தொலைந்து போன மனித நேயம் – ஹர்ஷ் மந்தர் (தமிழில்: தா.சந்திரகுரு)

தொலைந்து போன மனித நேயம் – ஹர்ஷ் மந்தர் (தமிழில்: தா.சந்திரகுரு)

 

நீண்டகாலப் பசி, கடுமையான வறுமையில் ஏராளமானவர்கள் சிக்கித் தவிக்கின்ற நிலையில், அரசாங்கமும், பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கங்களும் அவர்கள் குறித்த அக்கறையின்றி அலட்சியமாக இருக்கிறார்கள்

செய்தித்தாள்களின் உள்பக்கங்கள் மற்றும் தொலைக்காட்சித் திரைகளிலிருந்து இந்திய உழைக்கும் ஏழை மக்கள் பெரும்பாலும் மறைந்து போய் விட்டனர். நாட்டில் படிப்படியாக பொதுமுடக்கம் நீக்கப்பட்டு, பெரும்பாலான இடம்பெயர்ந்தவர்கள் தங்களுடைய வீடுகளுக்குத் திரும்பிய பின்னர், மோசமான பட்டினி, திடீர் வேலையின்மை ஆகியவை தந்த துயரங்கள் எப்படியோ கடந்துவிட்டன. ஆனாலும் உண்மை முற்றிலும் தலைகீழானதாகவே இருக்கிறது. ஏற்கனவே மந்தநிலையில் இருந்து வந்த முழு பொருளாதாரத்தை இதற்கு முன்னெப்போதுமில்லாத வகையில் முடக்கி வைத்ததால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம், இன்னும் நீண்ட காலத்திற்கு நீடிக்கப் போகிறது. இவ்வாறான நிலையில், அரசாங்கம் மற்றும் பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கங்களின் கூட்டு அலட்சியத்தால் ஏழைகள் அடைந்திருக்கும் மகத்தான துன்பம் கண்ணுக்குப் புலப்படாது தொலைந்து போயிருக்கிறது.

டெல்லியின் மிகப்பெரிய தகன மைதானத்தை ஒட்டியுள்ள யமுனா நதிக்கரையில், யமுனா புஷ்டா எனப்படும் 4,000 வீடற்றவர்கள் வசித்து வருகின்ற கரையோர இடம் உள்ளது. அவர்கள் சாதாரண காலங்களில், பெரும்பாலும் உணவகங்கள் அல்லது கட்டுமான இடங்களில் மிகச்சாதாரண ஊதியத்தில் வேலைகளைச் செய்வதன் மூலம் தப்பிப் பிழைத்து வந்தனர். அந்த வேலை நிச்சயமற்றது, எப்போதும் குறைந்த ஊதியம் கொண்டது என்றாலும், குருத்வாராக்கள், கோவில்கள் மற்றும் தர்காக்களில் இருந்து வருகின்ற மதரீதியான உணவு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உணவைச் சாப்பிட்டு, தங்களுடைய பசியை ஆற்றிக் கொண்டு வந்தனர். சமீபத்தில் அவர்களை நான் சந்தித்தேன். அவர்களின் வறுமையும், விரக்தியும் தெளிவாகத் தெரிந்தன. இன்னும் எந்த வேலையும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. தங்கள் உணவு தொண்டு நிறுவனங்களை போதுமான அளவிற்கு கோவில்கள் தொடரவில்லை. தில்லி அரசு சமைத்த உணவை இலவசமாக வழங்குகின்ற திட்டத்தை பெரும்பாலும் முடித்துக் கொண்டு விட்டது. திட்டத்தின் உச்சத்தில், 1,000க்கும் மேற்பட்ட மையங்களில் சுமார் 10 லட்சம் மக்களுக்கு உணவளிக்கப்பட்டு வந்தது. ஒரு கைச்சோற்றுக்காக ஒவ்வொரு நாளும் மக்களை பல மணி நேரங்களுக்கு வரிசையில் நிற்கும்படி கட்டாயப்படுத்தியதை நான் அப்போது விமர்சித்திருந்தேன். இன்னும் கருணையுடனும், மரியாதையுடனும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கலாம் என்றாலும், திடீரென்று கோரமான பசியின் பிடிக்குள் மக்களைத் தள்ளி விடாமல் இருக்கும் வகையில்  முக்கியமான உயிர்நாடியாக அந்த திட்டம் இருந்தது. அந்த உயிர்காக்கும் முயற்சி முறிந்து போன நிலையில், பட்டினியிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு, சில சிறிய தனியார் தொண்டு நிறுவனங்களைத் தவிர வேறுவழி எதுவும் இருக்கவில்லை.

Pehlu Khan lynching: Harsh Mander talks about the Karwan-e ...

வீடற்றவர்களுக்காக மற்ற நகரங்களில் பணிபுரிந்து வருபவர்கள், நாடு முழுவதும் உணவிற்கான உரிமை குறித்த பிரச்சாரத்தின் செயற்பாட்டாளர்கள், கார்வான்-இ-மொஹாபத் உணவு நிவாரணத்திற்கான தன்னார்வலர்கள் என்று என்னுடைய தோழர்கள், நாடு முழுவதிலும் இருந்து வேலையின்மை, பற்றாக்குறை குறித்த கவலையளிக்கும் அறிக்கைகளை அளித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள காடுகள், பாலைவனங்கள், மலைகள், நதி, தீவுகள் மற்றும் தலித் குடியிருப்புகள் போன்ற சமூகங்களில், சாதாரண காலங்களில் பசியின் பிடிக்குள் வீழ்ந்து விடாமல் தப்பிப் பிழைத்தவர்கள் இருந்தனர். அவ்வாறு  தப்பிப் பிழைப்பதற்காக இடம் பெயர்ந்து சென்றோர் அனுப்புகின்ற பணத்தை அவர்கள் நம்பியிருந்தார்கள்; இன்றைக்கு அவர்களிடம் திரும்பி வந்திருக்கின்ற இடம்பெயர்ந்தோருக்கும் அவர்கள் உணவளிக்க வேண்டியிருக்கிறது. சாதாரண அன்றாடக் கூலித் தொழிலாளர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள், வீட்டுவேலை பார்ப்பவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் மற்றும் தெருவோர விற்பனையாளர்கள் என்று அனைவரும் ஆபத்தான வாழ்க்கையையே எப்போதும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான தேவைகள் மிகவும் ஆழமாக நழுவிச் சென்றிருக்கின்றன. சிறுநிறுவனங்கள் மற்றும் உணவகங்களிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், பாலியல் தொழிலாளர்கள், கிக் பொருளாதாரத்தில் பணியாற்றி வருகின்ற தொழிலாளர்கள், மிகக்குறைந்த வருமானத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தனியாகப் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றவர்கள் என்று  பசித்திருப்பவர்களின் வரிசைக்குள் லட்சக்கணக்கில் புதியவர்கள் வந்து சேர்ந்திருக்கின்றனர்.

வெகுகாலங்களாகவே இவ்வாறு வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலப் பசியுடன் வாழ்வதற்கு கற்றுக் கொண்ட வழிகளை தங்கள் ரத்தத்துடன் கலந்து வைத்திருக்கின்ற கோடிக்கணக்கானவர்களைப் போல,  இந்த வேலையிழந்த தொழிலாளர்களும் தாங்களாகவே அந்த திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். முதலாவதாக, பருப்பு, பால், காய்கறிகள், பழம், முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்ட சத்தான, ஆனால் வாங்க  முடியாத உணவுப் பொருட்களை, தங்களுடைய உணவில் இருந்து அகற்றிக் கொள்வது. உப்புடன் அரிசி மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிடுவதாக பல குடும்பங்கள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டமாக, உணவு உட்கொள்ளும் அளவைக் குறைத்துக் கொள்வது, ஒவ்வொரு உணவின் போதும் உண்ணும் அளவைக் குறைப்பதோடு,  உணவின் எண்ணிக்கையையும் குறைத்தல் மற்றும் குறைவான உணவை உடல் சகித்துக் கொள்வதைக் கற்றுக் கொடுப்பது. இவ்வாறு பல வீடுகள் சரிகின்ற போது, பசியுடன் தூங்க வேண்டிய இரவுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்னர் சத்தான உணவிற்காக பள்ளியை அல்லது பாலர் மையத்தை நம்பியிருந்த குழந்தைகள், இப்போது சாப்பிடுவதற்கு அல்லது விற்பதற்காக கழிவுகளுக்குள் இறங்குவது  உள்ளிட்ட வேலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

பொதுமுடக்கம் மற்றும் பரவிய தொற்று நோயால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தாக்கத்தின் விளைவாக  கோடிக்கணக்கன மக்கள் கடுமையான வறுமை மற்றும் பசிக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்று உலகளாவிய அறிக்கைகள் எச்சரிக்கை செய்கின்றன. 40 கோடி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 1.90 டாலருக்கும் குறைவான ஊதியத்தில் மிகக்கடுமையான வறுமைக்குள் செல்லும் அபாயத்தில் உள்ளனர் என்று ஐக்கிய நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வறிக்கை (Precarity and Pandemic, June 2020) மதிப்பிட்டுள்ளது. உலகளாவிய வறுமையின் இருப்பிடமாக நடுத்தர வருமானம் உள்ள நாடுகள், தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியா மாறக்கூடும் என்று குறிப்பிடப்பட்டிருப்பது இன்னும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. சிதைந்த அல்லது போதுமான சமூகப்பாதுகாப்பு இல்லாத அமைப்புகளில் ஏற்கனவே இருந்து வருகின்ற நிலைமைகளின் காரணமாக, இப்போதைய தாக்கம் இன்னும் தீவிரமடையக்கூடும், மேலும் வரவிருக்கும் ஆண்டுகளிலும் அது நீடிக்கும். ஜூலை தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இதே போன்றதொரு ஆய்வில், 25 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினிக்கு ஆளாக நேரிடும் என்று தீவிர வறுமை மற்றும் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிலிப் ஆல்ஸ்டன் மதிப்பிடப்பட்டுள்ளார். இந்த தாக்கம், நீண்ட காலத்திற்கு நீடித்து இருக்கும் என்று அவர் நம்புகிறார். வறுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதை ஒப்புக் கொள்வதற்கு, தெளிவாகத் தோல்வியுற்றிருக்கும் அரசின் அணுகுமுறைகளை இரட்டிப்பாகி இருக்கிறது என்ற உண்மையை இந்த தொற்றுநோய் அயராது எந்த அளவிற்கு அம்பலப்படுத்தியுள்ளது என்பதைத் தவிர…” என்று அவர் அரசாங்கங்களை விமர்சிக்கிறார். மனிதநேய நெருக்கடியின் அளவையும், தீவிரத்தையும் கையாள்வதில் அரசின் கொள்கைகள் அடைந்திருக்கும் தோல்விகள் குறித்த அவரது கோபம் முற்றிலும் நியாயமானதாகவே இருக்கிறது. முதலாவதாக, பட்டினி குறித்த நெருக்கடியின் தீவிரம் மற்றும் அதனால் வாழ்வாதாரங்கள் நிர்மூலமாவதை, இந்திய அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் சிறிதளவிற்குகூட ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. பொருளாதாரத்தைப் புதுப்பிக்க, குறிப்பாக, விவசாயத்திற்கு வெளியே அதிக மக்களை வேலைக்கு அமர்த்துகின்ற சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு  நிதிப்பரிமாற்றங்கள் செய்வதை விடுத்து, கடன் அளிப்பதைத்தான் நிதியமைச்சர் பெரும்பாலும் நம்பியிருக்கிறார். தேவை மற்றும் உற்பத்தி என்று இரண்டுமே செயலிழந்துவிட்டதால், கடன் குறைவான பேருக்கே தேவைப்படும் என்பதால், அதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது.

Finding Hate, Despair and Hope on the 'Karwan-e-Mohabbat'

இரண்டாவதாக, மூலதன முதலீட்டை ஈர்ப்பதற்காக, தொழிலாளர் உரிமைகளுக்கான பாதுகாப்புச் சட்டங்களிலிருந்து தொழிலாளர்களை ஒதுக்கி வைத்து, உடைந்து போன பொருளாதாரத்தைப் புதுப்பிக்க அரசாங்கங்கள் முயன்றன. பாதுகாப்பற்ற தொழிலாளர்களின் பெரும் துயரத்திற்கு பரிகாரம் செய்வதற்கும்,  பாதுகாப்பிற்கான உறுதியான சட்டங்களைக் கட்டுவதன் மூலம் அவர்களுடைய எதிர்கால துன்பங்களைத் தணிப்பதற்கும் பதிலாக, பல மாநில அரசாங்கங்கள் இந்த தொற்றுநோயைப் பயன்படுத்திக் கொண்டு, முறைசாரா தொழிலாளர்களுக்கு தற்போது சட்டம் வழங்கி வருகின்ற மிகக்குறைந்த பாதுகாப்புகளைக்கூட மேலும் பலவீனப்படுத்தியுள்ளன. வேலைநேரத்தை 12 மணி நேரம் நீட்டிக்கவும், பல்வேறு தொழிலாளர் சட்டங்களின் பாதுகாப்பை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கவும், மாநில எல்லைகளில் தொழிலாளர்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தவும் சில அரசாங்கங்கள் முயற்சித்தன.

தொற்றுநோய்க்கு முன்பாகவே, 117 நாடுகளை தரவரிசைப்படுத்திய 2019ஆம் ஆண்டு உலகளாவிய பட்டினி குறித்த அறிக்கையில் இந்தியா 102ஆவது இடத்திற்குச் சரிந்திருந்தது. அண்டை நாடுகளான நேபாளம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு பிந்தைய இடத்தையே அது பெற்றிருந்தது. 45 ஆண்டுகாலம் காணாத வேலையின்மை அதிகரிப்பின் காரணமாக, பொருளாதாரமும் தடுமாறிக் கொண்டிருந்தது. இந்த நெருக்கடியின் மத்தியில், உலகின் மிகக் கடுமையான பொதுமுடக்கம் நாட்டின் மீது சுமத்தப்பட்டதன் விளைவாக, ஒரே இரவில் தேவை மற்றும் வழங்கல் என்று இரண்டுமே  கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டன. பீகார் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மிகவும் சிதைந்து போன பொது சுகாதார அமைப்புகளுடன் உள்ள மாநிலங்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவியதால், நகரங்களில் உள்ள தனியார்மயமாக்கப்பட்ட சுகாதார வசதிகளிலிருந்து வீடற்றவர்கள் மற்றும் ஏழைகள் விலக்கப்படுவதால், ஏழைகளின் பிரச்சனைகள் மேலும் அதிகரித்தன.  அந்த வைரஸ் பட்டினி மற்றும் துயரத்தால் பாதிக்கப்பட்ட உடல்களை எளிதாக அழித்து வருகின்ற நிலையில், அவ்வாறானவர்கள் எவ்விதக் கவனிப்புமின்றி அரசால் கைவிடப்படுகின்றனர்.

இவை அனைத்தினூடாக, அரசு நிறுவனம், ஊடகங்கள் மற்றும் நடுத்தர வர்க்கம் ஆகியவை குற்றவாளிகளாக அலட்சியமாக இருக்கின்றன. அதற்குப் பதிலாக சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவது; அரசாங்கங்களைக் கவிழ்ப்பது; ராணுவத்திற்கு விமானங்களை வாங்குவது; எதிர்கருத்து கொண்டவர்களைச் சிறையில் அடைப்பது; இடிக்கப்பட்ட மசூதியின் இடத்தில் ராமர் கோவிலை நிர்மாணிப்பது போன்ற பிளவுபடுத்தும் நிகழ்ச்சிநிரல்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. லட்சக்கணக்கானவர்கள் நீண்டகாலமாக பட்டினி மற்றும் வறுமையில் வாடுவது கண்ணுக்குத் தெரியாமல் நழுவி வருவதால், இந்தியா இந்த அரை நூற்றாண்டு காலத்திலேயே, மிகவும் மோசமான மனிதநேய நெருக்கடியை நோக்கி அமைதியாக விரைந்து கொண்டிருக்கிறது.

https://www.thehindu.com/opinion/lead/an-invisible-humanitarian-crisis-in-india/article32288036.ece 

நன்றி: தி ஹிந்து 2020 ஆகஸ்ட் 07
தமிழில்: தா.சந்திரகுரு
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *