உங்களுக்கு நன்றி..!
லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: இரா. சுகந்தன்
ஹங்கேரியின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்-க்கு (1954) இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. “பேரழிவு பயங்கரத்தின் மத்தியில், கலையின் ஆற்றலை மீண்டும் நிலைநிறுத்தும் அவரது ஈர்க்கக்கூடிய ,தொலைநோக்குப் பார்வை கொண்ட படைப்புகளுக்காக” அவருக்கு 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிப்பு விருந்து நிகழ்ச்சியில் (10-12-2025) லாஸ்லோ கிராஸ்னஹோர்காய் ஆற்றிய உரை:
என்னுடைய எல்லாப் பதிப்பாளர்களுக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன், ஸ்வீடிய அகாதமியின் அழகிய கட்டடத்திற்கும் இவ்வாண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்கான கடைசி முடிவு எடுக்கப்பட்ட அந்த அறையினுள் விழுந்து கொண்டிருக்கும் அழகிய வெளிச்சத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன்.
மேலும் நான், கியூலா உரோமானிய ஆர்தொடாக்ஸ் கிறித்தவத் தேவாலயத்தில் திருக்கோயில் பணியாளும் செம்மானாக இருந்தவரும், அவருடைய மரணத்திற்கான மிகச்சரியான நேரம் வந்திருந்ததனால், உயிரோடிருப்பவர்களின் அணிவரிசையில் இனி ஒருபோதும் இல்லாத கெரேகஸ் மாமனுக்கு என்னுடைய நன்றியை அளிக்கிறேன்.

1960ஆம் ஆண்டு நீர்ச்சறுக்கு நீச்சல்குளத்தின் இரண்டாவது மாடியின் மீது, குழந்தைகள் எவ்வாறு உண்டாக்கப்படுகின்றன என்று என்னிடம் கூறிய என் தோழி யோஸ்கா பால்னிக்கிற்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன், அந்த வெளிப்படுத்தலின் பொறுக்கமுடியாத சுமையினால் நான் இறந்துபோக விரும்பினேன்,
எனக்குப் பன்னிரண்டு வயதாக இருந்த போது, என்னைவிட ஆறு வயது மூத்தவனாயிருந்த, என்னுடைய அண்ணனின் நண்பர் வட்டத்திற்குள் நான் ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக நான் வாசித்த `The Castle’ நாவலையை எழுதிய பிரான்ஸ் காஃப்காவிற்கு என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்; அப்படியாக என்னுடைய விதியானது தீர்மானிக்கப்பட்டது,
நான் உயிரைக் கொடுத்துக் காதலித்த முதல் முப்பத்தொரு குமரிகளுக்கு, ஆனால் குறிப்பாக மார்த்தா கிளின்கோவிச்சிற்கு நான் என்னுடைய நன்றியை உரித்தாக்குகிறேன்,
நான் எப்பொழுதுமே போற்றவும், ஒரு மனிதன் என்ற நிலையில் என்னுடைய போற்றுதலைத் தாங்கவும் செய்யும், கியூலாவின் அறியப்படாத கவிகளான எர்னோ சபோவிற்கும் இம்ரோ சிமோன்யிற்கும்,
தன்னுடைய கற்பனைக்காட்சிகளுடனான போராட்டத்தில் மாய்ந்து போனவரும், அப்படி ஆகையால் உயிரோடிருப்பவர்களின் அணிவரிசையில் இனி ஒருபோதும் இல்லாதவருமான, ஹங்கேரிய சிறுகதை எழுத்தாளர்களினிடையே மிகவும் வியப்பூட்டுபவருமான பீட்டர் அயனோட்சியிற்கு,
செவ்வியற் கிரேக்கத்தின் கலைஞர்களுக்கு நான் என்னுடைய நன்றியை உரித்தாக்குகின்றேன்,
இத்தாலிய மறுமலர்ச்சிக்கு,
சொற்களின் மந்திர ஆற்றலைக் காட்டிய ஹங்கேரியக் கவியான அட்டீலா யோசெஃபிற்கு,
பியோதர் மிகைலோவிச் தஸ்தயேவ்ஸ்கிக்கு,
கொடுக்கப்பட்ட விதத்தில் மட்டுமல்ல, உலகை நோக்குவதற்கு வேறொரு வழியும் இருக்கும் என்ற சாத்தியத்தை அவன் எனக்குக் காட்டியதனால், வரம்பற்ற அளவிற்கு அவனுக்கு இனிமையானவனாக நான் ஆனதினால், மழலையர் பள்ளியிலிருந்து அடிக்கடி என்னை வீட்டிற்குத் தூக்கிச் சுமந்து கொண்டு வந்த, என் அண்ணனுக்கு,
வில்லியம் ஃபாக்னருக்கு,
கியோத்தோ நகரத்துக்கு,

நான் ஆழ்ந்த நன்றிக்கடன் பட்டிருக்கும், அன்பிற்குரிய நண்பன், தாமஸ் பின்ச்சனுக்கு,
தெய்வத்தன்மைக்காக, யோஹான் செபாஸ்தியன் பாஹ்கிற்கு,
பேட்டி சுமித்திற்கு, அவள் நிரந்தரமான எச்சரிக்கையாக இருப்பதால்: யாருக்கும் ஒருபோதும் கீழடங்காதே,
ஆக்னஸ் பால்ஸ்தா, நதாலின் தெசாய், ஜெனீஃபர் இலார்மோர், மோன்செறாட் கபாயே, தெரீசா பெர்கான்சா மற்று எம்மா கிர்க்பீ ஆகியோரின் குரல்களுக்கு,
வண்ணங்கள் கண்காணாது போகும்படியாக அவற்றைப் படைத்த பெல்லா தாருக்கு, ஏனென்றால் அவர் தன்னுடைய மகத்தான திரைப்படங்களில், பாவம் செய்தவர், அவர் அப்படிச் செய்திருந்தபோதிலும், அவருடைய பாவங்கள் அனைத்துடனும், இன்னும் நேசிக்கப்பட்டாக வேண்டும் என்று உரையாட அவர் முனைந்ததால்,
தன்னுடைய மரணத்திற்கான நேரம் வந்துவிட்டிருந்தபடியால், உயிரோடிருப்பவர்களின் அணிவரிசையில் இனி ஒருபோதும் இல்லாத நண்பனான, ஆலன் கின்ஸ்பெர்கிற்கு,
சீனப் பேரரசின் இலக்கியவாதிகளுக்கு,
புல்வெளியில் புல்லின் ஓர் ஒற்றை இதழை நீண்ட நேரம் உற்றுநோக்கியிருந்ததால், உயிரோடிருப்பவர்களின் அணிவரிசையில் இனி ஒருபோதும் இல்லாதவனான நண்பனும் அற்புதகரமான எழுத்தாளனுமான, மேக்ஸ் சீபால்டிற்கு,
எக்ஸ்த்ரேமதுராவின் கடைசி ஓநாய்க்கு.
படைக்கப்பட்ட, இயற்கைக்கு,
இளவரசன் சித்தார்த்தனுக்கு,
ஹங்கேரிய மொழிக்கு,
கடவுளுக்கு.
—-
ஹங்கேரிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: ஓட்டிலி முல்செட்
+++
நன்றி:
https://www.nobelprize.org/prizes/literature/2025/krasznahorkai/speech/
https://www.youtube.com/watch?v=wAf3wDDlAkg
மாட்சிமை பொருந்தியோரே, மேன்மைமிக்க அரசர்களே, மேதகைமை கொண்டோரே, அன்பிற்குரிய நோபல் பரிசுபெற்ற சான்றோரே, கனவான்களே சீமாட்டிகளே, ஸ்வீடிய அகாதமிக்கும் நோபல் நிறுவனத்திற்கும் நான் நன்றி கூற விரும்புகின்றேன்!
உங்களுக்கு நன்றி!
📚 எழுதியவர்:
லாஸ்லோ கிராஸ்னஹோர்காய்
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: இரா. சுகந்தன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

