Kavithai thamizha's Poems கவிதை தமிழனின் கவிதைகள்

கவிதை தமிழனின் கவிதைகள்




உழைப்பின் உயர்வை
உலகிற்கு உணர்த்தும்
உன்னதப் பேரினமே….!

உலகே வியந்து
உமக்காய் தந்தது,
இன்றைய மே தினமே….!

வியர்வை துளிகளின்
விலையை அறிந்தோர்
உமைபோல் எவருமில்லை…!

நேரம், நேர்மை
இரண்டையும் உணர்ந்தோர்
நீயின்றி எவருமில்லை…!

உடலை வருத்தி
ஓய்வை மறந்து
இயங்கும் உயர்பிறப்பே…!

உலகம் சுழல
உறவுகள் மகிழ
உழைக்கும் எம்மக்களே…!

உழையுங்கள் உயருங்கள்
உறவோடு மகிழுங்கள்….!
மேன்மைமிக்க உங்களுக்கு
மே தின வாழ்த்துக்கள்…!

**********************************************************
கல்லூரி வாழ்கைபோல இருந்ததில்லை எங்கும்…..!
கரையாத நினைவுகள் நெஞ்சின் ஓரமாய் தங்கும்….!
அரட்டைகள் அடித்துவிட்டு
நள்ளிரவே தூங்கும்….!
தருணங்கள் மீண்டும்வருமா என்றுமனம் ஏங்கும்….!

அதுபோல ஓர்நாளை
எதிர்நோக்கி காத்திருந்தேன்….!
ஆனாலும் இதுவரையில்
ஈடேற மறுக்கிறதே…..!
எங்கெங்கோ பிறந்திருந்தோம்,
நாமங்கே இணைந்திருந்தோம்…..!
நட்பென்ற ஓர்மொழியால்,
நகம்சதைபோல் பிணைந்திருந்தோம்…..!

அந்தநான்கு வருடங்கள்,
நினைவில்நீங்கா நிமிடங்கள்….!
இடையிடையே திருப்பங்கள்,
ஈடில்லா சொந்தங்கள்….!
எதிர்பாலின ஈர்ப்பியலால்,
மலர்ந்திருந்த காதல்கள்…..!
எதிர்கால இலக்கறியாது
கடந்துவிட்ட காலங்கள்…..!

எதிர்கால சிந்தனையில்லை,.
எதைப்பற்றியும் கவலையுமில்லை….!
குடும்பச்சுமை முதுகில்இல்லை,
கொடுத்துவைத்த வாழ்க்கையிதுவோ…!

பையில்பெரும் பணமுமில்லை,
எம்தலையில் கணமுமில்லை…..!
எதிர்கொண்ட இன்பமதற்கோ,
எல்லையும் இல்லவே இல்லை….!

************************************
மெய்போல பொய்யையும்
பாரெங்கும் பரப்பும்…!
ஒருபடத்தை பலகுழுவில்
பதிவிட்டு வருத்தும்…!
இவனாலே இளம்விழிகள்
இரவெங்கும் விழிக்கும்…!
நேரத்தின் மாண்பினையும்
நேர்த்தியாக அழிக்கும்…!

அப்டேட் செய்யச்சொல்லி
அவ்வப்போது வதைக்கும்…!
ஆண்ட்ராய்டு போன்களின்
ஆயுளையும் குறைக்கும்…!
நாம்தொலைத்த உறவுகளை
எளிதாக இணைக்கும்…!
நாள்முழுக்க நம்மோடு
பயணிக்க துடிக்கும்…!

காலத்தை விரயமாக்கும்
சதிகாரன் கண்டுபிடிப்பு…!
நண்பர்கள் கைகோர்க்கும்
அறிவியலின் அன்பளிப்பு…!
ஆயிரமாயிரம் தகவல்களின்
ஒட்டுமொத்த அணிவகுப்பு…!
அவ்வப்போது சலசலப்பு
அளவற்ற கலகலப்பு – அட
அதுதாங்க நம்ம வாட்ஸ்அப்பு…!

***************************************
ஆண்டவன் நேரில் வந்திட மாட்டான்…!
அதனால் அன்னையை அனுப்பிவைத்தான்.!
ஆனால் அவளோ,கடவுளை விஞ்சி
அன்பை பகிர்ந்தே, உயர்ந்து நின்றாள்..!

கேட்டது யாவையும், எம்மத இறைவனும்
உடனடியாகத் தருவதும் இல்லை..!
கேட்காமலே தந்திடுவாளே அவள் போல்
உலகில் எவருமே இல்லை…!

பிள்ளையின் சிறு வெற்றியைக்கூட,
சாதனை போலவள் மெச்சிடுவாளே….!
உதட்டில் நாளும் உச்சரித்தே
ஊரார் முன்பவள் உளமகிழ்வாளே…!

பிழையாய் அவளை ஒதுக்கி வைத்தாலும்
பிள்ளைகள் நம்மை வெறுத்திட மாட்டாள்…!
அன்பை நாமும் தர மறுத்தாலும்
அன்னை அவளோ, ஒதுங்கிட மாட்டாள்…!

கள்ளங் கபடம், இல்லா அன்பை
கடவுளர் கூட காட்டுவதில்லை..!
காசு கொடுத்த மாந்தருக்கே
கருவறை வரையில் தரிசனம் தருவார்…!

