*மந்தை மாதர்கள்* என்னும் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமானவர் எழுத்தாளர் லதா..
“பெண்கள் ஆண்கள் குழந்தைகள்” “விரலிடை வெளிச்சம்” “சீனலட்சுமி” “நான் கொலை செய்யும் பெண்கள்” போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நூல்கள்..
நீண்ட காலம் தமிழ் முரசு நாளிதழில் துணையாசிரியராகப் பணியாற்றியவர்,
மௌனங்களின் உக்கிரம், சமூகம், மனித உறவுகளின் ஆழத்தை இவரது எழுத்துக்கள் பிரதிபலிக்கின்றன..
சமூகம் பல நூற்றாண்டுகளாய் உருவாக்கி வைத்திருக்கும் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை விசாரணைக்கு உட்படுத்துவது அவ்வளவு எளிதென்று ஆனால் ஏதோ அதிர்வலைகளை ஏற்படுத்தும் நோக்கில் அல்லாமல் நிதானத்தின் கயிற்றில் நின்று நியாயத்தை தன்னால் முடிந்தவரை உறுதியாய் தம் எழுத்தாணியின் மூலம் பதித்துள்ளார் எழுத்தாளர் லதா..
*ஏன் இந்த தலைப்பு* என்ற கோணத்தில் நான் யோசிக்கும் பொழுது, பொதுவாக இருக்கைகளில் அமரும்போது உருவாகும் மனவெழுச்சி, எழும்பும் போது இருப்பதில்லை காரணம், இருக்கைகள் வெறும் இருக்கைகள் அல்ல வாழ்க்கையில் இதுவரை நாம் பயணித்த அடையாளம், அதிகாரம் மற்றும் வசதிகளின் குறியீடு..
ஆனால் கழிவறை இருக்கையில் இருந்து எழுகிற போது மட்டும் தான், அமரும்போது இருந்த மனநிலையிலும், இலகுவான மனநிலையை பெற முடிகிறது.. *வாழ்வில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய புறந்தள்ள வேண்டிய உந்துதலின் குறியீடாகவே* இத்தலைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை புத்தகத்தை வாசிக்கும் பொழுது நன்றாக உள்வாங்க முடிகிறது..
தான் முன்னிலைப்படுத்தும் கருத்துக்கு, வலு சேர்ப்பது என்பது தான் வலியுறுத்தும் காரணிகளால் மட்டுமே வாய்க்காது என்பதை அறிந்த எழுத்தாளர், வரலாற்றின் பின்புலம் கொண்டு தனது அனுபவக் கூறுகளால் பல்வேறு கருத்தியல்களை விசாரணைக்கு உட்படுத்தி, நம்மையும் சிந்திக்க வைத்து, நம்மை நாமே நிதானிப்பதற்கான பல்வேறு கேள்விக்கணைகளை நம்முன் விட்டு சென்றிருப்பது சிறப்பு..
“நாம் பிறரை நினைத்து செயல்படுகிறோமா?”
“சிறிய செயல்களிலும் பொறுப்புணர்வு இருக்கிறதா?”
கழிவறை இருக்கை தொடர்பான விவாதம் பெரும்பாலும் ஆண்-பெண் சமத்துவம் பற்றியதாக மாறுகிறது..
நம் நாட்டின் உயர்ந்த கலாச்சாரத்தை பற்றி நிறையவே பேசிக் கொண்டிருக்கிறோம்..
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன், தாய்-தந்தையர் தெய்வம் எனவும் இதுதான் சரியான பாதை என்றால், ஏன் இங்கு இத்தனை பாலியல் கொடுமைகள்? வன்முறைகள்? ஏன் இத்தனை ஏமாற்று வித்தைகள்? எதற்கு இத்தனை பிரச்சனைகள்? ஆசிரியரின், ஆச்சரியமிக்க தாக்கங்களும், அதிர்ச்சிகளும், வெறுப்புகளும், கோபங்களும், அவர்தம் கேள்விகள் என தனக்கு கிடைத்த அத்தனை பதில்களுக்கும் ஆன தொகுப்பாய் இந்நூலை அமைத்திருப்பது சிறப்பு..
