உன் உக்கிர பிம்பத்தை
முழுமையாய் பிரதிபலிக்க இயலாததொரு
பலவீனமான ஆடி நான்
ஆயிரம் மழைத்தாரைகள்
ஒரே நொடியில்
ஒரு சின்னஞ்சிறு இலையை
கருணையற்று தீண்டும் போது
செம்பருத்தி மரத்தில்
ஒரு அறியாச் சிறுமி
வானத்திடம் கையேந்தி நிற்கிறாள்
நான் என் கைகளை
மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு
உன்னை எதிர்பார்க்கும் நேரம்
உள்ளதிரும் அணுக்களின் மீது
நீ நடந்து வருவது தெரிகிறது
வானத்திலிருந்து வானத்திற்கு பறக்கும் பறவை வெற்றிடம் தேடி
வானத்திலேயே மறைகிறது
சொற்களால் அசுத்தமான
இந்தக் கவிதையையும்
மெளன செதிலசைத்து நீந்தி வரும் மீனொன்று
பரிசுத்தமாக்குதலின் பொருட்டு
ஆழ்கடலுக்குள் இழுத்துச்
சென்று கொண்டிருக்கிறது