முந்நூறு நாட்கள் நம்மை சுமந்து
கருவறை தன்னில் இடமும் தந்து
வாழ்கிற வரையில், நம்மை நினைந்து
வீழ்கிற உயிரை, மறந்திடலாமா…!

அவள்செய்த தியாகத்திற்கு தந்திட ஈடாய்
அவனி முழுவதும் போதாது, உணர்வாய்..!
குருதியை பாலாய், கொடுத்தவள் அறிவாய்…!
தாயென்னும் இறைவியை நித்தம் தொழுவாய்…!

*****************************************************
எளியோர்க்கும் புரியும்படி
எழுதி வைப்பது
எளியநடையில் தமிழ்ச்சொற்களை
தொகுத்து அமைப்பது

வந்துவிழும் வார்த்தைகளை
அடுக்கி வைப்பது….!
வரிமுழுதும் எதுகை,மோனை
அமைத்து வைப்பது…!

கனவுகளை நடுநடுவே
திணித்து வைப்பது…!
கற்பனைகளை கண்முன்னே
விரிய வைப்பது…!

கவிதைபற்றி இதற்குமேலே
என்ன சொல்வது..?
மொத்தத்தில் அதன்பணியோ
மனதை வெல்வது…!

*****************************
அண்ணா…
நாடாளும் மன்றத்தினை
நாவாலே வென்றவனே…! தமிழ்நாடென பெயர்சூட்டிய
தன்மானத் தமிழ்மகனே…!
விந்திய மலைதாண்டி
இந்திக்கு வேலையில்லை…!
திராவிட இனம்போல
திராணிகொண்டோர் எவருமில்லை…!

கலப்புத் திருமணத்தை
கலங்காமல் ஆதரித்தாய்….!
சட்டத்தை கொண்டுவந்து
சரித்திரத்தில் இடம்பிடித்தாய்…!

சமூக நீதிகாக்க
சளைக்காமல் நீ உழைத்தாய்…!
சாதியத்தை வேரறுக்க
சட்டங்கள் இயற்றிவைத்தாய்…!

பெரியாரியம் பேசிவந்த
பெருமைமிகு தலைமகனே….!
மகத்தான ஆட்சியினை
மறவாது தமிழினமே…!

*******************************
நம்மாழ்வார் நம்மை ஆள்வார்…!
இவரை யாரென்றறியா தமிழினம்-இங்கு
இருப்பதால் வலிக்கிறது என்மனம்…!
தன்னலம் அறியா இவர்குணம்-இவர்
தமிழ்நில இயற்கையின் நூலகம்…!

இயற்கை வேளாண்மை இவர்மூச்சு-நம்மை
இழுத்து கிறங்கடிக்கும் இவர்ப்பேச்சு…!
சற்றும் ஓய்வறியா இளைஞரிவர்- சூழலில்
சர்வமும் கற்றறிந்த கலைஞரிவர்…!

ஒருபோதும் அழிவில்லா ஒருதலைவர்-இவர்
ஒருவரே வேளாண்மைத் தமிழ்த்தலைவர்…!
இன்றென் வரிபோற்றும் நம்மாழ்வார்…!
என்றும் நல்வழியில் நமை ஆள்வார்…!

*******************************************
வ.உ.சி வரலாற்றை
வாசித்து முடிப்பதற்குள்,
கண்கள் குளமாகி,
கசிந்துருகிப் போகுமையா…!

அமுதத் தமிழ் மொழியில்
ஆழ்ந்த அறிவு மிக்கார்…!
வறுமையில் உழல்வோர்க்கு
வழக்காடும் குணம் உடையார்…!

அந்நிய நாட்டுப் பொருட்களை
அவர்கள் முன்னே தீயிட்டார்…!
பாரதியுடன் நட்பு கொண்டு,
பட்டாளிக்காய், பாடு பட்டார்…!

சுப்பிர மணிய சிவாவோடு,
சுதந்திரப் போரில் ஈடுபட்டார்…!
விடுதலை வீர வரலாற்றில்
விபரீத தீர்ப்பைப் பெற்றார்…!

சணல் நூற்கப் பணிக்கப்பட்டு
சகிக்க முடியா இன்னலுற்றார்…!
சிறப்பு மிக்க வழக்கறிஞன்
சிறை பட்டு செக்கிழுத்தார் …!

மண்ணுக்காய் மக்களுக்காய்
பொன்பொருளை இழந்திருந்தார்…!
சிறை முடிந்து திரும்புகையில்
மறுபடியும், மனம் நொந்தார்…!

வரவேற்க எவரும் இல்லை
வந்து தங்க வீடுமில்லை
வாங்கி மேவிய கப்பலில்லை
ஏங்கி தவித்தான் குறைவாழ்வில்…!

தென்னாட்டுத் திலகரின்,
தியாகப் பெரு வாழ்வை,
இந்நாட்டில் வாழுகிற
மக்கள் நாம் மறவலாமா…!

அவர்தம் தியாகம்,
அறியாத் தலைமுறை
இருப்பது வன்றோ
இழி நிலைமை…!

அவர்தம் நூற்றாண்டை
அழகுற நடத்துதல்
அரசின் இன்றைய
முதல் கடமை…!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 3 Comments

3 Comments

  1. முதல் கவிதை மனிதனின் இறுதி ஊர்வலத்தை அருமையான வரிகளில் உயர்த்துகிறது
    மற்றும் அம்மாவின் பாசத்தை அருமையான வரிகளில் எடுத்துரைக்கிறது கவிஞரின் எழுத்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *