Kuzhanthaigalin Nooru Mozhigal Book By Sa Madasami Bookreview By Saguvarathan நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் – சகுவரதன்

நூல் அறிமுகம்: ச.மாடசாமியின் குழந்தைகளின் நூறு மொழிகள் – சகுவரதன்




நூலின் பெயர் ; குழந்தைகளின் நூறு மொழிகள்.
ஆசிரியர் ச.மாடசாமி
பதிப்பகம் ; பாரதி புத்தகாலயம்.
விலை ; ரூ.90/
புத்தகம் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்: thamizhbooks.com

தமிழகத்தின் முன்னணிக் கல்விச் சிந்தனையாளர்களில் ஒருவர் பேராசிரியர் ச. மாடசாமி. பல்லாண்டுகாலம் கல்லூரிப் பேராசிரியராகவும், அறிவொளி இயக்கத்தின் உந்து சக்திகளில் ஒருவராகவும், பள்ளிக் கல்வி முறைபாடுகள் குறித்த நிபுணராகவும் பழுத்த அனுபவம் பெற்ற பேரா. மாடசாமி அவர்கள் கல்வி உளவியல் குறித்து தனது பிரத்யேகமான மெல்லிய நகைச் சுவையோடும், ஆழத்தை எளிதில் வெளிக்காட்டாத எளிய சொல்லாடலோடும் விளக்குகின்றார்.

மாணவர்களைச் சமூகத்திற்குப் பங்காற்றுபவர்களாக உருவாக்குவதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மாணவர்களிடம் சமூக உணர்வை வளர்த்தெடுப்பதில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையயேயான உரையாடல் இன்றியமையாததாக இருக்கிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தான் பேராசிரியர் மாடசாமி அவர்கள் குழந்தைகளின் நூறு மொழிகள் என்கிற இந்த இனிய புத்தகத்தின் மூலம் மொழி பண்பாடு கல்வி குறித்தும் அறிவொளி இயக்க பொற்காலங்கள் குறித்தும் சுமார் 14 கட்டுரைகளில் கூறியிருக்கிறார்.

ஒரு சமூகம் தன்னைத்தானே புதுபித்துக்கொள்ள வித்தினை உருவாக்கும் இடமே பள்ளி தான். பள்ளியில் பயிற்றுவித்தலின் நோக்கம், மாணவர்கள் சீரான வளர்ச்சி அடைதலை மட்டுமல்ல ஒரு சிறந்த அறிவார்ந்த சமூகத்தையும் உருவாக்குவதும்தான்.

குழந்தைகளின் நூறு மொழிகள் என்னும் முதல் கட்டுரையில் குழந்தைகளிடத்து ஆசிரியர்,பெற்றோர் எப்படி நடந்து கொள்கின்றனர்,எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆழமானப் புரிதலை இக்கட்டுரை பேசியுள்ளது.

ரெக்கியோ எமிலியா. வாய்க்குள் நுழையாத பெயர் ;ஆனால் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பெயர் ;அது வெறும் பெயர் அல்ல. அது ஒரு இயக்கம். குழந்தை கல்விக்கான சிந்தனையின் வடிவம் என்கிறார் மாடசாமி அவர்கள்.

ஐரோப்பிய வகுப்பறைகள் வற்புறுத்திய சுதந்திரம்; சோசலிச நாட்டு வகுப்பறைகள் முன்னுரிமை தந்த சமூக சிந்தனை – இரண்டின் இணைப்பு என ரெக்கியோ எமிலியாவை சொல்லலாம் என்கிறார். ரெக்கியோ எமிலியோ குழந்தைக் கல்விக்கான சிந்தனை,வடிவம், செயல்பாடு என்று விரிவாக பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

குழந்தைகளே கூட்டாகச் செய்யும் ஆய்வுத்திட்டம் ,ஆவணப்படுத்தும் அழகு ,ஆய்வுத்திட்டத்திற்கான கருக்களை குழந்தைகளே தேர்ந்தெடுத்து செய்கின்ற பாங்கு, ஆசிரியர் ஒத்துழைப்பு என அனுபவம் சார்ந்த கல்வி செயல்பாடுகள் என அனைத்தையும் இக்கட்டுரை பேசுகிறது.

இக்கட்டுரையின் இறுதிப்பகுதியில் ஒரு கவிதை நீங்களும் படித்துப் பாருங்களேன்

குழந்தையிடம்
நூறு மொழிகள்.
நூறு சிந்தனைகள்.!!!
குழந்தைகள்
விளையாடுவதும்
கற்றுக் கொள்வதும்
நூறு வழிகளில்
அவர்களின் ஆச்சரியம்!!!
நூறு விதம்
மகிழ்ச்சி நூறு விதம்
புரிந்து கொள்ள
கண்டுபிடிக்க
கனவு காண
அவர்களுக்கு
நூறு உலகங்கள்!!!
கண்கள் உங்களைத்தான் கவனிக்கின்றன என்கிற இரண்டாம் கட்டுரை. முழுக்க முழுக்க ஆசிரியர்களைப் பற்றிய கட்டுரை இது.

ஆசிரியரை பல கண்கள் கவனிக்கின்றன. அசட்டையாக சில கண்கள். ஆதங்கத்துடன் சில கண்கள். எப்போதும் விமர்சனத்துடன் சில கண்கள். ஆனால் எதிர்காலத்தின் கண்கள் நம்பிக்கையுடன் பார்ப்பது ஆசிரியரை மட்டுமே. தங்களையும் தங்கள் திறன்களையும் கண்டுபிடித்துக் கொடுக்க இவரால் முடியும் என்ற எதிர்பார்ப்புடன் கவனிக்கின்றன. ஆசிரியரின் பெருமை இந்த கண்களும் கண்களில் எதிர்பார்ப்புகளும் தானே!!!

தேர்வு என்ற ஒன்றை நோக்கி பிள்ளைகளை துரத்துவதும் குழந்தைகளுக்குள் இருக்கும் கலைஞர்களையும் விஞ்ஞானிகளையும் வீராங்கனைகளையும் பிரித்து வெளியேற்றுவதும் உக்கிரமாய் தொடர்கிறது என்றும் ,இதே பாணியில் ஆற்றல்களை பறிகொடுத்த ஆசிரியர்களும் உள்ளனர் என்றும் பேராசிரியர் வெகு கவலையோடு பதிவு செய்திருக்கிறார். ஆளுக்கொரு கிணறு என்னும் மூன்றாம் கட்டுரை ஆசிரியர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதைக் கூறுகிறது.

ஆசிரியை பச்சையம்மாள் அவர்களின் முற்போக்கான செயல்பாடுகள் குறித்தும் அதிகம் பேசியிருக்கிறார். மாணவர் மாணவியர் பழகும் தன்மை , அவர்களுக்குள் இருக்கும் கேலி கிண்டல், அவர்களோடு சமமாகப் பழகும் ஆசிரியை பச்சையம்மாள் என விறுவிறு நடையில் ஓடி பச்சையம்மாள் தாண்டாத கிணற்றில் முட்டிமோதி நிற்கிறது.நமக்கான கிணறு எது.? நம்மால் கண்டறிய முடியுமா? போன்ற வினாக்கள் ரொம்ப அதிகமாகவே யோசிக்கவைக்கின்றன.

கொலையும் கொண்டாட்டமும் என்னும் நான்காம் பகுதியில் பெண்தெய்வமாக மாறிய பெண்களைப் பற்றியது. அறிவொளி இயக்க காலங்களில் மக்களோடு பழகிய தருணங்களில் கிடைத்த பல அரிய தகவல்களில் ஒன்றாக பெண்தெய்வ வரலாறுகளை சேகரித்த விவரங்களை கூறுகிறது.

பெண் தெய்வமான பெண்கள் யாரும் மகிழ்ச்சியாய் இருந்ததில்லை. குறும்பு செய்யும் குறும்புக்காரி களாகவும் இல்லை. எல்லோருமே அழுது கண்ணீர் சிந்திய பெண்கள் . அடியும் மிதியும் பட்டவர்கள். கொலையானவர்கள். தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்கள் .
வினோதமாய் மாண்டவர்கள். இக் கட்டுரையின் இறுதி இரண்டு வரி என் மனதை என்னவோ செய்துவிட்டது.

“தெய்வங்களப் பின்னால் தேடலாம் .அவமானப்படுத்தப் படாத பெண்களை முதலில் தேடுங்கள்”

நாற்றம் அடிக்கும் வகுப்பறை என்னும் கட்டுரையில் ஆசிரியர்கள் பிரயோகிக்கும் அதிகாரங்களைப் பற்றி பேசுகிறது.

“லேட்டா வந்தா வெளியே நிறுத்தி ஏற இறங்க பாக்குற அதிகாரம்.

‘கெட் அவுட்’ சொல்லற அதிகாரம் லேப்ல பிரக்டிகல் நோட்டை விட்டெறியிற அதிகாரம்.

பிரின்சிபால் கிட்ட சொல்லவா அப்படின்னு பயமுறுத்துற அதிகாரம்”

அப்பப்பா…. விதவிதமான அதிகாரங்கள்.

ஆசிரியர்கள் அதிகாரம் செலுத்த வேண்டுவது தவறு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பக்குவப்பட்ட ஆசிரியர் இனமே வகுப்பறையின் நறுமணத்திற்கு உத்தியாகும் என வலியுறுத்துகிறார். காந்திஜியின் வகுப்பறை என்னும் கட்டுரை டால்ஸ்டாய் கூறிய கல்விக்கொள்கை ,பண்ணைக்கல்வி ,டால்ஸ்டாய் பண்ணையில் பாடம் நடத்திய அனுபவம் உள்ளவராக காந்திஜி இருந்த சூழல் சொல்லப்பட்டுள்ளது. அங்கு தமிழ் மொழி சொல்லித்தந்ததே தமிழ் மொழி மீது காந்திக்கு மதிப்பு ஏற்பட காரணமாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

ஆசிரியர் மாணவர் என மொத்த வகுப்பறையும் பாடப் புத்தகத்துக்கு அடிமையாக இருப்பதையும் ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பே காந்தி விமர்சனம் செய்திருக்கிறார்.

