மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“அம்மா!” 

நான் அழ நீ சிரித் “தாய்”
நான் பிரசவித்தபோது!

நான் புசிக்க நீ பசித் தாய்
நான் முலையமுது உண்டபோது!

நான் உயர நீ உழைத் தாய்
நான் பள்ளி சென்றபோது!

நான் துடிக்க நீ துதித் தாய்
நான் துன்புற்றபோது!

நான் மகிழ நீ நெகிழ்ந் தாய்
நான் சிறப்புற்றபோது!

நான் உறங்க நீ விழித் தாய்
நான் நோயுற்றபோது!

நான் மணக்க நீ முயற்சித் தாய்
நான் ஆளானபோது!

ஆனால் நீ முதுமையால் முடங்கியபோதோ…
நான் எங்கோ? ஏனோ?யாருடனோ?
ஓதுங்கி ஒளி(ழி)ந்து விலகிப்போனேன்!
கைதியாய்(சூழ்நிலை)!
கையாலாகாதவனாய்!!

“முகமூடிகள்”

கிரகணமெனும் முகம்மூடி
ஒளிந்துகொள்ளும் ஆதவன்!

முகில்களெனும் முகம்மூடி
மகிழ்கின்ற நீள்விசும்பு!

பனிக்கட்டியெனும் முகம்மூடி
பயணிக்கும் ஆழிநீர்!

தென்றலெனும் முகம்மூடி
கொந்தளிக்கும் சூறாவளி!

மரங்களெனும் முகம்மூடி
மறைந்தொழுகும் மாமலைகள்!

பூமியெனும் முகம்மூடி
பூரிக்கும் பூகம்பம்!!

வண்ணமெனும் முகம்மூடி
வடிவுபெறும் வானவில்!

நிலமென்னும் முகம்மூடி
எழுகின்ற எரிமலைகள்!

அப்பப்பா இயற்கைக்கு,
அளவில்லா அழிவில்லா,
எத்தனை எத்தனை…
எண்ணிலடங்கா முகமூடிகள்!

” ஒருநாள் கணக்கு.”

ஈராறு எண்களில்
இருமுறை இணையும்
பெருசிறு முட்களே
ஒருநாள் கணக்கு!

நிலமகள் சுழற்சி
ஒருமுறை முடியும்முன்,
ஓராயிரம் மணித்துளிகள்
உனக்காகவே காத்திருக்கு!

நீயதனை நேர்த்தியாய்
நிர்வாகம் செய்திடின்,
நின்வாழ்வு ஆங்கோர்
நல்வாழ்வு ஆகிடுமே!

சொப்பனம் பகல்கண்டு,
சோம்பித் திரிந்து,
உதவாக்கரையாய்
ஊர்சுற்றி வந்திடின்…

காலம் உன்னை
கண்டனம் செய்திடும்
கண்டனம் செய்துனக்குத்
தண்டனை தந்திடும்!

–மரு உடலியங்கியல் பாலா.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 1 Comment

1 Comment

  1. M. Rajendran.

    ‘அம்மா’ கவிதை மிக அழகு.
    ‘பூமியின் முகமூடிகள்’ வளமான கற்பனை நயம்.
    ‘ஒருநாள் கணக்கு’ நல்ல அறிவுறுத்தல்.
    ரசனைக்குறிய கவிதைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *