சூரியன் மறைந்தாலும் அதன்
ஒளி மறையாத அந்திமாலை
வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள்,
கூடுதிரும்பும் இணை மைனாக்கள்,
இளம்தென்னை உரசலோசை,
முந்தாநாள் முடிந்துபோன
சண்டையை மீளக்கொணர
வாசலில் அமர்ந்து
வசைபாடும் பக்கத்துவீட்டு அம்மா,
காற்றிலாடும் வேம்பின் கிளைகளில்
கொஞ்சிப் பேசிடும் பூனைக் குருவிகள்,
நாள்பூரா உழைத்துத் திரும்பும்
தாயின் அன்பிற்காய்க் காத்திருக்கும் சீருடைச் சிறுமி,
தூரத்துக் குளமொன்றில்
பெருந்துணியொன்றை அடித்துத் துவைக்கும்
‘தொப்’ ‘தொப்’பெனும் ஓசை,
எல்லாம் ‘அழகு’ தான் கிராமத்தில்.
இருந்தும் தவணை முறையில்தான் பிடிக்கிறது கிராமத்தை.
ஜாதியை தங்கள் பெருமையென
நினைக்கும் பல ‘மனித’ மனங்களால்.
ஜாதிவாரி தெரு இருக்கும் கிராமங்களை அழகென்று சொன்னால்
அழகுக்கே அது அவமானம்.
-ஆதிரன் ஜீவா
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.