தங்கேஸ் கவிதைகள்

தங்கேஸ் கவிதைகள்




புன்மையின் நாவுகள்
************************
மனித அரவம் தென்படாத
இந்தத் தெருவில்
தன்னந்தனியே
ஒருவண்ணத்துப்பூச்சி
பறந்து செல்வது
தனிமையின் துயரை
கூட்டவோ?

மனிதம் பட்டுப்போன நாட்களில்
துளிசிச் செடிகள் முற்றத்தில் தழைப்பதில்லை
வாயிற்கதவு திறந்து கிடக்கும் கோவில்களிலும்
மூலவர்கள் பிரார்த்தனைகளுக்கு
செவிமடுப்பதில்லை

இரத்த வெறி கொண்ட
புன்மையின் நாவுகள்
தெய்வங்கள் மதங்கள்
சாதிகள் கட்சிகள் என
வாழ்க்கையை
அழகாக சந்தைப்படுத்தும்போது
கடவுள்கள் கண்ணாடிப் பெட்டிக்குள்
விற்பனைக்கு காத்திருக்கும்
கொலுப்பொம்மைகளாகிறார்கள்

நீங்களும் நானும் ராட்சத காலடிகளின்
அழுக்குகளைத் தின்று கொண்டிருக்கும்
மீன்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்

கருணை சிறிதுமற்ற மனசாட்சி
முற்றிலும் பித்தேறி
பைத்திய தாண்டவம்
ஆடிக் கொண்டிருக்கிறது

தேடல
********
வேதனை பீறிடும் ஒரு முகத்தை கடந்திடும் போது
உங்களுக்கு என்னதோன்றும்?

துயரச் சாயல் படிந்த
உறவினரின் முகம்
உடைந்த நாற்காலியைப் போர்த்தி வைத்திருக்கும்

ஒரு பழந்துணி
ம் ஹூம் எதுவுமில்லை

கையறு நிலையில் யாசித்துக்கொண்டிருக்கும்
ஒரு முது கடவுள்
அவ்வளவு தான்

தங்கேஸ்
தமுஎகச
தேனி

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *