நிழல்கள்….!!!!
சில
நேரங்களில் நம்
நிழல்கள் கூட
நிஜங்களாகின்றன
மகனைப்
பின்தொடரும்
அப்பாவின் நிழல்கள்களால் ,
காதல் …..!!!!!
பேருந்தில்
ஜன்னல் ஓர
இருக்கை கிடைத்தவுடன்
பக்கத்திலேயே
அமர்ந்து பயணத்தை
தொடங்க ஆரம்பித்து விடுகிறது
அவனோடு எப்பொழுதோ
பயணமாகிய
பழைய நினைவுகள் ,
வெளிச்சம் …..!!!!!
இருட்டைப் பார்த்து
நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்
உங்கள்
கண்களில் தானே
அந்த இருட்டுக்கான ஒளி ஒளிந்திருக்கிறது,
அப்பா ……!!!!!
வரப்பு மோட்டில்
நின்று கொண்டு
பள்ளத்தில் தெரியும்
தன் நிழலை
உற்றுப் பார்க்கிறேன்
அப்பாவின் சாயலை ஒத்திருக்கிறது அந்த நிழல்
எதிர்கால கனவு…!!!!
கால் வீங்க
நின்று கொண்டு
பூக்களோடு பேசிக்கொண்டிருக்கும்
அப்பாவின் பாதங்களில் வடுவெனப்
பூத்திருக்கிறது
மகனின் எதிர்காலம் ,
வானம்…..!!!!
வானம்
எவ்வகை
வடிவமென்று கூறியவாறே வீட்டின்
ஜன்னல் வழியாக
எட்டிப் பார்க்கும்
சிறுமியின் கண்களுக்கு
வானம் செவ்வக வடிவமாக காட்சியளிக்கிறது,
தாய்மை மொழி ….!!!!!
தன் குழந்தைக்கு
நிலாவைக்காட்டி
சோறு ஊட்டிக்கொண்டிருக்கும்
தாயின் விரல்களில் பூத்திருக்கிறது
அன்பெனும் வாடாத தாய்மை பூ ,
கல்வி அறிவு…..!!!!
விடுமுறைக்காக
பூட்டப்பட்ட
பள்ளிக்கூடத்தின் ஜன்னல் கதவுகளை
அவ்வப்போது திறந்து பாருங்களேன்
பல கனவுகளோடு
மாணவர்களுக்காகவே காத்திருக்கும்
கரும்பலகையும் சுண்ணாம்புக் கட்டியும்,
குருவிக்கூடு ….!!!!
நீல வானத்தில்
பறந்து கொண்டிருக்கும் சிட்டுக்குருவிக்கு
அடைக்கலம் கொடுக்க
கட்டடச் சுவரில்
கூட்டை வரைந்து
கொண்டிருக்கும்
அப்பாவின் பாக்கெட்டில் சிறகில்லாமல்
வானத்தைத் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறது
செல்போன் சிக்னல் தெரியும்,
மரியாதை…!!!!
வெத்தல
பாக்கு போட்டு
சிவந்த வாயுடன்
எப்பொழுதும்
வாயடித்துச் சண்டையிடும்
எங்க ஊரு அஞ்சல பாட்டி
புருஷன் பெயரை
மட்டும் சொல்லவே சொல்லாது
இம்முறையும்
கறைபல்லைக் காண்பித்தவாறே
இமைகளால் கண்களை மூடியவாறே
எனது ஆவலைப் பொய்யாக்கி
விட்டே சென்றுவிட்டாள் ..
மரணத்தின் கடைசி கனவு,
அதிகாலையில்
ஒரு கனவு
கனவில்
களவாடப்பட்டிருந்தது
அன்றைக்கான கடைசி நினைவு ,
நிழலில்லாத
தன் உடலோடு
பிறர் உடலின் நிழலை
பொருத்திப்
பார்த்துக் கொண்டிருக்கிறது மனம்,
மனம் முழுவதும்
பெரும்
நாற்றமெடுக்க
வெளியில்
வீச தொடங்கியது
துர்நாற்றம்
மரணம் வாசலில் நிற்க ,
நீண்ட
நேரமாக வாசலில்
நின்றுகொண்டிருக்கும்
மரணத்தை
உள்ளே வரவழைத்து
பாயைப் போட்டுப்
படுக்கையை
விரித்துக் கொண்டிருந்தது உடல்,
உடல்
முழுவதும் மழைத்துளியாக வியர்வைத்துளி
நேற்று
மண்வெட்டியோடு
கூலி வேலைக்குப் போன
கனவு நிழலாடிக்கொண்டிருக்க
வாசலில் கிடக்கிறது
அறுபட்ட ஒரு கால் செருப்பு ,
யாரோ
வரைந்த கனவுக்குள்
ஒளிந்துக்கொள்ள முற்படுகிறது உடல்
உடல் முழுவதும்
சல்லடையாக ஓட்டைகள்
ஓட்டையின் வழியாக ஒழுகும் உதிரம்,
கனவுகளைத்
திறந்து விட்டு
அவ்வப்போது திறந்து
திறந்து மூடிக் கொள்கிறது இமை மூடிய கண்கள்,
அந்தப் பருத்த கண்கள்
முழுவதும் நிறைய கனவுகள்
கனவுக்குள்
ஒளிந்துக்கொள்ள
மறுக்கிறது மனம்,
எல்லோரிடமும்
மணிக்கணக்கில் பேசிய
மனமெனும் வாய்
ஊமையாகவே ஊஞ்சலில்
ஆடிக் கொண்டிருக்கிறது
தள்ளி விட்டு
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது
மரணத்தின் நிழல்,
தன் நிழலையே
மரணத்தின் நிழலென்று
பார்த்துப் பயந்து போய் நிற்கிறது உடல்
கடைசி நினைவின் கனவோடு……..!!!!!
– கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
9791642986,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