பந்தம், உறவு, அன்பு என்று ஒருகாலத்தில் உயிரின் உச்ச அர்த்தங்களை தாங்கிய சொற்கள் இன்று காலத்தின் ஓட்டத்தில் மருவி, தங்கள் தூய்மையான பொருளை மெல்ல இழந்து பரிணாம வளர்ச்சிக்குள்ளாகி, மதிப்புகள் மாற்றமடைந்து, வாழ்வியல் நெறிகள் ஆழமற்ற வழிக்குத் தள்ளப்பட்டு, தனிமனித வாழ்க்கையை மட்டும் அல்லாது, குடும்பத்தின் பிணைப்புகளையும் சிதைக்கிறது. குடும்பம் சிதைந்திடும் போது, சமூகத்தின் நெறியும், நாட்டின் வளர்ச்சியும் திசைதவறுகிறது.
ஆகவே, இந்தச் சொற்களின் உண்மையான அர்த்தங்களை மீட்டெடுத்து, வாழ்வில் நிலைநிறுத்துவது காலத்தின் கட்டாயமாகிறது..
எழுத்தாளர் லதா அவர்களின் இம் முன்னெடுப்பாக இப்படைப்பு, வாழ்வியல் நெறிகளில் பல மாற்றங்களை கொண்டு வருவது திண்ணம்..
சொந்தம் கொண்டாடும் மனப்பான்மையால் விகாரம் ஏற்பட்டு நாம் விரும்பும் பொருளையோ அல்லது நல்லுறவையே அழித்துவிடும் என்பதற்கு ஆசிரியர் கூறும் ஓஷோவின் குட்டிக்கதை பசுமரத்தாணிப்போல் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டு அகல மறுக்கிறது..
நட்பே அடித்தளமாக என்னும் கட்டுரையில் ஆளுமையும், அடக்கமும் நட்பில் தலை தூக்குவதில்லை அனைத்து உறவுகளுக்கும் பாலமாக நட்பை மையப்படுத்தி ஆசிரியர் அளவீடு செய்திருப்பது பாராட்டத்தக்கது.. குறிப்பாக எந்த ஒரு பந்தத்திலும் நாம் ஒருவர் மேல் வைத்திருக்கும் அன்பின் அறிகுறியாக அவருக்கு இடைவெளி தேவைப்படும் நேரம் ஒதுங்கி இடம் கொடுப்பதும் நம் அருகாமையை விரும்பும் நேரம் அணைத்து, ஆதரிப்பதும் உண்மையான நட்பிற்கான ஆதாரமாக, அழுத்தமாக பேசி செல்வது என்னை மிகவும் கவர்ந்தது..
வேர்கள் செல்லரித்து கிடக்க நாம் இலைகளுக்கு மட்டும் மருந்தடித்து என்ன பயன்? என காமம் ஏன் ஒரு மூர்க்கத்தனமான தவிப்பை ஏற்படுத்தி ஒருவரின் சுயமரியாதை, கௌரவம் எல்லாவற்றையும் இழக்கச் செய்து பரிதாபத்திற்குள்ளாக தள்ளப்படும் சூழலை ஏற்படுத்தும் என்னும் நிலையை சில நிகழ்வுகளின் அடிப்படையில் கோடிட்டு காட்டியுள்ளது சிறப்பு..
கிட்டத்தட்ட 32 அத்தியாயங்களாய் பிரிக்கப்பட்டுள்ள இப்படைப்பில்,
சில தலைப்புகள் ஒரே கருத்தியலின் எல்லைக்குள் மட்டுமே சுழன்றடித்து நிற்பது வாசிக்கும் நமக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது.. ஆசிரியர் கையாண்டிருக்கும், பல்வேறு அனுபவக் கூறுகளும், புதுமையான சிந்தனைகளும் விரிவாக இடம்பெற்றிருந்தால், அதன் உள்ளடக்க வலிமை அதிகரித்து, பெரும் மதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும்..
இருப்பினும், யதார்த்த வாழ்வியலுக்கு தனிமனித வாழ்வை முன்னிறுத்தி, கோட்பாடுகளை தகர்த்தியோ, மாற்றியோ சென்று கொண்டே இருப்பது தான் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான வழி என சமூக கட்டமைப்புகள் என்னும் அத்தியாயத்தில் ஆசிரியர் முன்னிறுத்தும் சில நிகழ்வுகள் இந்நூலின் பக்க பலமாக அமைந்திருப்பது பாராட்டத்தக்கது..
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கழிவறை இருக்கை |
| ஆசிரியர்: | லதா |
| வெளியீடு: |
Knowrap Imprints
|
| விலை: | ₹.225 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 அ.சுகிர்தா |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
