என் பெயர் தமிழ்ராசா. நான் ஒரு செய்தியாளர். பல தரப்பட்ட நூல்களை தொடர்ந்து வாசிப்பது என் பழக்கம். சமீபத்தில் “குழந்தைகள் வாழும் ஆலயம்” என்ற நூலை வாசிக்க நேர்ந்தது.அது ஒரு கட்டுரை நூல்.அது டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியை தனது வாழ்க்கை நிகழ்வுகளோடு பள்ளி அனுபவங்களையும் தொகுத்து எழுதியது.கல்வி மறுக்கப்பட்ட குடும்பத்தில், அளவற்ற தடைகளையும், துன்பங்களையும் அனுபவித்து தான் கடந்து வந்த பாதையை,ஆசிரியராகத் தான்பட்ட பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர்.
அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களின் பணி என்பது மாணவர்களுக்குக் கல்வியை மட்டுமே போதிப்பதல்ல…அந்த பள்ளியின் முன்னேற்றத்திற்காகத் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். அரசு மற்றும் தனியார் அறக்கட்டளைகள் மூலமாக இயற்கைத் தோட்டம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,மதிய உணவு அருந்த மேசையுடன் உணவறை, நுண்ணறிவு வகுப்பறைக்காக புதிய கட்டடம் என கால்தேய அலைந்து பெற்ற அனுபவங்கள் பளிச்சிடுகின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமது பள்ளியை மாற்ற வேண்டும் என்ற முனைப்பு வெற்றியடைந்ததை நூலில் குறிப்பிடும் அவர் ஆசிரியர் மாணவர்களை அணுகும் முறைகளை,மாணவர் ஆசிரியருக்கு தரும் ஒத்துழைப்பையும் நிறுவுகிறார்.
அறிவியல் கண்காட்சிகள், சிறு பிள்ளைகளுக்கான கருத்தரங்கங்களைப் பள்ளியில் நடத்திய அவர், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் இரு உலக சாதனையை மாணவர்களை நிகழ்த்தச் செய்திருக்கிறார். அதன் மூலமாக ஒரு ஏழை மாணவிக்கு, தங்கச் சங்கிலி, பசுமை வீட்டைப் பெற்றுத் தந்திருக்கிறார் என்பதை இந்த நூலின் மூலம் அறிய முடிகிறது.கல்விச் சேவையில் ஆர்வமுடைய ஆசிரியப் பணிக்கு வரவிரும்புபவர்கள்,பணியில் உள்ள ஆசிரியர்கள்,மாணவர்கள் என அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல் இது. அகநி பதிப்பகம் வெளியிட்ட இந்த நூலின் ஆசிரியர் சா.ரஷீனா.வந்தவாசி ஒன்றியம்,கல்லாங்குத்து.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடை நிலை ஆசிரியர்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

