வலி
******
நீ உனது பக்கத்திலிருந்து
விசிறியடிக்கிறாய்
நஞ்சின் குணமேறிய
சொல் ஒன்றை
விலகியிருக்காமல்
சிறு புன்னகையால்
ஏற்கிறேன் அதை
உன் மார்பைக் குறிபார்த்து
என்னுள்ளும் சுரக்கிறது
அதே கனத்தோடு
ஒரு சொல்
நெருஞ்சியில் பாதம்பட்ட
சிறுமியின் லாவகத்தோடு
பிடுங்கி எறிகிறேன்
என்னிலூறும் அச்சொல்லை
எனது பக்கத்திலிருந்து நான்.
இரத்தப் பிசுபிசுப்பு
************************
பள்ளி வளாகத்தின் கழிவறையில்
பீச்சியடித்த மூத்திரத்தில்
சரிந்து வீழ்ந்தது நெடுஞ்சுவர்
கனத்துக் கிடந்த இடிபாடுகளில்
எஞ்சிய உயிரோடு
மல்லாந்து கிடக்கிறேன்
குளிரத் தொடங்கிய என் உடல்
பதறும் கரங்கள் அள்ளி எடுக்கையில்
சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டியென
ஓடோடித் திரிந்த மைதானத்தை
கடைசிமுறை திரும்பிப் பார்க்கிறது
வலிமிகுந்து நினைவுகள் அழிய
செந்நிற திரவமாய் வழிகிறது
என் வாழ்வின் முடிவு
எல்லாம் அடங்கிய நொடியில்
அகலாமல் ஒட்டிக் கொள்கிறது
என் இரத்தத்தின் பிசுபிசுப்பு
அதிகாரத்தின் கரங்களில்
என்றென்றைக்கும்.
க. சம்பத்குமார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

