சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன். முழுக்க முழுக்க தொழிலாளர் போராட்டம் மற்றும் தொழிற்சங்கம் சார்ந்து எழுதப்பட்ட நாவலை நான் முதன்முதலில் வாசிக்கிறேன்.
பஞ்சாலையில் ஊதிய உயர்வு கோரி நடந்த வேலை நிறுத்த போராட்டத்தை மையமாக வைத்து நாவல் நகர்கிறது.
நாவல் வழியாக முதலாளி வர்க்கம் தொழிலாளிகளை எப்படி வஞ்சிக்கும் என்பதை நுணுக்கமாக அறிந்து கொள்ள முடிகிறது. தொழிலாளிகள் வஞ்சிக்கப்படும் போதெல்லாம் தொழிற்சங்கங்கள் எவ்வாறு பாதுகாத்து வருகிறது என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
போராட்டத்தில் முன்னின்ற 16 ஊழியர்களை மட்டும் வேலையில் இருந்து நிறுத்தி வஞ்சித்த நிர்வாகத்தை எதிர்த்து போராடி வென்றார்களா இல்லையா என்பதை வாசிப்பின் வழியே அறிய முடியும்.
ஒரு சங்கத்தோழர்களை திறம்பட வழி நடத்துவது எவ்வாறு, அதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன, பலதரப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றினையும் சங்கத்தில் ஒவ்வொருவரின் என்ன ஓட்டமும் ஒவ்வொரு விதமாக இருக்கும் அதை எல்லாம் கடந்து ஒற்றுமையாக நின்று போராட்டம் நடத்த வேண்டிய அவசியத்தையும் நாவல் முழுவதும் காணலாம்.
தோழர்கள் வாழவந்தான், ராமராசு, சங்க செயலாளர், சின்னச்சாமி மிக முக்கியமான பாத்திரங்கள். ராமராசு தோழரின் தொழிலாளர்கள் மீதான அன்பும் அக்கறையும் யாருக்கும் அமையாது. தான் ஒரு செல்வந்தர் என்ற பகட்டு ஏதுமின்றி மிக இயல்பாக பழகும் குணம் மிக சிறப்பானது. அன்னக்கொடியின் சூழ்ச்சியில் சிக்க இருந்த அபுவை மீட்ட ராமராசுவின் செயல்பாடு எப்போதும் நாம் உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் என்பதை அழுத்தமாக வாசகருக்கு பதியவைத்தது.
வாழவந்தான் தோழரின் போராட்டம் தனிச்சிறப்பானது. ஒற்றை ஆளாய் நிர்வாகத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றது சாதாரண செயல் அல்ல. மேலும் தன்னோடு நின்று விடாமல் எல்லா தோழர்களுக்கும் வழிகாட்டியாக இருப்பது மேன்மையானது.
ஒரு வேலை நிறுத்த போராட்டத்தை செய்வது நிர்வாகத்தை எவ்வளவு பாதிக்குமோ அதைவிட அதிகமாக தொழிலாளர்களை பாதிக்கும் என்பதையும் அதையும் தாண்டி போராட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது என்பதை நாவல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒருவருக்கு ஜாமீன் போட்டதற்காக கடனில் சிக்கும் ராசுவை மீட்கும் சின்னச்சாமி தோழரின் செயல்பாடுகள் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி.
அபுவுக்கு பேசி வைத்திருந்த மாமன் மகள் செல்வியை வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டு வேலை இழந்த காரணத்தால் திருமணம் செய்து தர முடியாது என்று மறுக்கும் மாமாவை எதிர்த்து அபு திருமணம் செய்தாரா இல்லையா என்பதும் சுவாரசியமான திருப்பம். அபுவுக்கு ஏற்படும் சளி தொந்தரவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர் குணக்கடல் பெயருக்கு தகுந்தார் போல மனிதாபிமானம் மிக்க சிறந்த மருத்துவராக இருந்தது சிறப்பானது.
நோயை கண்டு பயம் கூடாது, இரவு சீக்கிரம் தூங்கினால் சரியாகிவிடும் என்று நோயாளிகளுக்கு ஆலோசனை தரும் குணக்கடல் போன்ற ஆங்கில மருத்துவர்களை தற்காலத்தில் காண்பது அரிது. எத்தகைய மனிதாபிமானம் மிக்க மனிதர்களையும் சாதிய கலவரங்கள் பதம் பார்க்கும் என்பதை தேனி நகரத்தில் ஏற்பட்ட கலவரம் நமக்கும் உணர்த்துகிறது. அந்த கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையே திணறிய போது தோழர்கள் களமிறங்கி பிரச்சினையின் மையத்தை புரிந்து சரிசெய்தது சிறப்பான செயல்.
தேனி நகர வார சந்தை குறித்து நேரில் கண்டதில்லை என்றாலும் தோழர் தேனி சீருடையான் அவர்களின் ஒற்றை வாசம் நாவலில் இருந்து வாசிப்பின் வழியே அறிந்திருந்தேன். அதை இன்னும் விரிவாக இந்த நாவல் அறிமுகம் செய்துள்ளது. ‘குண்டூசி முதல் குமரி வரை கிடைக்கும் சந்தை’ என்று குறிப்பு உள்ளதன் மூலம் அதன் தன்மையை புரிந்து கொள்ள முடிகிறது. சந்தையில் பல் மருந்துகள் ,மூலிகைகள் விற்பதை நான் பார்த்தது உண்டு ஆனால் பல் பிடுங்கும் செயல்பாடுகள் நடக்கும் என்பதை வாசிக்கும் போது சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த காலத்தின் நடைமுறையை அறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாகவும் அமைந்தது.
தோழர்கள் சங்க நிதிக்காக தேனி சந்தையில் உண்டியல் குலுக்குவது சங்கத்தின் செயல்பாட்டையும் அதற்கான நிதியை எவ்வாறு பெறுகிறார்கள் என்பதையும் நேர்மையாக சொல்கிறது.
அதிரடி மன்னன் அன்னக்கொடியை பகடையாக மாற்றி தொழிலாளிகள் ஒற்றுமையை குலைக்க ஆலை நிர்வாகம் மேற்கொண்ட சித்து வேலைகள் அவர்களின் ஒற்றுமையை பாதித்ததா இல்லையா என்பதை வாசிக்க வாசிக்க நெஞ்சத்தில் ஒரு பதட்டம் குடிகொண்டு இறுதி பக்கத்தில் அதற்கான தீர்வை தந்தது சிறந்த வாசிப்பு அனுபவத்தை தந்தது.
நாவலின் வெகு சில இடங்களில் எழுத்துப்பிழைகள் உள்ளது. மேலும் நாவல் நடக்கும் காலத்தை துள்ளியமாக அறிய முடியவில்லை. தமிழ்செல்வன் தோழர் பின் அட்டையில் எழுதிய வாழ்த்துரையில் 1970 காலகட்டம் என்ற குறிப்பை வைத்து மட்டுமே கணிக்க முடிந்தது.
இயற்கை சூழலையும், காட்சிகளையும், நம் கண் முன்னே நிறுத்திய விதம் சிறப்பாக இருந்தது.எந்த விதமான மிகை புனைவும் இல்லாமல் வேலை பாதிப்பு ஏற்பட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை அனுபவத்தை அப்படியே படம் பிடித்து நமது கைகளில் தருகிறது நாவல்.
நன்றி