” குறைவான புத்தகம்: சிறந்த கல்வி” என்பது காந்தியின் கோட்பாடாக இருந்து வந்துள்ளது.

அடுத்ததாக டால்ஸ்டாய் பண்ணை. ஆசிரியர்கள் செய்யாத எந்த வேலையையும் பிள்ளைகளுக்கு செய்யச் சொல்லி வற்புறுத்தக் கூடாது என்பது பண்ணையின் விதி. ஆசிரியர்கள் செருப்பு தைத்தார்கள் ;கக்கூஸ் அலசினார்கள்; சமையல் செய்தார்கள்;விறகு வெட்டினார்கள்; பிள்ளைகளும் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். ஆனால் தற்போது பள்ளிகளில் கம்ப்யூட்டரே முதன்மை இடத்தை பிடித்துள்ளது. கம்ப்யூட்டரை விட வேறு எது பெரிசு;? என்று வினாவோடு இக்கட்டுரையை முடித்திருக்கிறார் மாடசாமி அவர்கள்.

அகங்காரத்தமிழ் என்னும் பகுதியில் தமிழின் பன்முகத்தன்மை, பாடப்புத்தகங்கள், மாணவர்களுக்கான பாடநூல்,ஆசிரியர் குழுவின் செயல்பாடு, குறுக்கீடு, ஆசிரியர் மத்தியில் ஆசிரியர் கலந்துரையாடி பெறப்பட்ட அனுபவங்கள் போன்றவை கூறப்பட்டுள்ளன. நியூசிலாந்தில் மாவோரி ஆதிவாசிக் குழந்தைகளுக்குக தொடக்கக்கல்வி தந்த ஸில்வியா என்ற ஆசிரியர் செயல்பாடு,சமச்சீர் பாடநூல் குறித்து கருத்துரை போன்றன இதனுள் எடுத்துக்கூறப்பட்டுள்ளன.

அறிவொளியும் இடதுசாரிகளும் என்னும் கட்டுரையில் அறிவொளி இயக்கத்தில் பணியாற்றியவர்கள் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தியது; Dr.சுந்தர ராமன் ஆலோசனை; நடைப்பயணம்; மக்கள் வாசிப்பு இயக்கம்; எட்டாம் வகுப்பு மாணவி வாசித்த நல்லதங்காள் கதையை 300 பேரும் அமைதியாக கேட்ட விதம்;வாசிப்புக்கான மொழிநடையை உருவாக்குவதற்கு பெரும் பங்காற்றிய தமிழ்ச்செல்வன், கமலாலயன், வேல.ராமமூர்த்தி போன்றோரை நினைவுபடுத்தியது; கல்வி தருவதென்பது எழுதப்படிக்கக் கற்றுத்தருவதே என கூறியும், இறுதியில் இப்பணியில் இன்னும் ஆக்கம் செலுத்தியிருக்கலாமே என்கிற ஏக்கம்; என எல்லாமே என் நாடி நரம்புகளில் உணர்ச்சியேற்றிவிட்டது. காரணம் வேலூர் மாவட்ட அறிவொளி இயக்க பணிகளில் நானும் இருந்திருக்கிறேன்.

“கல்வியும் கலாச்சாரமும்”
“வகுப்பறையில் இடஒதுக்கீடு ” –
“இணைக்கவா விலக்கவா?” “எதற்காக ஆசிரியர்கள்”
“நியாய வகுப்பறை”போன்ற கட்டுரைகள் இந்நூலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு கருத்து தரவுகளுடன் அமைந்திருக்கின்றன.

வருத்தம் இருந்தாலும் பிணக்கு இருந்தாலும் நம்பிக்கை வைத்து அவரிடம் நாம் பேச்சை நிறுத்துவதில்லை; தொடர்ந்து பேசுகிறோம்; நாம் பேசுவதும் அப்படித்தான். இங்கேதான் நியாயம் தோன்றி சமூகம் எங்கும் பரவக்கூடும். யார் மறுக்க முடியும்? சகிப்புத்தன்மை பொறுமை என விளை நிலமும் வகுப்பறை தான். பாரபட்சமற்ற அன்பின் ஊற்றுக்கண் இதுதான். தொடர்ந்து பேசுவோம் என முடித்திருக்கிறார் மாடசாமி அவர்கள்.

அழகுற வெளியிட்ட பாரதி புத்தகாலயத்திற்கு வாழ்த்துகள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *