எல்லாமும் எல்லாரும் பெறவேண்டும்-வாழ்வில்
இல்லாமை இல்லாத நிலைவேண்டும்!
வல்லான் பொருள்குவிக்கும் தனியுடைமை-நீங்கி
வரவேண்டும் இந்நாட்டில் பொதுவுடைமை!
கண்ண தாசனைப் படிக்கவேண்டும்- மார்க்சின்
கல்விதானே அதைநீயும் பிடிக்கவேண்டும்!
ஒட்டுண்ணி யாயிருந்து முதலாளி-உழைப்போர்
உதிரத்தை உறிஞ்சுவதைப் போக்கவேண்டும்!
உலகமெலாம் போற்றுகின்ற மூலதனம்-மார்க்சின்
உதிரத்தால் எழுதிவைத்த அறிவுத்தானம்!
கலகலத்துப் போகச்செயும் முதலாளித்துவம்-அது
காட்டுகின்ற வர்க்கபேதத் தனித்தத்துவம்!
உலகத்தில் வர்க்கங்கள் இரண்டுவுண்டு-ஒன்று
உழைப்போரின் உயர்வான வர்க்கமாகும்!
அளவற்ற உழைப்பையே சுரண்டிவாழும்-அநியாய
ஆசைகொண்ட முதலாளி வர்க்கம்
மார்க்சியம் அயல்நாட்டு தத்துவமாம்-சில
மடையர்கள் பேசுவது அரைகுறையாம்!
ஆர்த்தெழும் உழைப்பாளி உள்ளவரை-உலகில்
அழியாது முதலாளித்துவம் ஒழியும்வரை!
மார்க்சியம் கற்று அறிந்திடுவாய்-அதை
மண்ணிலே விதைக்கப் புரிந்திடுவாய்!
போர்க்குணம் கொண்டே செயல்புரிவாய்-வர்க்க
போரிலே நீயும் தடம்பதிப்பாய்!

