மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்

மரு உடலியங்கியல் பாலாவின் கவிதைகள்




“இதற்குத்தானே ஆசைப்பட்டேன்”
*************************************
பிறக்கையில் கொங்கையமுது
தவழ்கையில் மண்ணமுது
நின்றபின் பிஸ்கட் சாக்லேட்டமுது
வளர்ந்த்பின் இன்னபிற இனிப்பமுது
வாலிப வயதில் விளையாட்டு
பருவம் வந்ததும் காதல்களியாட்டம்
மணந்தபின் கவின்மிகு கலவி
நடுத்தர வயதில் பணம் பொருள் செல்வம்
முதிர்ந்தபின் நோயற்ற வாழ்வு
இறுதியில் வலியற்ற இறப்பு,
இதற்குத்தானே ஆசைப்பட்டான்!
ஆனால் எதுவுமே ஏகமாய்
கிட்டுவதில்லை!!
துன்பத்தின் தூறல்கள் தூவானமாகி
துரத்தும் கவலைகள் கானல் நீரென
துடிக்கும் கனவுகள் துவண்டு போக!
துடிப்பும் ஒருநாள் நின்றுபோகும்,
தூயவனின் தாள்சேரும் சுகமான இறுதி நாளுக்கு….
ஏங்கிஏங்கி தவித்து நின்றான் மானிடன்!

திக்குத் தெரியாத காட்டில்”
********************************
தத்தித் தத்தி
தாயவளை கரம்பற்றி
சுத்திச் சுத்தி வந்து!
பற்றிப் பற்றிப்
பள்ளிப்புத்தகம் தனைக்
கற்று கற்று தேறி
சுற்றி சுற்றி
சுழல் விழியாள் காதலை
தேற்றி தேற்றி தொலைத்து
ஓடி ஓடி
வேலைதனைத்
தேடித் தேடி அலைந்து பெற்று!
பாத்துப் பாத்துப்
பெண்ணவள மனைவியாக்கி
பொத்திப் பொத்திப் பாதுகாத்து
சேத்துச் சேத்து
வைத்த பொருள்தனை
காத்துக் காத்து வைத்துத்
தூக்கித் தூக்கி
வளர்த்த வாரிசுகளோ
தாக்கித் தாக்கிப் பேச
தொங்கித் தொங்கி
முதுமையால் உடல்
மங்கி மங்கிப் போக
சுட்டுச் சுட்டுத்
திக்குத் தெரியாத (இடு)காட்டில்!
மண்ணொடு மண்ணாகிப் போனானே போக்கத்த மனிதன்!

“எழுத்தறிவித்தோனே ஏகன்!”
**********************************
ஆசிரியர்கள்!
அரும்பெரும் பட்டங்கள்!
ஆதாயம் தரும் பதவிகள் !
அனைத்தும் மாணவர்கட்கு
அறிவால் போதித்து!
கற்றுத்தரும் பெற்றுத்தரும்!!
ஆரவாரம் இல்லா
அணையா சுடர்கள்!

ஆசிரியர்கள்!
ஆயிரம் ஆயிரம் இளவல்களை
அலுங்காமல் நலுங்காமல்
ஆங்கே உயரத்தில் அமர்த்திடும்
அரிய பணி ஆற்றிடும் இவர்கள்!
ஏனோ ஏணியை போல்
“ஏறல்” முடிந்ததும்
எங்கோ புறந்தள்ளப்படுவர்!

ஆசிரியர்கள்…
ஆக சிறந்த சமுதாயம்
ஆக்க பிறந்த ஆசான்கள்!
அவர்கள் இல்லையேல்..
ஆவிபிரிந்த உடல்போல்
ஆகிவிடும் அழிந்துவிடும்!

ஆசிரியர்கள்
அவமதிக்கும் நாடும் அரசும்!
அமைதி விலகி
ஆக்கம் விலகி
அவ்வியம் தழுவி
அழிவது உறுதி!

அனைவர்க்கும்,
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!
குருவே சரணம்!!

அவர் சைக்கிள் போட்டி!!
*****************************
அம்மாவின் அஞ்சரை பெட்டியில்
அஞ்சி நடுங்கி அரண்டு புரண்டு! ஐம்பது பைசா ஆட்டைய போட்டு!
அண்ணாச்சி சைக்கிள்கடையில்
அரைமணி நேரம் வாடகை எடுத்து!
அரைடஜன் நட்புகள் ஒன்றுகூடி,
போட்டாப்போட்டி பந்தயத்தில்!
மிதித்து மிதித்து பறந்தேன்!
மிதந்து மிதந்து மகிழ்ந்தேன்!
மின்னலென வெற்றி பெற்று!
கிரிக்கெட் மட்டை பரிசு பெற்று!
அம்மாவிடம் வெற்றியை பகிர!
அஞ்சறைபெட்டி ஆட்டையை மன்னித்து
அன்பு அம்மா! வாரியணைத்து
ஆசைதீர உச்சிமோர்ந்து ஆசிதந்தாள்!

– மரு உடலியங்கியல் பாலா

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *