உமையவன்  எழுதிய கிணற்றுப் பூதம் - நூல் அறிமுகம் | Kinatru Bootham - Umaiyavan book review - Books For Children - https://bookday.in/

கிணற்றுப் பூதம் – நூல் அறிமுகம்

கிணற்றுப் பூதம் – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூல் : கிணற்றுப் பூதம் 
ஆசிரியர் : உமையவன்  
வெளியீடு :
விலை : ரூ .45
நூலைபப்  பெற : thamizhbooks.com 

“சாமர்த்தியம் மட்டும் போதாது. அளவற்ற அன்பும் வேண்டும். குழந்தைகளுக்கும் சிறார்க்கும் கதைகள் எழுத சாமர்த்தியம், அன்பு இரண்டும் இணைந்து எழுத்தாளர் உமையவனிடம் இருக்கின்றன. உமையவனைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். வித விதமான உள்ளடக்கங்களைத் தேர்வு செய்து சின்னஞ் சிறுமியர் – சிறுவர்க்கான கதைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார். உமையவனின் கதைகள் ஆங்கிலத்திலும் தெலுங்கு, கன்னடம் போன்ற இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பெற்று எண்ணற்ற குழந்தைகளை எட்டுகின்றன. கொண்டாடத்தக்க வெற்றி இது ” என்று எழுத்தாளர் ச. மாடசாமி வாழ்த்துரைத்த எழுத்தாளர் உமையவனின் இளையோர் கதைகள் அடங்கிய தொகுப்பு கிணற்று பூதம். சிறார்களுக்கான சிறுகதை முயற்சியில் வந்திருக்கும் தொகுப்பு இது.

கிணற்று பூதம் என்னும் ஒரு நல்ல கதையுடன் தொகுப்பு தொடங்கியுள்ளது. பூஞ்சோலை கிராமத்தில் இருக்கும் ஆழமான பெரிய கிணற்றில் தண்ணீர் இருந்து கொண்டேயிருக்கும். மழை பெய்யாததால் கிணறு வற்றத் தொடங்கிவிட்டது. பக்கத்தூரில் தண்ணீர் எடுத்து வந்து சமாளித்து வந்தனர். இதற்கிடையே கிணற்றில் பூதம் இருப்பதாக ஒரு கதை மக்களிடையே கிளம்பியுள்ளது. உண்மையிலே அது பூதம் அல்ல இரவு நேரத்தில் தண்ணீரைத் திருடும் கும்பல் என்று பாலு  நண்பர்களுடன் படம்பிடித்து ஆதாரத்துடன் காண்பிக்கிறான். காவல் துறையும் கைது செய்து விடுகிறது. சிறுவர்களுக்கு ஏற்ப கதை சிறப்பாக அமைந்துள்ளது. சிறுவனின் செயல் பாராட்டத்தக்கது. பெரியவர்கள் செய்யாத செயலை சிறுவன் செய்துள்ளான். பூதம் என்பது ஒரு கட்டுக்கதை என்பதையும் கதை உணர்த்துகிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை என்பர். வெட்டிய கிணற்றில் பூதம் என்னும் பெயரில் ஒரு கும்பல் தண்ணீர் திருடியதை அம்பலப்படுத்தியுள்ளது கிணற்று பூதம்.

எருமை எப்போதும் கருப்பாகத்தான் இருக்கும். மாடு வெள்ளையாக இருக்கும். இதனால் எருமையை கருப்பி என்று அழைப்பது எருமைக்குப் பிடிக்கவில்லை. தன்நிறத்தை மாற்ற முயற்சித்தது. ஒரு முறை செம்மண் சேற்றில் இறங்கி மண்ணை அப்பிக்கொண்ட போது மழை வந்து சாயம் வெளுத்துப்போனது. அதனால் வனதேவதையை அழைத்து வரம் பெற்று தன் நிறத்தை சிவப்பாக மாற்றிக் கொண்டது. மாடு வயதானாதால் அறுப்புக்கு விலைபேசப்பட்டது. விலைபேசியவன் மாட்டுக்கு பதிலாக மாடு போல் நிறத்தில் இருப்பதால் எருமையை பிடித்து சென்று விடுகிறான். தன்னை கொன்று விடுவார்கள் என்று தெரிந்து தப்பித்துப் போய் வனதேவதையிடம் மீண்டும் வரம் பெற்று கருப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது. இடையில் எருமைப்பாலை மக்கள் விரும்புவதையும் எருமை நல்ல உழைப்பாளி என்று மக்கள் பேசுவதையும் கேட்டு மகிழ்கிறது. தற்போது கருப்பி என்று அழைத்தால் மகிழ்ச்சி அடைகிறது. இக்கதையின் தலைப்பு கருப்பி என்னும் எருமை. அவரவர் நிறமே அவரவர்க்கு அழகு என்கிறது. நிறம் மாறுவது ஆபத்தையே உண்டாக்கும் என்றும் உணர்த்துகிறது. எருமை கருப்பாக இருந்தால்தான் அழகு.

நல்ல நட்புக்கு மனிதர்கள் மட்டுமல்ல நாய்களும் உதாரணமாக இருக்கும் எனக்கூறும் கதை இரண்டு நாய்கள் ஜாக்கிரதை. டாமியும் ஜோசியும் நல்ல நண்பர்கள். தெருவைக் காப்பவர்கள். தெருவினருக்கும் உதவுபவர்கள். தெருவினரும் இரண்டு நாய்களையும் நன்றாக கவனித்து கொண்டார்கள். இது பக்கத்து தெரு நாய்களுக்கு பொறாமையாக இருந்தது. எப்படியோ ஜோசியை நட்பாக்கி தெருவிற்குள் நுழைந்து வீட்டிற்குள்ளும் நுழைந்து சாப்பிடத் துவங்குகின்றன. டாமி தடுத்ததால் திட்டமிட்டு தாக்க முயல்கின்றன. அப்போது ஜோசி வந்து காப்பாற்றி விடுகிறது. ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்னும் பழமொழியை நினைவூட்டுகிறது. உண்மையான நண்பன் ஒருபோதும் விலகி போகமாட்டான் என்றும் கூறுகிறது.

சிறுவர் கதை என்பதையும் தாண்டி ஒரு சிறந்த கதை ராக்கெட் கனவு. பள்ளியில் மாணவி முதல் மதிப்பெண் பெறுகிறாள். அவளுக்கு ராக்கெட் தயாரிப்பது ஒரு கனவாக உள்ளது. மாலதியின் தந்தைக்கு வெளியூர் அனுப்பி பெண்பிள்ளையை படிக்க வைக்க விருப்பமில்லை. மாலதியின் தந்தையிடம் பள்ளி முதல்வர் பேசி சம்மதிக்க வைக்கிறார். மாலதியின் ராக்கெட் கனவு நிறைவேறும் மகிழ்ச்சியில் இருக்கிறாள். பெண்பிள்ளையானாலும் படிக்க வைக்க வேண்டும், பெண் பிள்ளைகளின் கனவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் பெற்றவருக்கு உள்ளது என்பதையும் உணர்த்துகிறது.

இரண்டு மாணவர்களின் நட்பைப் பேசியது மூன்று சக்கர சைக்கிள். குகன், காளத்தி இருவரும் ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். குகன் போலியோவால் பாதிக்கப்பட்டு மூன்று சக்கர சைக்கிளை பயன்படுத்தி வருகிறான். பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு மேடு இருப்பதால் குகனை வைத்து மூன்று சக்கர சைக்கிளைத் தினசரி தள்ளி வருபவன் காளத்தி. இதனால் பள்ளிக்கு தினசரி தாமதம். ஆசிரியர் அறிவுறுத்தியும் தாமதப்படுதல் தவறுவதில்லை. ஒருமுறை குகனை வைத்து காளத்தி மூன்று சக்கர சைக்களிள் தள்ளி வருவதை ஆசிரியர் பார்த்து விட தன் தவறை உணர்ந்து அவரும் தள்ளி விடுகிறார். சக மாணவன் படிப்பதற்கு உதவ வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஆசிரியர்களும் உண்மை அறியாமல் மாணவர்களை திட்டக்கூடாது என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.

சரித்திர கால கதை என்றாலும் சமகால பிரச்சனையை பேசிய கதை சிறகு முளைத்த விதைப்பந்து. மன்னன் காற்று வரவில்லையென மந்திரியிடம் ஆலோசனை கேட்க மரங்கள்தான் காற்றைத் தடுத்து விடுகின்றன என்று கூற முட்டாள் மன்னனும் மரங்களை வெட்டச் சொல்லி உத்தரவிடுகிறான். மரங்கள் வெட்டிய பின் மழை பெய்யாமல் பஞ்சம், பசி, பட்டினி ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மக்கள் மன்னரிடம் முறையிட மந்திரிகளிடம் ஆலோசனை கேட்க மீண்டும் வளர்ப்பதுதான் ஒரே வழி என்று ஆலோசனைக் கூற மரவிதைகள் காடெங்கும் வீசப்படுகின்றன. மழை பெய்து மரங்கள் வளர்ந்து புது வனம் பிறந்தது. இக்கதையில் பல விசயங்கள் சொல்லப்பட்டுள்ளன. தவறான ஆலோசனை வழங்கக் கூடாது. மந்திரி சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது. மிகமுக்கியமாக மரங்களை வெட்டக்கூடாது. மன்னன் முட்டாளாக இருந்தாலும் தவறே செய்தாலும் சுட்டிக்காட்டப்பட வேண்டும். சுட்டிக்காட்டப்படாததும் குற்றமே என்கிறார். மன்னர் வெளிநாடு செல்வதாக கதை வருவது நடப்பை விமர்சிக்கிறது.

இசை என்பது கூட்டணிதான். தனித்த இசை சாத்தியமில்லை. மத்தளமும் நாதஸ்வரமும் இணைந்து இசைத்தால்தான் மக்களுக்கு இன்னிசை கிடைக்கும். இரண்டும் ஒத்திருக்க வேண்டும். யார் பெரியவர் என்று போட்டி வந்தால் இரண்டுக்குமே வாழ்விருக்காது. வாய்ப்பிருக்காது. யார் பெரியவர் என்னும் கதையில் இரண்டுக்கும் போட்டி வர மக்களால் புறக்கணிக்கப்பட்டு ஓரம்கட்டப்படுகின்றன. இரண்டும் தவறை உணர்ந்து வாய்ப்பு வர சரியாக பயன்படுத்தி மீண்டும் இசைக்கத் தொடங்கின என கதையை முடித்துள்ளார். எந்த ஒரு செயலானாலும் இணைந்து செயல்பட்டாலே வெற்றி நிச்சயம் கிடைக்கும். யார் பெரியவர் என்று போட்டி வந்தால் எவருக்குமே வெற்றி கிட்டாது.

ஒரு கிராமத்தில் ஏற்றத் தாழ்வு உள்ள மனிதர்களிடையே நிலவும் பிரச்சனையைப் பேசுகிறது ஒரு கதை. முகிலன் தூய்மைப் பணியாளன். அவன் பணியாற்றும் போது நஞ்சன் மீது சாக்கடை நீர் பட்டுவிடுகிறது. மன்னிப்பு கேட்டும் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. பழி வாங்கத் துடிக்கிறான். திருவிழாவின் போது முகிலனுக்கு முதல் மரியாதை செய்யும் போது தடுக்கிறான். ஊரார் நஞ்சன் செயலைக் கண்டித்து நஞ்சனையே தூய்மைப் பணி செய்ய பணிக்கின்றனர். மறுத்தவன் தூய்மை பணி செய்யாததால் ஊர் நாற்றமடைவதைக் கண்டு தூய்மை பணியைத் தொடங்குகிறான். நஞ்சன் பணி தொடங்கியதைக் கண்டு முகிலனும் பணியில் இறங்கிவிடுகிறான். நஞ்சன் மன்னிப்பும் கேட்க ஊர் இயல்பு நிலைக்கு திரும்பி அடுத்த வருட திருவிழாவிற்கு தயாராகின்றனர். இக்கதையின் தலைப்பு ‘பிறப்பொக்கும்’.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்

என்னும் திருக்குறளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. செய்யும் தொழிலை வைத்து ஒருவரை இழிவாக பார்க்கக் கூடாது என்கிறது. இக்கதை நீண்டதாயினும் சிறப்பாக எழுதியுள்ளார்.

ஒரு குழந்தையின் மன இயல்பைக் காட்டியது மீண்டும் உயிர் பெற்ற பலூன். ஆதிக்கு பச்சை பலூன் மிகவு‌ம் பிடிக்கும் ஒரு விசயத்தை வைத்து ஒரு சிறுகதையைச் சொல்லியுள்ளார். பலூனில் காற்று போனால் குழந்தைகள் அழுவது இயல்பு. ஆதியும் அழுகிறான். தாத்தாவின் முயற்சியால் மீண்டும் பலூன் ஊதி பெரிதாக்கப்படுவதைக் கண்ட ஆதிக்கு மகிழ்ச்சி. பலூனின் சுருக்கங்கள் நீங்கி ஆதியின் முகம் போல் உருண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் இறுதியில் பச்சை பலூனைப் பார்த்தால் ஆதியிடம் சேர்ப்பீர்களா என்று குழந்தையிடம் உரையாடுவதாக கதை நிறைவடைகிறது. கதையை குழந்தைகளிடம் கடத்தியுள்ளார். குழந்தைகளையும் பங்கெடுக்கச் செய்துள்ளார்.

யாளி என்னும் பயங்கர மிருகம் என்னும் தொகுப்பின் இறுதிக்கதையும் சிறுவர்களுடன் உரையாடுவதாகவே முடித்துள்ளார். அணையில் நீர் இருந்துள்ள அணைக்குள்ளிருக்கும் கோவில் தெரிவது இயல்பானதே. சேலம் மேட்டூர் அணையில் உள்ள கோவில் நீர் வற்றிய போது தெரிகிறது. கவிஞர் எழுதியது கற்பனை எனினும் யாளி என்னும் ஒரு மிருகம் உண்மையிலேயே இருந்துள்ளது என்கிறார். டைனோசருக்கு கிடைத்தது போல் யாளி இருந்ததற்கான ஆதாரம் கிடைக்கும் என்கிறார். யாளியின் வகைகளையும் கூறியுள்ளார். சிற்பங்களையும் வர்ணித்து கண்முன் நிறுத்தியுள்ளார்.

இத்தொகுப்பில் பத்து சிறுகதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு முத்து. இத்தொகுப்பிலுள்ள சிறுகதைகள் முந்தைய தொகுப்பிலுள்ள சிறுகதைகளை விட சிறந்ததாயுள்ளன. கதை அமைப்பு, சொல்முறை சிறப்பு. ஒரு தேர்ச்சியும் முதிர்ச்சியும் தெரிகிறது. சிறுவர்களுக்கு எழுதியவை என்று சொல்ல முடியாத அளவிற்கு சிறுகதைகள் உள்ளன. எழுத்தாளர் உமையவன் சிறுவர் கதைகளைத் தாண்டி சிறுகதை உலகிற்கு வந்தால் நிச்சயம் பேசப்படுவார். சிறுகதைகளுக்குரிய தன்மையைக் கொண்டுள்ளன இச்சிறுவர் கதைகள். உள்ளடக்கங்கள் சிறப்பு. சிறுவர்களுக்கு எதை சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்னும் சூத்திரத்தை நன்கு அறிந்துள்ளார் என்பதையே கதைகள் காட்டுகின்றன. ஒவ்வொரு கதையிலும் குறைந்தபட்சம் ஒரு நீதி உள்ளது. நீதியை நேரடியாக சொன்னால் சிறுவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என சிறுகதை வடிவம் மூலம் சிறுவர்களுக்கு சொல்லியுள்ளார். சிறுவர் இலக்கியத்தில் கிணற்று பூதம் கவனம் பெறும். எழுத்தாளர் உமையவனுக்கு வாழ்த்துகள்.

நூல் அறிமுகம் எழுதியவர் :

பொன். குமார்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *