புனிதனின் – கவிதைகள்

புனிதனின் – கவிதைகள்




இரண்டாம் ஆட்டம்
***********************
இரண்டாம் ஆட்டம் சினிமா
பார்க்கப் போயிருக்கலாம்

தூக்கம் வராததற்கு
மனைவியோடு
காலார நடந்திருக்கலாம்

எழுதிய கவிதையை அவளிடம்
வாசித்துக் காட்டி இருக்கலாம்

பக்கத்து வீட்டுக்காரனுக்குக் கேட்காமல்
இருவரும் சேர்ந்து
பாட்டு கேட்டு இருக்கலாம்

இரண்டொரு
முத்தத்தோடு முடித்து இருக்கலாம்

தேநீர் உவர் சுவையோடு
இரவு கழிந்திருக்கலாம்

ஐந்து நிமிடம் தள்ளிப் போயிருந்தால்
இப் பிறவி நிகழாது போயிருக்கும்

கடவுளை மற
******************
தேர் போல் நகரும்
காகிதப் பூக்கள் கொடியை
ரசிப்பது

கொஞ்சம் கொஞ்சமாய்த்
தேநீர் பருகுவது

இளையராஜா பாடல் கேட்பது

உறங்கும் போதும்
கீழ்ப்படிந்த மாணவனாக இருப்பது

ஒரே நீர் நிலையில்
நீர் பருகினாலும்
கூழாங்கற்களுக்கும்
தனக்கும் சம்பந்தம் இல்லை
என பறந்து போகும்
கொக்கை தினமும் காண்பது

தேநீர் நன்றாக இருக்கிறது
நன்றி என மனித மொழி
பேசுவது

ஜென்னை போல
கடவுளை மறப்பதற்கும்
பல தடைகளை
கடந்து வரவேண்டி இருக்கிறது

கூழாங்கல் பெண்
***********************
அம்மாவின் விதான மூளையில் இருக்கும்
கற்பனைவாத கரும்புள்ளியில்
முல்லை ஆதிரை பசுக்களும்
அவை நீர் பருகும்
தாழி அடியில் தவளைகளும்
ஒற்றுமையாய் வாழ்கின்றன
தென்னை தென்றல் வீசும்
மன்றத்தில் ஓய்வெடுக்கிறது
ஏஞ்சல் நாய்க்குட்டி
கானகத்தில் இருந்து
அழைத்து வந்த
கனகாம்பர கோழிகள்
பேன் சீப்பை ஒளித்து வைத்து
கட்டிதறி எறிந்த
கொத்து போல்
இளையராஜா பாடல்கள்
உப்பு உறைத்த
நீச தண்ணி போல்
அம்மா நீக்கமற நிறைந்து இருக்கிறாள்
நினைவில்

ஜென்னின் வயது
**********************
தென்னை மரத்தடி
வெயிலுக்கு தாழி பருகிய
எருமை கன்றுக் குட்டி
அப்பாடா என படுத்துக் கிடக்கிறது

எதிரில் ஒரு மலைக் குன்றும்
அப்பாடா என
படுத்து கிடக்கிறது

98 வயதிலும் கண்ணாடி போடாமல்
புத்தகம் வாசிக்கும்
நண்பனின் தாத்தாவை பார்த்து
நானும் பணக்காரன் ஆவேன்
என நண்பனிடம் சொல்லி வந்தேன்

கிணற்றில் ஒரு முறை அவர்
தவறி விழுந்து விட்டதாய்
நண்பன் சொன்னான்

கிணற்றை எட்டி பார்த்தேன்
அவரின் பால்ய காலம்
தெரிந்தது

ஓடையோரம்
நாணல் புற்களின் ராகம்
அம் மலையின் வயதை
இசைக்கிறது

கற்றலின் இனிமை
ஊறிக் கொண்டிருக்கிறது
அந்த ஓடையில்

நினைவில் இன்னும்
வாசித்துக் கொண்டிருக்கிறார்
நண்பனின் தாத்தா
கருப்புச் சட்டை அணிந்த
கிழவரின் புத்தகத்தை

அருகில் இசைக்கும்
ஆல மரக் காற்று
தன் வயதையே
நண்பனின் தாத்தா ஞானம்
அடைந்த வயதாய்
அறிவிக்கிறது

ஆற்றைக் கடப்பது
***********************
சீடன் குரு வீட்டிற்குப்
போயிருந்தான்
வீடு குடில் போலிருந்தது

தன் எழிலான மனைவியிடம்
தேநீர் வைக்கும்படி
சொல்லி விட்டு
ஐந்து நிமிடத்தில் வருவதாய்
அவனிடம் சொல்லி விட்டுப் போனார்

அவர் அழகான மனைவி
தேநீர் தந்தார்கள்

தேநீர் பருகத் தொடங்கிய
மூன்று நிமிடத்தில் திரும்பி
வந்தார்

அவன் முகத்தையும் மனைவி
முகத்தையும் அர்த்தமாய்ப் பார்த்தார்
சீடன் மௌனமாய் அமர்ந்திருந்தான்

சீடன் முகத்தில் கள்ளத்திற்குப் பதிலாய்
குருவின் ஞானம் தெரிந்தது

கோப்பையில் தேநீர்ப் பூக்கள்
பூத்திருந்தன.

கருப்பு சினிமா
*******************
கருப்பு மாட்டைக் கண்டால்
விடுதலை உணர்ச்சி பிறக்கும்

பறவைக் கூட்டிற்கு
புல் கொண்டு வருவது போல்
வெயிலில் அலைந்து
அம்மா புல் சுமை
கொண்டு வருவாள் மாட்டிற்கு

ஒட்டகத்தில் பாதி இருக்கும்
மிருகம் என்ற சொல்லுக்கு
பொருத்தமா இருக்கும்
சின்ன புள்ளைகள் கயிறு பிடித்து
வர கட்டுப்படும்

-க. புனிதன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *