1.மேன்மைசால் சமூகம்

சமூக விலகலை
கடைப்பிடிக்க வழியின்றி
நெருக்கியடித்து
நடந்தே சென்ற
பெருங்கூட்டம் ஆவணப்படுத்தியது
எத்தனை மனிதர்களை
மேன்மைசால் சமூகம்
தன்னிடமிருந்து
விலக்கி வைத்திருக்கிறதென்று…
2.பச்சை வண்ணத்தின் மீது படரும் புது மஞ்சள் பூச்சு…

காற்றின் அசைவிலேறி நாசி தொடும் நறுமணம்… விரல் தொடுகையில் நெகிழ்ந்து காட்டும் கரிசனம்
உணர்த்திவிடுகிறது
இறுகிய காய்கள் கனிந்துவிட்டதென.. ஆறறிவு இதயங்களின் அகத்தின் அகம் அறியவும் இருந்திருக்கலாம்
ஏதேனும்
புற அடையாளங்கள்..
3.சன்னல் வழி வானம்

நம்பி வந்தவளை
கை உதறிவிட்டு
தனித்துக் கிட
என்ற சாபத்தோடு
அவன் வெளியேறிய
இருள் கவிந்த
அந்த முன்னிரவில்
சன்னல் வழி
வானம் பார்த்தாள்…
பிறை நிலவும்
ஒளிரும்
நூறு விண்மீன்களும்
அவளை நோக்கி
புன்னகைத்தன …
****************
முதுகில் மாட்டிய
ஒற்றைப் பையோடு
நள்ளிரவில் பயணிக்க நேர்ந்தவனின்
கூடவே
ஓடி வரும்
நட்சத்திர வானத்தை
கண்களுக்குள் சுருட்டி வைத்துக்கொள்கிறான்
தனது தாயகத்தின் நினைவாக…
****************
கைக்குட்டையளவு காட்சியளிக்கும்
சன்னல் வழி வானில் எண்ணற்ற பெண்களின் சாபங்கள்
கறுத்த மேகத்திரளாய்
உறுமிக் கொண்டிருக்கிறது..
பார்த்துக் கொண்டேயிருங்கள்… வானிலை அறிக்கையை பொய்ப்பித்து
பொழியப்போகும் மழைத்துளிகளில்
உப்புக்கரிப்பதாய்
ஒருநாள்
ஊர் உரைக்கக்கூடும் ….
4.

வழிதவறிய வளர்ப்பு நாயை கண்டெடுத்து தருவோருக்கு
தக்க சன்மானம் வழங்கப்படுமென அறிவிக்கும்
சுவரொட்டியை படிக்காதிருக்கட்டும்
அந்த முதியவர்…
கோவை மீ.உமாமகேஸ்வரி
சிறப்பு.. சன்னல் வழி வானம் கவிதை வெகு சிறப்பு உமா.. 👏
சிறப்பு.. சன்னல் வழி வானம் கவிதை வெகு சிறப்பு உமா.. 👏