ஸ்டோரி கவிதைகள் – இது கதைகளல்ல, உண்மை.
முத்தழகு கவியரசன்
லார்க் பாஸ்கரன் அவர்களின் சமீபத்தில் வெளியான “ஸ்டோரி கவிதைகள்” புத்தகம் பல்வேறு விதமான எண்ணங்களை மனதிற்குள் கொண்டுவந்து விடுகிறது. குறிப்பிட்ட பொருண்மையில் விவாதிக்காமல் சமூகத்தில் விரவிக்கிடக்கும், வெம்பிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை தனது கவிதைகளில் பதிவு செய்கிறார். அவையெல்லாம் தவிப்புகளாவும், ஏன் இப்படி? எனும் கேள்விகளையும் கேட்க வைக்கும் படியான மன உந்துதலை ஏற்படுத்தி விடுகிறது.
கலைஞனின் பார்வையில் எப்படியெல்லாம் அவனைத் தடுமாற வைக்கிறது. அடுத்தக்கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடைபோடும் சக மனிதர்களின் பொறாமை எண்ணங்கள், அதற்கான கேள்விகள் என்று ஒரு குழப்பத்தின் பிதற்றலையே முன்னிறுத்தும் ஆதங்க கோபத்தை எழுத்தில் கொண்டு வந்து படைப்பது வியப்பாகவே இருக்கிறது. காலம் அனைத்தையும் தீர்மானிக்கும் படியான சூழலைக் கவிஞனுக்கு உருவாக்கி விடுகிறது. அதில் பல துரோக பிரிவினைகளின் வழி வெளிப்படும் சக மனிதர்களின் சொற்பிழவுகள் நவீன கால இலக்கியக் களத்தின் எதார்த்தத் தன்மையை அவர் எடுத்துக் காட்டுகிறார். ஒன்றிலிருந்து ஒன்றாக கைநீட்டிக் காண்பிக்கும் கவிதைகளாகவும் நீண்டிருக்கின்றன.
தொழில்நுட்ப காலமாக மாறிவிட்ட வாழ்வில் பசியைப் பற்றியும், மனித நேயத்தைப் பற்றியும் கூறும் விதமும், சொற்களின் நேர்த்தி வடிவமும், அதற்கான மையத்தை செறிவுபடுத்தி இருக்கிறது. சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மற்ற உயிரினங்களும், சிலரின் இலாப நோக்கத்தால் அடைக்கப்பட்டு அதனின் வாழ்வும் – நேரம் வந்தால் பசிக்கு உணவென்று இயல்பான தன்மைக்கும் போக முடியாமல் சிறை படும் கொடுமைகளையும், மனித வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்க்கும் நகர்வையும் கவிதைகள் கொண்டிருக்கிறது.
இலக்கிய கொண்டாட்டங்களின் மறைமுக அல்லது வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கும் ஏளன நடிவடிக்கைகளையும் துல்லியமாக மதிப்பீடு செய்கிறார். புத்தகத்தின் மீதான கருத்துகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல், புத்தகத்தின் குரலுக்கு அனுமதிக் கொடுக்காமல், பதிப்பகம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்கிற அணுகுமுறை வெவ்வேறான மனநிலைக்குக் கொண்டு செல்கிறது. இதொரு அங்தரங்க பகடை விளையாட்டு என்றே கூறலாம். அரசியல் அந்தஸ்து, சாதி, இப்புத்தகம் எங்கிருந்து வந்தது, யாரென ஒரு புத்தகத்தின் வெளிப்புறத்தை மட்டுமே முக்கியத்துவப் படுத்தும் பாணி என்பது நடைமுறை இலக்கியச் சூழலின் கசடுகளின் துருக்களைக் காட்டுகிறார்.
விமர்சனம் இல்லாமல், வெறும் வெத்து வேட்டான புகைப்படங்களும், ரீல்ஸ் மோகங்களும் எதைத்தான் சொல்ல வருகிறது. இப்படியான விடயங்களும் மிகவும் அழுத்தமாகவே தன் கவிதைகளுக்குள் கட்டமைக்கிறார்.
விருது சார்ந்து அதற்கான நகைமுரண் சம்பவங்களும் நடைமுறையில் இருப்பதைக் காணமுடிகிறது. அதைக் கவிதையிலும் சுவாரஸ்மாகவும், எளிமையாகவும் கடத்துகிறார். வருடத்திற்கு ஒரு அமைப்பு உருவாக்கம் பெறுகிறது. அவர்களுக்குள்ளே குறிப்பிட்ட சில நபர்கள் ஒருங்கிணைத்து, அதற்குள்ளே அவர்கள் தலைசிறந்த மதிப்பான செயல்பாடுகளை நடத்தி விடுவது பரவலாக பார்க்க முடிகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்? இலக்கிய சூழலுக்கு என்ன நேர்கிறது. விருதுக்கான அமைப்புகளும், முடிவுக்கான செய்திகளும் முன்னரே தீர்மானிக்கப்படும் போது, இந்தச் சூழல் எதை முன்மொழிய வருகிறது போன்ற அடிப்படையான கருத்தை முன் வைக்கிறது. பொதுவெளியில் இதைப்பற்றி பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.
இன்று படைப்பாக கருதப்படுகிற, எழுதப்படுகிற சிலவைகள் பிற மொழிகளுக்கு செல்லும் போது அங்கு அவையெல்லாம் விவாத பொருளாகி சாகின்ற அளவுக்கு செல்லும் செய்திகளையும், தன் கவிதைக்குள் குறிப்பிடுவது அவசியமாகவே பொருள் கொள்ள வைக்கிறது.
பிறப்பு, இறப்பு என்று விரிகிற வாழ்க்கையில் நமக்கான வாழ்வுக் காரணத்தைத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். வாழ்வின் இறுதி வரையிலும் யாரோ ஒருவருடன் போராடிக் கழிக்க வேண்டிய நிலைமையை வலிநிறைந்த கணங்களுக்குள், படைப்பாளியின் அக ஓவியத்தின் கவலையைக் கொண்டு வருகிறார். அடுக்கடுக்காக பல பிரச்சனைகளைக் கட்டமைக்கிறார். அதிகார வர்க்கத்திலிருந்து அடிமட்ட அரசியல் வரை மனித முகங்களின் அங்கத செயல்பாடுகளைக் கண்ணாடியில் பிம்ப ஒளியாகக் காட்டியிருக்கிறார். இவருடைய கவிதைகளில் எல்லாவிதமான முயற்சிகளும் இடம் பெறுகிறது. கதைக்களமாகவும் வளர்ந்திருக்கிறது. கோபம் கலந்து வீரியமே இக்கவிதைகள் அனைத்தும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஸ்டோரி கவிதைகள் |
| ஆசிரியர்: | லார்க் பாஸ்கரன் |
| வெளியீடு: |
வேரல் பதிப்பகம்
|
| விலை: | ₹.180 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 முத்தழகு கவியரசன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
