தெரியும் ஆனால் தெரியாது..
மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தை கலங்கடித்த உலகையே ஸ்தம்பிக்க வைத்த ஒரு சம்பவம் சில கேள்விகளின் வழியே பிறந்தது என்பதை நம்ப முடியுமா? CROWD STRIKE என்கின்ற அந்த நிறுவனத்தின் அடித்தளங்கள் ஒரு சாதாரண தொழில் நுட்ப உதவியாளரால் கேட்கப்பட்ட சில கேள்விகளால் அவருக்கு தோன்றிய வகையில் அவர் அறிவியலை பயன்படுத்தி தீர்வுகளை காண்பதாக நினைத்துக்கொண்டு பிரச்சனையை கிளப்பி விட்டார் என்பதை நாம் எப்படி பார்ப்பது…
கேள்விகள் தான் இன்றைக்கும் பிரதானமாக உள்ளன. ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் மிக அற்புதமானது. இது குறித்து எனக்கு தெரியும் ஆனால் தெரியாது , சாரி.. உலகமே பாராட்டப் போகிறது என்று நினைத்து நான் செய்த ஒரு வேலை இந்த மாதிரி சிக்கலில் போய் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டார். அவர் எழுப்பியிருக்கும் இந்த பிரச்சனை குறித்த கேள்விகளால் இன்றைக்கு இணையம் நிரம்பி வழிகிறது.
இதுவரை யாருக்கும் விடை தெரியாத கூகுள் கூட பதில் சொல்ல முடியாத சுமார் 60 கேள்விகள் என்னிடம் உள்ளன..
உதாரணமாக 2004 சுனாமியின் போது இலங்கையிலும் தாய்லாந்திலும் சுனாமி நில அதிர்வு வருவதற்கு இரண்டு மணிநேரம் முன்னதாக அதை அறிந்து கொண்டு யானைகள் தப்பியது. கூடவே பல 100 மக்களையும் காப்பாற்றியது எப்படி?
நம்முடைய ஷீஸ்மோ கிராப் காண்பிக்க முடியாத ஒன்றை எப்போதுமே விலங்குகள், பறவைகள் அறிந்து கொள்வது எப்படி?
உள்ளுணர்வு என்பது விடையானால் அந்த உள்ளுணர்வு மனிதர்களுக்கு இல்லாமல் போனது ஏன்..?
இதோ இன்னொரு கேள்வி.
நாம் ஏன் கனவு காண்கிறோம்?
உறங்கும் போதெல்லாம் கனவு வருவதில்லை ஏன்? சில சமயம் ஒரே கனவு திரும்பவும் வருவது ஏன்?
நம்முடைய மரபணுவுக்கும் நம் கனவுகளுக்கும் தொடர்பு உண்டா?
மேலும் ஒரு கேள்வி..
ஒளி வேகத்தை விட கூடுதல் வேகத்தில் நம்மால் பயணம் செய்ய முடியாது ஏன்?
இதோ மற்றொரு கேள்வி..
இந்த பூமியில் முதல் மரபணு எப்படி உருவானது?
அதைவிட சென்ற வாரம் ஒரு மாணவர் என்னிடம் கேட்ட கேள்வி..
கருவில் இருக்கும் குழந்தைக்கு தான் என்கிற சுயம் எப்போதிலிருந்து உருவாகிறது?
இந்த உலகில் விடை தெரிந்தவர்களை நாம் அதிகம் மதிக்கிறோம் குறிப்பாக இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் கல்வி முறை விடைகளை துரத்திக்கொண்டு அலைகிறது. கேள்விகளுக்கான விடைகள் கைடு எனப்படும் விடை புத்தகங்கள் – பாடப்புத்தகங்கள் விற்பதற்கும் முன்னாலேயே விற்று தீர்ந்து விடுகின்றன. தினந்தோறும் தேர்வுகள், வாரத் தேர்வுகள், சூழல் தேர்வுகள், திடீர் தேர்வுகள் , மாதத்தேர்வுகள், காலாண்டுத் தேர்வு, அரையாண்டு தேர்வு, செமஸ்டர் தேர்வு, பொதுத்தேர்வு, இவை எல்லாமே கேள்வி தாள்கள் கொடுக்கப்பட்ட தேர்வுகளாக இருக்கலாம். ஆனால் இவை கேள்விகளை அடிப்படையாக கொண்ட தேர்வுகள் அல்ல. இவை அனைத்துமே விடைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள்.

ஆப்பிள் ஏன் மரத்தில் இருந்து கீழே விழுந்திட வேண்டும்? அது ஏன் வானத்தை நோக்கி செல்லவில்லை என்று நியூட்டன் கேட்டுக் கொண்டதற்கும், ஒளியின் வேகத்தில் கூடவே நாமும் பயணித்தால் சம அளவு வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஒளியை பார்த்தால் அது பார்ப்பதற்கு எப்படி இருக்கும் என்று ஐன்ஸ்டீன் தன்னுடைய எட்டாவது வயதில் கேட்டுக்கொண்டதற்கும் , பள்ளிக்கூடங்களுக்கும் தேர்வுகளுக்கும் சம்பந்தமே கிடையாது என்பது உண்மைதானே. சரியான கேள்வியை உருவாக்கிக்கொள்ளும் அறிவாற்றல் தான் இந்த உலகத்தில் பெரிய விஷயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறது.
ஒரு குழந்தை பள்ளியில் உள்ள ஆசிரியர்களின் கேள்விகளுக்கு விடை கூறியதா என்பதை விட அந்த குழந்தை அன்றைய நாளில் எத்தனை சிறப்பான கேள்விகளை தனக்குள் உருவாக்கிக் கொண்டது என்பது தான் ஒரு கல்வி முறையின் தரத்தை நிர்ணயிக்கும் விஷயம். ஐசக் நியூட்டனும் ,ஐன்ஸ்டீனும் பழைய புத்தகக்கடை விஷயமாகி பல வருடங்கள் ஆகின்றது. இப்போது கேட்கப்படும் கேள்விகள் வித்தியாசமானவை. ஒரு விஞ்ஞானி ஏன் என்று கேட்கிறார் ஒரு பொறியாளர் எப்படி என்று கேட்கிறார்.
நீங்கள் நினைத்துப் பாருங்கள் ஒரு கணிதவியல் நிபுணர் அல்லது ஒரு டேட்டா சயின்டிஸ்ட் என்ன மாதிரி கேள்விகளை கேட்பார்?
ஒரு டேட்டா சயின்டிஸ்ட் கேட்கும் கேள்வியும் ஒரு கணிதவியல் நிபுணர் கேட்கும் கேள்வியும் ஏறக்குறைய ஒன்றாக இருக்கிறது பிரச்சனை என்ன?
அதற்கான தீர்வை எப்படி அடைவது? இந்த பிரச்சனையின் தீர்வை அடைய வேண்டிய அவசியமென்ன? இப்படி இன்றைக்கான கேள்விகள் மாறுகின்றன.

அதைவிட ஒரு அற்புதமான விஷயம் இருக்கிறது. இந்த பிரச்சினைக்கான தீர்வை பலரும் யோசிக்கிறார்கள் இந்த பிரச்சினைக்கான தீர்வை எப்படி புதுமையான முறையில் ஏற்கனவே இருக்கிற கண்டு பிடிப்பை மேம்படுத்தி நான் அடைய முடியும் என்று தான் இன்றைக்கு ஒரு மென்பொருள் பொறியாளர் கேட்டுக்கொள்கிறார்.
நவீன கேள்விகள் வித்தியாசமானவை பண்டைக்கால கோட்பாட்டு விஞ்ஞானிகளைப் போல இப்போது கேள்விகள் நேரடியானவை அல்ல. இன்றைக்கு இருக்கும் அறிவியல் உலகம் அடிப்படை அறிவியல் மற்றும் செயல்பாட்டு அறிவியல் என்ற இரண்டு தளங்களில் இயங்குகிறது. டேட்டா சயின்டிஸ்ட் என்கின்ற பெரிய தரவுகளை உள்ளடக்கிய ஒரு விஞ்ஞானம் நம்கையிலிருக்கும். விவரங்களை எப்படி அணுக வேண்டும் என்கின்ற புதிய கேள்வியை முன்வைக்கிறது..
உதாரணமாக சமீபத்தில் ஒரு திறந்த கூட்டத்தில் ஒரு கல்லூரி மாணவிகேட்ட கேள்வி என்னை திணறடித்தது. இப்போது வண்டிகளில் பொருத்தப்படும் FASTAG அட்டைகள் எப்படி வேலைசெய்கின்றன?
தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கின்ற வெறும் கேமராக்களை பயன்படுத்தி எப்படி நம்மிடமிருந்து அவர்களால் பணத்தை பறிக்க முடிகிறது? என்று அவர் கேட்டார்… கூகுள் இல் இதற்கு தெளிவான பதில் இல்லை..
உண்மையில் ஃபாஸ் டேக் என்பது ஏழு வகையானதாக இருக்கிறது. இவை ஒவ்வொன்றும் நிறங்களால் ஆனவை குறிப்பாக SBI FASTAGS என்பவை செயல்படும் விதத்தை பிறகு நான் விரிவாக அறிந்து கொண்டேன் ஆனால் அன்றைக்கு நேரடியான மேடையில் அவரிடம் நிறங்களை வைத்து நிறத்திற்கு ஏற்றார் போல பணம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்று நான் விவரித்தது தவறானபதில்அல்ல. இது மாதிரியான கேள்விகள் புதிது புதிதாக உருவாக்கப் படவேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project6.jpg)
ஃபாஸ்டாக் பற்றி நம்முடைய பாடத்தில் குழந்தைகளுக்கு நாம் எதுவும் சொல்லிக் கொடுக்கவில்லை என்று நினைத்த பொழுது ஏன் அப்படி நடந்தது என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் பலவற்றை நாம் தவற விட்டு கொண்டிருக்கிறோம். வானவில் உருவாவதை பற்றி பாடம் நடத்தும் நாம் அந்த நிறங்களைக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலைவரி வசூலிக்கப் படுவதை எட்டாம் வகுப்பு அளவிலாவது சேர்க்க வேண்டும்.
வாகனத்திற்கு ஃபாஸ்டேக் அட்டைகள் வாங்கும் பொழுதே அந்த வண்ணங்கள் தீர்மானிக்கப் படுகின்றனகார்.
ஜிப் , வேன் , டாட்டா ஏஸ் போன்றவற்றுக்கு வயலட் நிரம் வழங்கப்படுகிறது. இலகுவான வணிக வாகனத்திற்கு ஆரஞ்சு நிறம் வழங்கப்படுகிறது. மூன்று ஆர்ம் உடைய அதாவது அதிகமான சக்கரங்களுடைய வணிக வாகனங்களுக்கு மஞ்சள் நிறம் வழங்கப்படுகிறது. பேருந்துகளுக்கும் ட்ரக் போன்றவைகளுக்கும் பச்சை நிறம் இப்படி வண்ணங்களின் வேற்றுமை பேணப்படுகிறது.
இப்படியான புதிய கேள்விகளை உருவாக்கி கொள்பவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களை கண்டுபிடிப்பாளர்களாகவும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துன் இன்னோவேட்டர்கள் ஆகவும் மாற்றவேண்டும். FASTAG உருவாக்கியவர்கள் எத்தகைய கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.. அவை பண்டைக்கால அறிவியல் எழுப்பிக்கொண்ட கேள்விகளிடமிருந்து எப்படி வேறுபடுகிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
இன்றைய காலகட்டத்தில் ஏன், எதற்கு, எப்படி, எப்போது , யாரால் என்கின்ற ஐந்து வகை கேள்விகளைக் கடந்து அது ஏன் இப்படி இருக்ககூடாது?
நாம் இந்த வகையில் இதை செய்தால் எப்படி இருக்கும்?
இதை விட எளிமையான வேறு ஏதாவது வழி இருக்கிறதா?
தனிப்பட்ட ஒருவர் இல்லாமல் அனைவருக்கும் பயன் படும்படி இதை மாற்றுவது எப்படி?
இன்னும் எளிதாக்குவதற்காக இதை நம்முடைய பாக்கெட் சைஸ்க்கு மாற்ற முடியுமா?
ஒரே ஒரு உடல் உபாதைக்கு ஒரு மருந்து என்பதை கடந்து ஒருவருடைய உடலில் அடிப்படை நாலைந்தை காப்பாற்றும் ஒரு மருந்து தயாரிக்கப்பட வாய்ப்புள்ளதா? இப்படி புதிய வகை கேள்விகள் உருவாகிக் கொண்டே போகின்றன….
எனவே அறிவியல் மாறிவிட்டது புதிய கேள்விகளுக்கான கதவுகள் திறக்கப் பட்டுவிட்டன.. எனக்கு எல்லாம் தெரியும் என்கிற காலத்தை கடந்து தெரியும் ஆனால் தெரியாது என்கின்ற வெளியை நோக்கி புதிய அறிவியல் தொழில் நுட்பம் நம்மை அழைத்துச் சென்றுள்ளது. சமீபத்தில் அற்புதமான ஒரு உதாரணத்தை வாசித்தேன் ஒரு விஞ்ஞானி ஒரு பொறியாளர் ஒரு கணிதவியலாளர் ஒரு டேட்டா சயின்டிஸ்ட் இவர்களின் சிந்தனை எப்படி மாறுபடும் என்பது குறித்த சிறப்பான விளக்கம் இந்த கதையில் அடங்கியிருந்தது.
ஒரு ஆப்பிள் தோட்டத்தில் ஒரு நாள் ஒரு விஞ்ஞானி ஒரு பொறியாளர் ஒரு கணிதவியலாளர் மற்றும் ஒரு டேட்டா சயின்டிஸ்ட் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பொறியாளர் கேட்கிறார் ஆப்பிள்களை கீழே விழவேண்டுமானால் நான் என்ன செய்ய வேண்டும் பிறகு அவர் ஒவ்வொரு மரத்தையும் அசைக்கிறார் அவற்றிலிருந்து ஆப்பிள்கள் கொட்டுகின்றன. ஒரு விஞ்ஞானி கேட்கிறார் ஆப்பிள்கள் ஏன் கீழே விழுகின்றன? எனவே மேல் நோக்கி செல்லவில்லை? அவர் உயிர்ப்பு கோட்பாட்டின் அடிப்படைங்களை ஆராய தொடங்குகிறார் நியூட்டன் விட்ட இடத்தில் இருந்து ஆப்பிள்கள் எந்த கோணத்தில் தரையை நோக்கி விழும், எந்த வேகத்தில் விழும், அப்படி விழுகின்ற பொழுது அவற்றின் நிலை என்ன ஆகும் என்று அவருடைய ஆராய்ச்சி விரிவடைகிறது. டேட்டா சயின்டிஸ்ட் கேட்கிறார் மரத்தின் தண்டு அளவிற்கும் மரங்கள் அசைக்கப்படும் பொழுது கீழேவிழும் ஆப்பிள்களின் சதவீதத்திற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? அவர் ஒவ்வொரு மரத்தின் தண்டு சுற்றளவு ஒவ்வொரு மரத்திலும் உள்ள ஆப்பிள்களின் எண்ணிக்கை ஆப்பிள்களின் கீழே விழும் எண்ணிக்கை இவற்றையெல்லாம் விபரமாக திரட்டிவிடுகிறார். இருந்தவை அனைத்தையும் பகுப்பாய்வு செய்து தண்டு அளவு மற்றும் கீழேவிழும் ஆப்பிள்களின் சதவீதத்திற்கு நாம் அசைக்கின்ற வேகத்தில் சதவீதம் எந்த வகையில் தொடர்புடையது என்கின்ற புள்ளி விவரப்புலியாக அவர்களத்தில் இறங்குகிறார்.

கடைசியா ககணிதவியலாளர் வந்தார் ஒரே மரத்தில் உள்ள ஆப்பிள்கள் மரங்கள் அவற்றின் தண்டுகள் தோப்பு நீங்கள் ஒவ்வொருவரும் நீங்கள் அனைவரும் உங்களுடைய முகம் மூக்கு உங்கள் பார்வையில் உள்ள படுகின்ற ஆப்பிள் பழங்களின் எண்ணிக்கை நீங்கள் அசைக்கின்ற உங்கள் கையினுடைய பலம் இவற்றினிடையே ஒரு பொது நேர் கோட்டு சமச்சீர்மை மற்றும் சமதளம் இருக்க முடியுமா? என்று அந்த கணிதவியலாளர் கேட்டுக்கொள்கிறார். பின்னர் அவர் அச்சுத்தொகுப்பு கோட்பாட்டை முன்வைத்து அதிலிருந்து அறியப்பட்ட அனைத்து சுருக்ககணிதத்தையும் முன் மொழிகிறார்.
இப்படித் தான் இன்றைய அறிவியல் புதியவகை கேள்விகளின் அடிப்படையில் தெரியும் ஆனால் தெரியாது என்று வேலை செய்கிறது. இன்னொரு விஷயம் இன்றைக்கு வீடியோ கேம்களில் மொபைல் மல்டி பிளேயர் வீடியோ கேம் நடத்தைக்கான கேள்வி ஏன் என்பதை விட எப்படி என்பதன் சிக்கலில் உள்ளது. அவர்கள் கேம்களில் விளையாடுபவர் செய்யும் செயல்களால் எப்படி விளையாடுபவரின் நடத்தை பாதிக்கப்படுகிறது என்பது குறித்த கேள்விகளுக்குள் இருக்கிறார்கள். இதற்கு மேல் தான் ஏன் என்கிற கேள்வி உருவாக்கப்பட வேண்டும். பெரும்பாலும் அறிவியலில் ஏன் என்கிற கேள்வி முதலில் கேட்கப்பட்டு எப்படி என்கிற கேள்வி அதனை பின் தொடரும் ஆனால் இந்த வீடியோ கேம் அறிவியலில் நிபுணர்களின் கருத்து என்னவென்றால் எப்படி என்பதில் தான் உங்களுடைய தேடல் தொடங்குகிறது. வீடியோ கேம்களின் அறிவியலில் நடைமுறை அணுகுமுறை இவர்கள் செய்யும் பரிசோதனைகள் அனைத்துமே எப்படி என்பதில் கவனம் செலுத்துகிறது. நீண்ட காலமாகவே ஏன் என்பதில் கவனம் செலுத்தி அறிவியல் அறிவைப்பற்றிய காலப்போக்கில் விளையாடுபவர்னுடைய நடத்தை குறித்த அடிப்படை புரிதல் ஆகமாறியபொழுது உளவியல் கலந்த தொழில் நுட்ப அடித்தளங்கள் எப்படி என்ற பகுப்பாய்வுனுடைய பின் தொடரலை முதன்மை ஆக்கிக்கொண்டது.
எனவே இன்று பதில்களை விட கேள்விகள் அதிகமான முக்கியத்துவம் பெறுகின்றன. தெரியும் ஆனால் தெரியாது என்கிற வகை நவீன தொழில் நுட்ப அறிவியல் சிந்தனையாளர்களை உருவாக்குவது என்பது நாம் அறிவியலில் முதன்மை பெறுவதற்கான மிக முக்கியபடி நிலை. இதை நம் கல்வி முறை எப்போது உணர போகிறது..என்கிற கேள்வியோடு இதை முடித்துக் கொள்ளலாம்.
கட்டுரையாளர்:
![]()
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


திருவிளையாடல் திரைப்படத்தில் கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா என்பார் புலவர். இல்லை இல்லை எனக்கு கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லத் தெரியாது என்பார் தருமி.
ஆனால் கேள்வியும் அறிவுசார் உலகத்தை கட்டமைக்கிறது.
பெரிய பெரிய சாதனைகள் அனைத்தும் அன்றிலிருந்து இன்றுவரை கேள்விகளால்தான் வளர்ச்சி கண்டு இந்த உலகம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
Fasttag நிறம் குறித்து படிக்கும் பொழுது காரில் உள்ள எனது Fastagஐ பார்த்தேன். Violet நிறம் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை இப்பொழுதுதான் பார்த்தேன்.
நமது அலுவல்கள் நமக்கு hectic scheduleல் இருப்பதால் அறிந்திருக்க வேண்டிய பல விஷயங்களை அறியாமல் தினமும் கடந்துவிடுகிறோம். அதில் ஒன்று fasttag உதாரணம்.
இன்றைய சூழலில் ஏன், எதற்கு, எப்படி என்பதற்கு பதிலாக எப்படி, ஏன் என்று ஆய்விற்கு உட்படுகிறார்கள் என்பது சுவாரஸ்யமான விஷயம்.
பலகாலமாக இந்த நாட்டு கல்விமுறை கற்க வருபவர்களின் தேர்ச்சியை ஆவணப் படுத்துவதற்காக தேர்வு நடத்துகிறது. அதற்கு மாணவர்கள் ஒத்து ஊதிக்கொண்டிருக்கிறார்கள். (நானும் ஊதினேன்).
இந்த கல்விமுறை மாணவர்களின் கேள்விகளால் மாறுவது எப்போது என்ற கேள்விக்கும் விடை தெரியாமல், தெரியும் ஆனால் தெரியாது கட்டுரை முடிகிறது.
பெருமதிப்பிற்குரிய முனைவர் ஆயிஷா நடராசன் சார் அவர்களின் அறிவியல் சார் எழுத்து வேகம் என் வாசிப்பின் வேகத்தைவிட அதிகம். அனைத்தையும் வாசித்துவிட வேண்டும் என்ற ஆவலில் நான் திணருவது என்னவோ உண்மைதான்.
மிக்க நன்றி சார். உங்கள் கட்டுரைகளோடு எங்கள் தினசரி பயணம் தொடரட்டும்.
கட்டுரை மிகச்சிறப்பு வாழ்த்துக்கள் சார்.🙏🙏🙏
இன்றை வகுப்பறை பதில்களுக்கு எவ்வளவு முக்கியதுவம் தரப்படும் இடமாகவும் , சிந்திக்கின்ற, கேள்வி கள் வழியாக ஒன்றை புரிந்து கொள்ள முடியாத நிலைக்கு தள்ளி உள்ளது. ஜன்ஸ்டின் மேற்கோள் தான் நினைவுக்கு வருகிறது Learn from yesterday,live for today, hope for tomorrow.The important thing is not to stop questioning.
இந்திய கல்விமுறை, இன்றும் கறிக்கு உதவாத ஒரு ஏட்டுச் சுரைக்காய் ஆக இருப்பதற்கு காரணம், விடைகளை அடிப்படையாகக் கொண்ட தேர்வுகள்தான் என்பதை மறுக்க முடியாத அளவுக்கு விளக்குவது முதல், இந்த கூகுள் யுகத்தில் கூட, விடை இல்லாத பல கேள்விகள் உண்டு என்று பட்டியல் இடுவது, உயர்தரமான கேள்விகள்தான் விஞ்ஞானி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு அடிப்படை என்பதை உதாரணங்களுடன் விளக்குவது, இறுதியில் விஞ்ஞானி பொறியாளர் மற்றும் கணிதவியலாளர் ஆகியோரின் உரையாடல் கதை என பல தளங்களில் பயணிக்கும் மிக ஆழமான மற்றும் அருமையான கட்டுரை இது. முக்கியமாக வெகுசன வாசிப்பிற்கான மிகச்சிறந்த கட்டுரையும் கூட! கட்டுரையாளர் ஆயிஷா நடராசன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏
சென்ற 19/07/24 அன்று Crowdstrike நிறுவணத்தார் பதிவேற்றிய மென்பொருளில் நுழைந்துவிட்ட சிறு தற்கவியல் தவறால் உலகளாவிய மைக்ரோசாப்ட் கணினிகள் ‘நீலத்திரை இறப்பை’ சந்தித்தது ஒரு பெரும் விபத்து. இந்த அரிதினும் அரிதான விபத்து குறித்த அந்த நிறுவனத்தின் விளக்கம் தங்களின் சிந்தனையைத் தூண்டி, இன்றைய கல்விக் கொள்கைகளின் குறைகளை விமரிசிக்க வைத்துவிட்டது! விமரிசனம் நூறுக்கு நூறு உண்மை. நான் பணிபுரிந்த காலத்தில் நிர்வாகத்தினரின் ‘விளைவுதான் முக்கியம்’ (Result is only important ) என்ற அணுகுமுறையை அனுபவித்திருக்கிறேன். அதைத்தான் தற்போது கல்வி முறையிலும் கடைபிடிக்கப்படுகிறது.
வழக்கம்போல் அருமையானதொரு கட்டுரை. நல்ல கேள்விகள் கேட்கும் பொழுது தான் கற்றல் முன்னேறுகிறது. நான் பள்ளிகளுக்கு வகுப்பெடுத்த சென்ற பொழுது அரை மணி நேரம் வகுப்பட்டால் முக்கால் மணி நேரம் கேள்விகள் கேட்குமாறு கூறுவேன். அப்படி கேட்கப்பட்ட கேள்விகள் எனக்குத் தெரியாத பட்சத்தில் எனக்குத் தெரியாது படித்து பின்னர் பதில் கூறுகிறேன் என்று கூறி வந்தேன். கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான கேள்விகளை முதலில் எனக்கு தெரியாத கேள்விகளாக இருந்தன அவற்றை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி பின்னர் பதில் கண்டுபிடிக்க முயன்றேன். அப்படி கண்டறிந்த பதில்களைத் தான் பின்னர் புத்தகங்களாக தொகுக்க ஆரம்பித்தேன். அருமையாக கேள்வி கேட்க வேண்டிய அவசியத்தை கட்டுரையில் விவரித்து உள்ளீர்கள்