செ.தமிழ்ராஜ் (Tamil Raj) எழுதிய கூடை நிறைய மீன்கள் (Koodai Niraya Meenkal) - நூல் அறிமுகம் - https://bookday.in/

கூடை நிறைய மீன்கள் – நூல் அறிமுகம்

கூடை நிறைய மீன்கள் – நூல் அறிமுகம்

அரசியலை தன் பகடி கவிதைகளால் எப்பொழுதும் நிரப்பி செல்லும் கவிஞர்: தமிழ்ராஜ் அவர்கள், ஆறு கவிதை நூல், ஒரு விமர்சன கட்டுரை நூல் அதனைத் தொடர்ந்து ஏழாவது நூலாக தான் வாசித்த நூல்கள் குறித்த நூல் விமர்சன கட்டுரைகளாக தொகுத்து கூடை நிறைய மீன்களோடு நம்மிடம் வந்திருக்கிறார்.
அதிக நூல்களை வாசிப்பதும், வாசித்த நூல்களைவிமர்சனம்செய்வதும்,விவாதிப்பதும், முகநூலில் நூல் குறித்த அறிமுகம் செய்வது என்ற பணியினை தொடர்ந்து,
மெனக்கெட்டு வாசித்த புத்தகங்களை விமர்சனக் கட்டுரை நூலாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுக்குரியது.

இன்றைய கால சூழலில் புதிதாக வெளிவரும் நூல்கள் குறித்து விமர்சனம் மற்றும் மதிப்புரையானது,நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், போன்றவற்றில் ஏதோ? ஒரு சிறிய அளவில் விளம்பர பத்தியாக வெளிவரும் சூழலில், விமர்சனத்திற்காக நூல் வெளியிட்ட அறிய செயலுக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்போம்.

கடிதோச்சி மெல்ல எறிக என்ற வள்ளுவனின் வாக்கினை போல் குறைந்தபட்சமேனும் நூலின் நிறை/குறை என்ற அளவில் விமர்சனம் என்பது தேவைப்படுகிறது. படைப்பாளர்களும் நிறைவான படைப்பு என்ற விமர்சனத்திற்கு கன்னத்தை தருபவர்கள், குறைகளை சுட்டிக்காட்டும் பொழுது படைப்பின் மீதான சுய விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு குறைந்து வருகிறது. இடிப்பாரை இல்லாத ஏமார மன்னன் இது ஆள்பவர்களுக்கு மட்டுமல்ல, படைப்பாளருக்கும் பொருந்தும், சீர்தூக்கி செய்யும் விமர்சனம் தேவையான ஒன்றாகும். பாராட்டு/விமர்சனம் இரண்டிற்கும் ஆன கன்னங்களை எப்பொழுதும் தருவதற்கு படைப்பாளிகள் தயாராகவே இருக்க வேண்டும்.

படைப்புலகில் ஆழங் கால் பதித்தவர்களின் நூல்களுக்கு விமர்சனம் எழுதி தன்னை பிரபலப்படுத்திக் கொள்வதும். புதிதாக படைப்புலகில் கால் பதிப்பவர்களுக்கு எழுந்து விடாத அளவிற்கு ஓங்கி அடிக்கும் விமர்சனமும் ஆபத்தானது. கவிஞர் தமிழ்ராஜ் கூடை நிறைய மீன்களில், புதிய படைப்பாளிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். படைப்புலகில் நீண்ட அனுபவம் கொண்டவர்களுக்கு, மலர் தூவுகிறார்.

எவ்வித விருப்பு, வெறுப்பு இல்லாமல் 64 பக்கங்களில் எழுதப்பட்ட நூல் தொடங்கி 2228 பக்கங்களில் வெளிவந்திருக்கும் நூலாக இருந்தாலும் சரி, கூர்மையான விமர்சனப் பார்வையோடும், மிகுந்த அறத்தோடும், நிறைகளை கொண்டாடுவதும், குறைகளை சுட்டிக் காட்டுவதுமாக, புதிய எழுத்துக்களை வாசிக்கும் போது அக மகிழ்ந்து பாராட்டுவதும், சிறந்த விமர்சன நோக்கத்தோடு 56 நூல்களையும், ஆழமாக வாசித்து கடலிலோ,ஆற்றிலோ வலை விரித்து மீன்களை அள்ளி வராமல், ஆற அமர தூண்டிலிட்டு தவமிருந்து காத்திருக்கும் தூண்டில்காரனை போல், ஒவ்வொரு மீனாக பிடித்து கூடையை நிரப்பி இருக்கிறார். 26 அல்புனைவு நூல்கள், 13 கவிதை தொகுப்புகள், 11 நாவல், 6 சிறுகதை தொகுப்புகள் என்று வெவ்வேறு விதமான வாசிப்பு அனுபவங்களையும், நூல் விமர்சனங்களையும், புதிதாக வாசிக்க துவங்கும் வாசகர்களுக்கு எந்த நூலை வாசிக்கலாம் என்ற கவலை இருந்தால் இந்தக் கட்டுரை நூலில் இடம் பெற்ற புத்தகங்களை தேர்வு செய்யலாம். புதிதாக எழுதுபவர்கள் கவிதையை தொடாமல் வர இயலாது.

புதிதாக வெளி வந்திருக்கும் கவிதை தொகுப்புகளை வெளியிட்ட கவிஞர்களை, ஆரத்தழுவி, எளிமையான விமர்சனமாக முதல் தொகுப்பிற்கே உண்டான பலமும் பலவீனமும் பல கவிதைகள் இருக்கின்றன என்று கோடிட்டு காட்டுவதும், சிறுகதை தொகுப்பிற்கு பாராட்டும், அதே வேளையில் செழுமையற்ற சொற்கள், வார்த்தைகளின் எளிமை,தொகுப்பின் பலவீனமான அம்சங்களாக தெரிகின்றன. என்று புதிய படைப்பாளர்களை குறைகளை சொல்லி, நிறைகளை அக மகிழ்வதும், நேர்மையான விமர்சனமாக இருக்கிறது. தமிழகத்தில் அறியப்பட்ட கவிஞர் அதிக பக்கங்களில் கவிதைகளை எழுதி வெளியிடப்பட்ட புத்தகத்தின் மதிப்புரையில் கவிதை எழுதுங்கள் ஆனால் நீர்த்துப் போகும் அளவுக்கு எழுதாதீர்கள், அதனால் உங்களின் பல நல்ல கவிதைகள் படுகொலை செய்யப்படுகின்றன.
மருத்துவ அறுவை சிகிச்சை போல் விமர்சனமும், அவரவர் மத வழி புத்தகங்கள் இடம்பெறும் வீடுகளில் கூட இந்திய அரசியலமைப்பு சட்டம் போன்ற புத்தகங்கள் இடம் பெற வேண்டும். என்று வாசிக்க வேண்டிய புத்தகத்தை பட்டியலிடுவதும், யூதாஸின் நற்செய்தி என்ற நூல் விமர்சனத்தில் யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட விட்டாலும் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டு இயேசு என்றோ மரித்து இருப்பார். போன்ற விமர்சனங்களால், கவனிக்கப்படுகிறார்.

சாகித்திய அகடாமி விருது /நோபல் பரிசு பெற்ற புத்தகங்கள், ஒரே ஒரு நாவல் எழுதிய கரிச்சான் குஞ்சு அவர்களின் புத்தகம், கணையாழியின் கடைசி பக்கங்கள் சுஜாதாவின் கட்டுரைகள், என்று ஆச்சரியமூட்டும், வியப்பூட்டும் பல புத்தகங்களுக்கான விமர்சன கட்டுரைகள் இதில் அடங்கி இருப்பது கூடுதல் சிறப்பு.
புத்தகத்தின் உள்ளடக்கிய செய்தியை முழுவதுமாக கவனத்தில் கொண்டு வந்திருப்பது, வாசிப்பாளருக்கு,அந்தப் புத்தகத்தை வாசிக்கும் ஆவலை தூண்டும். ஒவ்வொரு புத்தகத்திற்கான அட்டை படத்துடன் கூடிய விமர்சனக் கட்டுரை அழகிய வடிவமைப்புடன் வந்திருக்கிறது. இந்த தொகுப்பில் புத்தகங்கள் வெளியான ஆண்டுகளைக் குறிப்பிட்டு இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

காலம் கடந்த புத்தகங்களை/ பதிப்பில் இருக்கிறதா? என்று புதிய வாசகர்கள் தேடுவதற்கு ஏதுவாக இருக்கும். நிறைய அறிமுக எழுத்தாளர்களுக்கு அறிமுகமும், முக்கியத்துவம் தருவதில் இருந்து இந்த புத்தகம் புதிய வாசிப்பு அனுபவத்தை தருகிறது. புதிய புத்தகம் குறித்து தேடுபவர்கள்/விமர்சன கட்டுரை எழுத முயற்சி செய்பவர்கள் இந்த புத்தகத்தை வாசிக்கலாம்.

இது போன்ற நூல் அறிமுகம் செய்யும் புத்தகங்களையும், வாசகர்கள் நூல் அறிமுகம் செய்ய வேண்டும். கவிஞராக அறியப்பட்ட தமிழ்ராஜ் அவர்கள், சேமித்த சொற்களை எல்லாம் வாசிப்பு அனுபவத்தில் வழங்கி இருக்கிறார். அதிகமான அல்புனைவு நூல்களுக்கு எழுதப்பட்ட விமர்சனத்தில் இருந்து கவிஞர், இனி எழுத்தாளராக அடையாளம் பெறலாம். இதை வாசிப்பவர்கள் இன்னொரு தூண்டிலோடு ஒரு புதிய புத்தகத்தை நோக்கி செல்வார்கள். வாழ்த்துகள் தமிழ்ராஜ்.
கூடைகளில் நிறைந்திருக்கும் மீன்களை நாம் நிறைய ருசிக்கலாம்.இந்த புத்தகத்திற்கும் கூடுதலான நிறை/ குறை குறித்து விமர்சனங்கள் வரலாம். ஆம். கடிதோச்சி மெல்ல எறிக வாழ்த்துகள்..

நூலின் தகவல்கள் :

நூல் : கூடை நிறைய மீன்கள்
(தற்காலத் தமிழ் நூல்கள் பற்றிய சொல்லாடல்கள்)
ஆசிரியர் : செ.தமிழ்ராஜ்
வெளியீடு : காலம் பதிப்பகம்
பக்கம்: 164
விலை : ரூபாய் 200
ஆண்டு : 2025

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பசுமலை பாரதி
மதுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *