அரசு உயர்நிலைப்பள்ளி ’11ஆம்’வகுப்பு ‘ஆ’ பிரிவு வகுப்பறை முழுவதும் பாடப்புத்தகத்தில் மூழ்கிய நேரம்.வகுப்பாசிரியர் கண்ணனின் குரல் கேட்டு மாணவர்களின் தலைகள் நிமிர்ந்தன. ராகவி மட்டும் ஏதோ எழுதியவாறு சற்று தாமதமாகவே நிமிர்ந்தாள்.
“ஒருமுறை எல்லோரும் கவனிங்க பா… கொரோனா தொற்று பெருகி வருவதால் அரசாங்கம் பள்ளிகளுக்கு விடுமுறை விடச்சொல்லி அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை நீங்கள் வீட்டில் தான் படிக்கணும். தேர்வு பற்றி பின்னர் அறிவிப்பதாக சொல்லி இருக்காங்க. அதனால் படிப்பதை நிறுத்தாமல் படிச்சிட்டே இருங்க” எனச்சொல்லி கண்ணன் தன் அறைக்குச் சென்றுவிட்டார்.
மாணவர்கள் அனைவருக்கும் கொண்டாட்டம்தான்… பள்ளியே கொண்டாட்டத்தில் திளைத்தது. தனது வாழ்வை மாற்றப்போகும் ஊரடங்கு என்பதை பல மாணவர்கள் அறிந்திருக்கவில்லை. அதேபோல் ராகவியும் அறிந்திருக்கவில்லை. தனது சகாக்களோடு பேசி சிரித்து விளையாடி வீடு வந்த பின்தான் பள்ளிக் கால நினைவுகளை அசை போட்டாள். கண்ணீர்த்துளிகள் கண் திரையை மறைத்திட ராகவியின் அம்மா கமலம் “என்ன ராகவி சீக்கிரம் வந்துட்ட” என்ற குரல் கேட்டு தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். இனிமேல் விடுமுறைதான் அம்மா மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி கிடையாதாம். ராகவியின் அம்மா கமலத்திற்கு உள்ளூர கொஞ்சம் ஆனந்தம் தான்.
ராகவிக்கு அப்பா இல்லை. அம்மா கமலம் மட்டுமே கமலத்துக்கு ராகவி ஒரே மகள். கமலம் கடின உழைப்பாளி தனது உழைப்பு மொத்தத்தையும் ராகவியின் படிப்பிற்கு என சேர்த்து வைத்தாள். கமலத்திற்கு ஆஸ்துமா வந்த பிறகு தான் முன்பு போல் உழைக்கவும் முடியவில்லை. சேர்க்கவும் முடியவில்லை. இருப்பதைக் கொண்டு காலம் கடத்துகிறாள்.
ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவில் மிதந்த ராகவிக்கு இந்த விடுமுறை சாபம்தான். தேர்வு வைப்பார்களா மாட்டார்களா. நினைத்த மதிப்பெண் கிடைக்குமா கிடைக்காதா. என்ற குழப்பங்கள் எப்போதும் ராகவியின் மனதை துளைத்துக் கொண்டே இருக்கும்.
கொரோனா ஊரடங்கு நீண்டுகொண்டே செல்ல. காலமும் கடந்து கொண்டே சென்றது. ராகவியின் கனவு மட்டும் அதே இடத்தில் தேங்கி நின்றது. எப்போதும் திண்ணையில் அமர்ந்து கதை பேசும் பக்கத்துவீட்டு பாட்டியின் சப்தம் இன்று கிசுகிசுப்பாகக் கேட்டது ராகவியின் செவிகளுக்கு. அப்படி என்ன ரகசியமாக இருக்கும் என்று நினைத்தவாறே தனது வேலையில் மூழ்கி விட்டாள் ராகவி.
மறுநாள் காலையில் அரசு உத்தரவு தேர்வு ரத்து எனும் செய்தி சிறப்பு செய்தியாக தொலைக்காட்சியில் வெளிவந்தது. ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபுறம் வருத்தமும் தொற்றிக்கொண்டது. எழுதி இருந்தால் மதிப்பெண் நிறைய கிடைத்திருக்கும் என்ற வருத்தமும் இருந்தது அவளுக்கு.
கூட படிச்ச பிள்ளைங்க எல்லாம் என நினைக்கிறாங்க அப்படிங்கறது தெரிஞ்சுக்க ராகவிக்கு ரொம்ப ஆசையா இருந்துச்சு. எப்பவும் பிள்ளைங்க கூடுற இடமான குளக்கரைக்கு தண்ணி எடுக்கிறமாதிரி இவளும் போயிட்டா. ஒவ்வொருதியா எல்லாரும் வந்துட்டாங்க. எல்லோரும் அடுத்து எப்படி படிக்க போறோம் எப்படி வாழ்க்கை அமைய போது இதை பத்தி பேசிக்கிட்டு கொஞ்சம் சிரிச்சு கொஞ்சம் விளையாடி பின் வீடு திரும்பிய ராகவிக்கு தன் வீட்டு வாசல் முன் நிறைந்து கிடைக்கும் செருப்புகளைப் பார்த்ததும் அதிர்ந்து தான் போனாள். என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் தயங்கித் தயங்கி வீட்டினுள் நுழைந்தாள் ராகவி. பட்டுச்சேலை சகிதமாய் கூட்டம் கூடி இருக்க. ஆவலாய் ஒரு பெண்மணி அருகில் வந்து “இதுதான் பொண்ணா கலையாயிருக்கு”எனச் சொல்லி விரல்களால் திருஷ்டி போட்டுக்கொண்டாள். என்ன நடக்கிறது என தெரியாமல் சுற்றும் முற்றும் பார்த்த ராகவியை வெட்கப் புன்னகையோடு ஏறிட்டான் ஒரு வழுக்கைத் தலையன். எதையும் யூகிக்கும் முன்னரே பூ வைத்து பச்சி சொச்சி சாப்பிட்டு கிளம்பிவிட்டனர் வந்த கூட்டம்.

தனது கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் “இவன் தான் உன்ன கட்டிக்க போறவன்” எனச் சொல்லி தன் வேலைகளில் மூழ்கிய கமலத்தை பார்க்க வெறுப்பாய் இருந்தது அவளுக்கு. அன்று பக்கத்து வீட்டு பாட்டியும் கமலமும் கிசுகிசுத்தது இதற்கு தானோ என்று எண்ணிக் கொண்டால் ராகவி அழுது புரண்டாலும் திருமணத்தை நடத்தியே தீருவேன் என சாதித்து விட்டாள் கமலம்.
கொரோனா ஊரடங்கில் சுற்றமும் சூழ திருமணம் நடந்தேறியது. மறுவீடு முடித்து மகள் கிளம்பும் போதுதான் கமலம் வாய் திறந்தாள். நானும் ஆஸ்துமாவில் கிடக்கிறேன். ஒருவேளை எனக்கு கொரானா வந்து நான் இறந்துவிட்டால் உன் நிலையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அதனால் தான் அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வைத்தேன் கோபத்தை மறந்து விடு என்று கட்டியழுதாள் கமலம். கண்ணீர்க் கடல் எனபெருக மகள் தன் புகுந்த வீட்டை அடைந்தாள்.
அது புகுந்தவீடு அல்ல புதைகுழி என்று போன இரண்டாம் நாளே தெரிந்து கொண்டாள் இவள் விருப்பங்கள் மதிக்கப்படுவதில்லை. மற்றவர்களின் விருப்பங்கள் திணிக்கப்படுவதை அவள் உணர்ந்தாள். கணவனோ குடிமகன் குடித்துக்குடித்து குடல் வெந்து போனவன். கணவனிடம் கேட்டு மேற்படிப்புக்கு வழிவகை செய்யலாம் என நினைத்த ராகவிக்கு பெரும் ஏமாற்றமே. கல்யாணம் ஆன இரண்டு நாளிலேயே இவன் பெரிய குடிகாரன்னு தெரிஞ்சிக்கிட்டா. யாரைச் சொல்லி என்ன ஆகப் போகுது வாழ்ந்துதான ஆகனும்.
ஊரடங்கா இருந்தபோதும் வழக்கம்போல மதுப் பிரியர்களுக்கு மது கிடச்சுட்டு தான் இருந்துச்சு எப்போதும்போல குடல் நிரம்ப குடித்துவிட்டு வந்த கணவன் சிறிது நேரத்திலேயே ரத்த ரத்தமாய் வாந்தி எடுத்து இறந்து போனான். ராகவியின் வாழ்வு பெரிய கேள்விக்குறியாய் கமலத்தின் முன்நின்றது. அழுவதைத் தவிர கமலத்தால் என்ன செய்த முடியும். இளம் விதவையான ராகவி உடைந்து போகவில்லை. மாறாக விடுதலை கிடைத்தது போல் உணர்ந்தாள். தனது தன்னம்பிக்கை மூலதனமாக வைத்து ஆட்சியர் ஆகும் அவள் கனவை நிறைவேற்ற ஆயத்தமானாள். ஊரே தூற்றியது தூற்றும் ஊரைத் தூசி தட்டிக் கொண்டிருந்தால். கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மட்டுமே கால நேரம் இருக்கும்.
தன் வாழ்வைத் தடம் மாற்றியது கொரோனா காலம். தான் கற்றுக்கொண்ட பாடங்களே வாழ்வின் படிக்கட்டுகள் என நம்பினாள்.
கொரோனா பல பெண் குழந்தைகளை பெண்மணி ஆகியது…
பல ஆண் குழந்தைகளின் கனவுகளை மங்கியும் மறைந்தும் போகச் செய்தது…
மேற்கண்ட கதையானது தமுஎகச சிவகாசி கிளை சார்பில் நடத்தப்பட்ட கி.ரா நினைவு சிறுகதைப் போட்டியில் சிறப்பு பரிசு பெற்ற கதையாகும்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

