அப்பா
*********
அறுபது ஆண்டுகளாகியும்
ஒரு மனிதனின் சாம்பலில்
கங்குகள் கனைந்துகொண்டிருக்கின்றன.
இரவின் நித்திரைகளில்
கனவுச் சங்கிலியில்
கண்களைக் கோர்த்துவிடுகிறார் அப்பா.
பகலில் ரெட்டியாரின் ‘ஆராய்ச்சி’யாய்
இருந்துவந்த அப்பாவுக்கு
இரவு விவசாயம் தெரியும்.
கடை மடைக்கு
ஏரியின் மதகிலிருந்து
ஊர்ந்துவரும் தண்ணீர்ப் பாம்பை
வாடிக்கையாய்
வழியில் கொத்தித் தின்னும்
பருந்து.
வரப்புகளுக்கு இடையே
ஒரு நதியைப் போலப் பெருக்கெடுத்து ஓடும்
தண்ணீரில்
அவ்வப்போது கலந்திருக்கும்
அப்பாவின் குருதி
விவசாயி
கவிதையின் அந்தப்புரத்தில் ஓய்வெடுப்பதை
நீங்கள் பார்க்கவே முடியாது.
எனது ஞாபகக் குறிப்பின்
ஒரு பக்கத்தைப் புரட்டுகிறேன்.
காற்றில் உறைந்துபோயிருக்கும்
காலற்ற குதிரைகளின் சவாரிகள்.
என் தம்பிகளைப் பெற்றுடுக்குமுன்
தந்தையின் வயிற்றிலும்
தங்கியது கர்ப்பம்.
நிலவு கொலையுண்ட கும்மிருட்டில்
அப்பாவின் முகத்தில்
இரண்டு நட்சத்திரங்கள் மின்னின.
தன்னந்தனியாக
அவர் வெட்டிய கிணற்றில்
இன்றும்
ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
இன்றும் பேய் கிணறு வெட்டுவதாய்
ஊருக்குள் பேச்சு
இரவெல்லாம்
ணங் ணங் கென்னும் சப்தம்
கானகத்தில் சுழலும்
காற்றின் பேரோசை
சவக்குழிகள் என்று
பங்காளிகள் பதறிட
இன்றும் அதே இடத்தில்
அதே இருட்டில்
அப்பா கிணறு வெட்டிக் கொண்டிருக்கிறார்
பரசுராமரிடமிருந்து பறித்த ஆயுதத்துடன்
அப்பா
புரட்சியின் பூமிக்குப் போய்க்கொண்டிருக்கிறார்.
கவிதை – நா.வே.அருள்
ஓவியம் – கார்த்திகேயன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.