துளைகளற்ற புல்லாங்குழல்…!
***********************************
மொத்தமும் ஊமையாகிய வனத்திலே
புழுக்கள் நிண்டி நெளிந்து
கொழுத்துப்போன
மொத்தக் காட்டில்
அளவெடுத்து
அழகாக்கி
தூர் பார்த்து முட்கள் முறித்து
மெல்ல மெல்ல அடித்து
பதமான தீமூட்டி
நீட்டி மடக்கி
துளை கிழித்து
பட்டை பரத்தி
பக்கங்களில் துளைகளிட்டு
மொத்த இசையும் அறியாத கலைஞனின் கையில்
துளைகளை மையப்படுத்தாமல்
அடைபட்டு கிடக்கிறது வாழ்க்கையெனும் இசை
இப்படி
முடித்து அடுக்கப்பட்ட பல நூறு துளைகளற்ற புல்லாங்குழல்களாய்….!

காடு வேண்டி விண்ணப்பம்…..!
***************************************
காளான்களின் குடிசையில் கையேந்திய சிறு வண்டிற்கு
உணவில்லை என்றுகூறாது
உணவிட
நிதம் செமித்து மென்று தள்ளிய
மொத்த இலைகளின் கூண்டுக்குள்ளே
இளைப்பாறி உருட்டிச் செல்கிறது
பசிபோக்க நேரமின்றி
மழையாயினும் வெயிலாயினும்
நடைமேலே நடைபோடும்
ஓயாத உழைப்பின் மேல்
ஓங்கி அறையாமல்
ஒத்தடம் கொடுக்கிறது
ஒரு துளி மழை
சிதைந்த நிலமெல்லாம்
வேரூன்றி நிற்கிறது
காடு வேண்டி விண்ணப்பத்தில் விதைகளைத் தாங்கி….!

கனா கண்டு எழமுடியவில்லையே…!
*******************************************
வானவில்களில்
வளைந்தாடிய பதுமையின் விரல்களில்
புதுப்புது பிறைகள்…
போத்தென இடை வளைய
ஊடல் குழையும் நேரமிது
யார் எடுத்த மூங்கிலில்
கானம் பிறப்பெடுத்து ஓடுகிறது
ஐம்பொன் செம்பெடுத்து
ஆரவாரமின்றி
அசைந்தாடுகிறது
அவள் புருவம் நிறைந்ததொரு
ஆசை ஆணை
அதில் வலம் வந்து வளைக்கத் தூண்டுகிறது
எனது பேராசை வானை….!

கவிஞர் சே கார்கவி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *