குமரன் விஜி கவிதை

குமரன் விஜி கவிதை



என் உணவு என்னோடு பேசுகிறது

மறுக்க முடியவில்லை;
ஒரு சில நொடியில்
நீ விழுங்கும் ஒரு பிடி கவளத்தில்
பாடுபட்டவனின் பல நாட்களை
எளிதாய் விழுங்குறாய்
உனக்கென்ன கவலை
பரவாயில்லை நீ விழுங்கு
என்கிறது உணவு
சோற்றை பிசைய முடியவில்லை.
இரவெல்லாம்
காட்டு பன்றி விரட்ட
கண்கள் நிறமிழந்து போயிருக்கும்
காக்கை விரட்டவும்
சிறு மிருகம் விரட்டவும்
கல்வீசியே தோள்பட்டை வலியெடுக்கும்
உனக்கென்ன கவலை
பரவாயில்லை நீ விழுங்கு என்கிறது உணவு
சாப்பிட முடியவில்லை
உனக்காய்
உணவு காத்த வேளையில்
அவனை ஒரு பூராண் கொட்டியிருக்கும்
ஒரு பாம்பு உயிரையே பறிக்க மிரட்டி இருக்கும்
அல்லது பறித்திருக்கும்
உனக்கென்ன கவலை
பரவாயில்லை நீ விழுங்கு
என்கிறது உணவு
நான் நடுங்கிப் போகிறேன்
சுடும் வெயிலில் தோல்கள் பறிபோகும்
கடும் குளிரிலும் காத்து நிற்க நேரும்
மேலும் உணவு சொல்கிறது;
மகுடம் சூட்டிக்கொண்டோர்
அவனுக்கு மலரஞ்சலி செலுத்த நினைப்பார்கள்
சோறு திண்ற கடனுக்காவது
அவனோடு இரு
மலரஞ்சலி மாலைகள்
வெற்றிமாலையாய் மாறலாம்
உன் சோற்றில் நஞ்சு குறையும்.
குமரன் விஜி



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *