பாங்கைத் தமிழனின் கவிதைகள்

பாங்கைத் தமிழனின் கவிதைகள்




விழுதலும் எழுதலும்
***********************
இடத்தைப் பொறுத்தது
எழுதல் என்பது!
விழுந்து விட்ட
எல்லா இடங்களிலும்
எழுந்துவிட இயலாது!
மண்ணின் தன்மையைப்
பொறுத்துதான்
எழுந்திருப்பதும்
இயலாததும்!

மண் மட்டுமே
ஒட்டி… தட்டினால்
போகுமளவிற்கு
சில இடங்களில்
எழுந்து விடலாம்!

சில சிறு சிராய்ப்புகளுடன்
சில இடங்களில்
எழுந்து விடலாம்!

சில இடங்களோ
மூக்கும், மூட்டும்
முறிந்தேதான்
எழுந்திருக்க முடியும்!

சில இடங்கள்
சிலர் உதவியிருந்தால்
மட்டுமே
எழுந்திருக்க இயலும்!

சில இடங்களில்
விழுந்தால்…..
அம்புட்டே!
அதையெப்படி
நான் காதல் என்று
சொல்ல முடியும்?

இல்லந்தோறும் புனித நூல்
********************************
வள்ளுவனை திருவள்ளுவனை படிப்போர் நாளும்
தீங்கற்ற வாழ்வுதனை வாழ்வார் நாளும்
தெள்ளுதமிழ் அள்ளித்தரும்
செல்வம் எல்லாம்
திருக்குறளில் கிடைத்திடுமே பருகிப் பாரீர்!

உண்மையுடன் வாழ்க்கைதன்னை வாழ்வோர் யாரும்
ஒப்பற்றத் திருக்குறளை ஓதி வாழ்வார்!
ஆயிரத்து முந்நூற்றுமுப்பது குறளால் அய்யன்
அகிலத்தை ஆண்டகதை
படித்துப் பாரீர்!

அறந்தானே மானுடத்தின் நாதம்  என்றே
அதை வைத்தான்  அய்யனவன் முதலில்பாலாய்!
பொருளென்னும் செல்வந்தனை இரண்டாம் பாலாய்
பொய்யில்லா புலவனவன் போற்றிச் சொன்னான்!

இன்பமது என்னவென்றே விளக்கிச் சொல்லி
இறுதியிலே மூன்றாம் பால் ஊட்டினானே!
உலகோரின் வாழ்க்கையது சிறக்க வேண்டி
உத்தமனோ உண்மைகளை விளக்கி வைத்தான்!

அறியாமல் அகிலத்தில் வாழ்வோ ரெல்லாம்
அய்யனவன் திருக்குறளை
கற்று வாழ்ந்தால்
அகிலத்தில் மேன்மையுற வாழ்க்கை தன்னை
அற்புதமாய் வாழ்ந்திடவே வழியைச் சொல்லும்!

ஞானிகளின் குருவாக வந்துத் தோன்றி
ஞாலமது சிறந்திடவே வழியைச் சொன்ன
மேன்மைமிகுத் திருக்குறளை இல்லந் தோறும்
புனிதமிகு நூலாகப் போற்றி வாழ்வோம்!

– பாங்கைத் தமிழன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *