எங்கள் ஊர்த் திருவிழா
**************************
சாலையெல்லாம் விளையாட்டுப் பொம்மைகள் இருந்தபோதும்
வயிறோடு பசி விளையாடிக் கொண்டுதான இருக்கிறது
அந்த யாரும் அற்ற குழந்தைக்கு….!
கண்ணாடிக் கடைகளில்
வளையலோடு மின்னுகிறது
காதலனின் கைப்பட்ட வளையல் அணிந்து
குலுங்கச்செய்யும் காட்சி….!
மாரியம்மனும் காளியம்மனும்
ஒன்றோடு ஒன்றோடு பார்த்துக் கொண்டாலும்
உரசாமல் உசாராக செல்கின்றன வடம் பிடித்த வெவ்வேறு சாதிகள்….!
ஏதோ ஒருநாள் செய்த தவறுக்கு
வாண வேடிக்கையை மட்டும் பார்த்துத் தலை நிமிர்த்துகிறது,
அப்பனின் அறியாத தவறு அறியாக் குழந்தை….!
வருடா வருடம் வந்து செல்கிறது…
வாசலோடு சென்று விடுகிறது தெய்வம்
விபூதி பட்டைவரை நிலைத்திருக்கிறது பக்தி…!
அவளதிகாரம்
*****************
காதுகளை அழுத்தி
நீ
தோப்புக்கரணமிடும் பொழுதெல்லாம்
ஒரு சுற்று நான் இளைப்பதும்
உலகம் பல சுற்று மறப்பதுமான நிலையாகிப் போய்விடுகிறது….!
அங்க பிரதட்சணைகளில்
கோயில் பிரகாரமே உன் இடைபிடித்து உருட்டி
கோரிக்கையைக் கடவுளின் முன் வைக்கிறது…..!
மெட்டிகளோடு நீ போராடும்
விரல் விட்டு வருடும் நொடிகளுக்காக
அந்தச் சிறு முத்துக்கள் அவ்வப்போது ஏங்கதான் செய்கின்றன…..!
சோப்புக் கட்டிகளின் தேய்மானத்தில் பிறக்கிறது
உன்னைப் பார்த்தபடியே
மெல்ல மெல்ல நகர்ந்து
உயிர்போகும் குமிழிகளின் வாழ்க்கை நீளம்……!
இருக்கையோ
இல்லை நின்றபடி நீ செல்லும்
பயணமோ
நிறுத்தம் முற்றுப் பெற்றாலும் உன்னிடமே பயணிக்கின்றது
பயணச்சீட்டின்றி
பயணப்படும் ஆசையில்…..!
– கவிஞர் சே கார்கவி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.