் படுகிற மரணாவஸ்தை!
“ஒவ்வொருவரும்
உள்ளுக்குள் ஒரு பிணத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள்
அதன் பெயர்
இதயம்!”
அடக்கம் செய்ய முடியாத அந்தப் பிணத்தை வைத்துக் கொண்டுதான் மனிதர்கள் அவஸ்தைப் படுகிறார்கள். அதை எரித்துவிட்டால் உலகம் எரிந்துவிடும். அதைப் புதைத்துவிட்டால் பூமி புழு பூத்துவிடும்.
போர்! மனிதர்களை அடிமையாக்க சில மனிதர்கள் கண்டுபிடித்த தந்திரமான வன்முறை. போரில் கொலைகள் அங்கீகரிக்கப்படுகின்றன; கொள்ளைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. பாலியல் வன்முறைகள் உப விளைவுகள்.
மூலதன பயங்கரவாதிகள் பிணவண்டிகளோடு அலைகிறார்கள். அவர்கள் வளர்க்கும் கழுகுகளுக்கு இரைபோடப் போரில்தான் பிணங்களைச் சேகரிக்கிறார்கள்.
போருக்கும் சர்வாதிகாரிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. சர்வாதிகாரம் போர்களை உருவாக்குகிறது. போர் சர்வாதிகாரிகளை பலசாலிகளாய் ஆக்குகிறது.
மனிதகுலத்தின் என்றென்றைக்குமான நிரந்தரக் கறைகளாய்… ஹிரோஷிமா…. நாகசாகி…இந்தக் கறைகளை உருவாக்கியது அமெரிக்கா என்று அனைவருக்கும் தெரியும்; அமெரிக்காவின் தலைமையிலான நாசகார கும்பலின் வேலை; இதற்கு மன்ஹாட்டன் திட்டம் என்று பெயர். 1945 ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி ஹிரோஷிமாவில் “சின்ன பையன்” அணுகுண்டு வீசப்பட்டது. மூன்று நாள் கழித்து 9 ஆம் தேதி நாகசாகியில் “குண்டு மனிதன்” அணுகுண்டு வீசப்பட்டது. அணுக்கதிர் வீச்சுக்களால் இன்றைக்கும் ஏற்படுகிற குறைப் பிரசவங்களும் நோய்க் கொடுமைகளும் மனிதர்களின் இதயங்களைப் பிறாண்டுபவை. அப்படிப் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ‘ஹிபாகுஷ்’கள் என்று அழைப்பார்கள்.
மனித சமூகத்திற்கு எல்லாம் மறந்து விடுகிறது. அரக்கர்களை மனிதர்கள் மறந்துவிடுகிறார்கள். அதனால்தான் மனிதகுலத்தின் மீது அரக்கத்தனம் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகிறது. உக்ரேனுக்கு ஆயுத உதவிகள் உள்பட செய்கிற அமெரிக்கா, இப்போது இஸ்ரேலுக்கும் ஆதரவு தருகிறது. காசா பகுதியில் ஹல் அக்லி என்கிற மருத்துவ மனை மீதும் இஸ்ரேலின் குண்டுவீச்சு!
அறம் வீழ்ந்து விட்டது.
ஹிட்லர் யூத மக்களை இலட்சக்கணக்கில் கொடுமையின் உச்சகட்டத்தில் கொன்றுகுவித்தான். அன்றைய ரஷ்ய நாடு ஹிட்லர் கொடுமைகளுக்கெல்லாம் முடிவு கட்டியது. மனிதகுலம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எஞ்சியிருந்த யூதர்கள் காப்பாற்றப்பட்டார்கள். இன்று அதே யூதர்கள் ஹிட்லர்களாக மாறிவிட்டார்கள். இதுதான் காலம் போடுகிற கறுப்புக் கோலம்.
பிஜித் தீவில் தமிழர்கள் கண்டு மனம் கொதித்த கவிதைப் பாரம்பரியம் தொடர்கிறது. தமிழ் மண்ணிலிருந்து பெருங்கவிஞர்கள் இருவர் தங்கள் குரல்களை வித்தியாசமான முறையில் பதிவு செய்திருக்கிறார்கள்.
“கவிதையானது கவிதை இன்பத்துடன் அதையும் கடந்து வாழ்க்கை மாறுதலையும் நமக்குத் தரவேண்டும்…. எந்த ஒரு சிறந்த கவிஞனும் அவன் பெரிய கவிஞனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி கவிதை இன்பத்தோடு வேறொன்றையும் அளிக்கிறான்….கவிஞனின் மக்களுக்கான கவிதையானது சமுதாயச் செய்லபாட்டைக் கொண்டுள்ளதை நம்புகிறேன்” என்று டி.எஸ். எலியட் கூறியதைப் போல குண்டு துளைத்த பூமியில் குரோட்டன்ஸ்கள் நடுகிறார்கள்.

கவிஞர் சிற்பி வானம்பாடியின் பெருமைமிகு குரலாய் ஒலித்த பெருங்கவி. அகம் மட்டுமே பாடுபொருளாய் இருந்த வேதாந்த சுய புலம்பல்களை மட்டுமே அங்கீகரித்த எழுத்து கால கவிதைகளுக்கு மாற்றாகப் புறத்தைக் கையிலெடுத்து சமூக அக்கறையிலிருந்து ஜனித்த வானம்பாடிக் கவிதைகளை வழங்கியவர்.
கவிஞர் இரண்டு காட்சிகளை மேலும் கீழுமாக வைக்கிறார். எந்தப் பிரச்சாரமும் செய்யவில்லை. (ஆனாலொன்று போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவில்லை என்றால், போருக்கு ஆதரவு தருகிறோம் என்றுதானே அர்த்தம்?). நாயின் மடியில் குரங்கு. குரங்கின் மடியில் பூனை. பூனையின் மடியில் புறா. ஒன்றையொன்று உண்ண வேண்டிய விலங்கினமோ நிம்மதியின் மடியாக ஒன்றுக்கு ஒன்று ஆதரவு தருகிறது. செய்தித்தாளிலிருந்த இந்தப் படத்திற்கு “அன்பெனும் பிடியுள்” என்கிற தலைப்பு அவரை ஏதோ செய்கிறது. இன்னொரு காட்சி தட்டுப்படுகிறது… மழலையர் பிணங்களை ஏந்திய அன்னையர்களின் அலறல்கள்….தலைப்பிடப்படாத செய்தி … ஆனால் தடுமாற வைக்கிற காட்சி… அமைதியாய்த் தலை கவிழ்கிறார்….உள்ளுக்குள் அவரது உணர்ச்சிகள் பெயர் வைக்கின்றன… “அரக்கரின் பிடியுள்” என்று இந்தப் படத்திற்குப் பெயர் கொடுக்கலாமா?” அவர் எந்தப் பிரச்சாரமும் செய்யவில்லை. ஆனால் இந்தக் கவிதை மனதைப் பிசைந்துவிடுகிறது.
“பத்திரிகையின்
ஒரு பக்கப்
புகைப் படத்தில்
நாயின் மடியில்
குரங்கு
குரங்கின் மடியில்
பூனை
பூனை மடியில்
புறா
படத்தின் தலைப்பு
“அன்பெனும் பிடியுள்”
இன்னொரு பக்கத்தில்
பாலைவனப் போர்க்களத்தில்
அன்னையர் ஏந்திய
மழலையர் பிணங்கள்
தலைப்பு இல்லாத படத்துக்கு
என்ன பெயரிடலாம் ?
“அரக்கரின் பிடியுள்”?

கவிஞர் இந்திரன் பரிசோதனைகளின் மீகாமன். ஆனாலிங்கு எந்தப் பரிசோதனையிலும் ஈடுபடவில்லை. போரின் சோதனையில் மனிதர்களின் மனதைப் பரிசோதனை செய்கிறார். குண்டுகள் விழுந்த பள்ளங்களில் சிதறிய இதயங்களைச் சேகரிக்கிறார். “எந்தவிதத்திலும் எனக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை… ஆனால் ஏன் துடிக்கிறது என் இதயம்?” இந்தக் கேள்விதான் ஒரு கவிதையைப் பதிலாய்த் தருகிறது.
ஒரு கவிஞனின் வேலை போரில் சதை பிய்ந்து, குருதி வழிந்து கிடக்கும் பூமியைப் புறக்கணித்துவிட்டு, ஆதிக்கவாதிகளின் ஆயுத வாசனையில் ஊதுபத்திகள் தயாரிப்பது அல்ல…குறைந்தபட்சம், மரணத்தின் விளிம்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் இறுதி மூச்சு விடுபவனின் கண்களை ஆதுரத்துடன் உயிருருக உயிருருக உள்ளங்கையால் மூடிவிடுவது….
போர் / இந்திரன்
————————–
குண்டு மழையில் எரியும் நகரம் எனதல்ல.
நெருப்புக்கு பயந்து நகரை விட்டு ஓடும்
கால்நடை கூட்டத்தில் என் பசு இல்லை.
கண்ணீரோடு வான் நோக்கி எழும் பிரார்த்தனைகள்
என் மொழியில் இல்லை.
ஆனாலும்
இறுகப் பற்றிய
புறாவின் இதயம் துடிப்பதை என் கையில் உணர்வது போல்
காசா நகரத்து மரண ஓலங்களில்
துடிக்கிறது என் இதயம்.