சக்திராணி கவிதைகள்

சக்திராணி கவிதைகள்




எப்படி மாறிடுச்சி!
**********************
என்னென்ன நினைச்சிருந்தோம்…
ஏழ்மையை விரட்ட…
வரம் வேண்டிக் காத்திருந்தோம்…

ஊர் காக்கும்…தெய்வத்தை…
ஊரைச் சுத்திக்காட்ட…
தேர் ஏற்றி வலம் வந்தோம்…

நொடிப்பொழுதில்…
என்ன நடந்ததென…தெரியலையே…
ஏதும் விளக்கம் கூற…மொழியில்லையே…

காலாற…நடந்தவக எல்லாம்…
கட்டையா…ஆனாக…கைப்பிடிச்சு
நடந்த வடத்தாலே…

ஒய்யாரமா ஏறி‌ வந்த…
சாமிக்கும் புரியலையோ…
இந்த ஊர்வலம் இறுதி ஊர்வலமா
அமையுமோ என…

என்ன சொல்லி தேத்த…
உறவை இழந்து தவிப்பவருக்கு…
சாமி தூக்க வந்தவங்க…
சாமியா…போனாங்கனு…

இன்னும் மாறவில்லை
***************************
கைப்பிடித்து நடந்த
குழந்தை…கை விட்டே…
பள்ளி செல்லும் போது
அழுகையைத் தன் துணைக்கு
அழைக்கிறது…இன்னும்
இதெல்லாம்…
மாறவில்லை…

மாலை அழைக்கும்…பெற்றோரின்
கரம் புகவே ஓடிச்சென்று…
உள்ளங்கையில்…தம்…அன்பை
புகுத்தும்…நிலை இன்னும் மாறவில்லை…

நடந்த கதையும்…
நடக்க இருக்கும் கதையும்…
மூச்சு விடாமல் சொல்லி முடித்தே…
பொழுதை நகர்த்தும்…குழந்தைகளின் மனம்
இன்னும் மாறவில்லை…

வீடு நிறைய தின்பண்டங்கள்
இடம் பிடித்திருந்தாலும்…
பாதையோரக் கடைகளில்…
தனக்குப் பிடித்த உணவைக்கேட்டு…
வாங்கி உண்ணும் குழந்தைகளின்
ருசி…இன்னும் மாறவில்லை…

வீட்டுப்பாடம் என்றதும்…
இல்லாத பசியும்…வராத தூக்கமும்…
தவறாமல் இடம் பிடித்தே…
காலம் நகர்த்த முயற்சிக்கும் பண்பும்…
இன்னும் மாறவில்லை…

குழந்தைகள்…குழந்தைகளாகத் தான்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
மாறாமல்…

நாம் தான்…நம் எண்ணங்களை
குழந்தைக்கு ஊட்டி…மாறாமல்…
இருக்கின்றோம்… குழந்தைகள்
மாறவில்லையே…என்ற ஏக்கத்தில்…

உத்வேகம்
*************
வேண்டிய வேண்டுதல்
எல்லாம்…நிறைவேறா
வேண்டுதலாய்…
இறைவனுக்கு மேல்…
உயர்ந்து நிற்க…

வேண்டிய நபர்கள் எல்லாம்…
வேண்டாதவர் போல் என்னை
ஒதுக்கி செல்லும் வேளையில்…

வேண்டாத அனைத்தும் எண்ணி
மனமுறிவில் ஓர் அமைதியாய்…
இருக்கும் சமயத்தில்…

மனதை…உத்வேகம் கொள்ளச் செய்தே…
இசை பெறும் ஈடேற்றம்…

இணையாகாது…இறைக்கும்…
இரைச்சல்காரர்களுக்கும்…

விரதம்
*********
வேண்டாத தெய்வம்
இல்லை…
வேண்டி வேண்டி…நொந்து போன மனதை தேற்ற
இங்கோர் கடவுளுக்கோர்
இரக்கமில்லை…

நெய்யிட்டு…திரியிட்டு
நேரம் குறித்து விளக்கேற்றும்
விரதம் செய்து வேண்டியாச்சு…

நூற்றியெட்டு சுற்று…சுற்றி…
பாதம் நோக பணிந்து…
இறைவன் பாதம் பற்றி…
விரதமிருந்து வேண்டியாச்சு…

இன்னின்ன குறைக்கு…
இந்தந்த தெய்வமென…உண்ணா
முறைகள் அறிந்து…
முறையிட்டு வேண்டியாச்சு…

எத்தனை வேண்டினாலும்…
வேண்டுதல்கள்… நிறைவேறவில்லை…
விரதம் இருந்தும்…விதி மாற
வழியுமில்லை…

காலத்தோடு பயணிக்க…
மனம் விரும்பி…கடந்து செல்ல
பழகியாச்சு…
பழகுதலில்…பழகியவரின்
அறிவுரையும்…செவிமடுக்க
கேட்டாச்சு…

விரதமிருந்து விதி மாற்ற
நினைத்ததிலே…மதி கெட்டு
வாழ்க்கை போகும் பாதையிலே…
உனக்கு நீயே…துணையென்று
தெளிந்த பின்பே…விரதம்
என்பதே…மறந்தே போனதே!!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *