லூக்காவின் உலகம் (Lucca’s world) – ஆங்கில திரைப்படம் விமர்சனம்
– ஆர். ரமணன்
ஒரு தன்வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘ லூக்காவின் உலகம் ‘. பிறக்கும்போதே செரிபிரல் பால்சி எனப்படும் மூளைகோளாறினால் பாதிக்கப்படுகிறான் லூக்கா. அவனுடைய தாயார் பார்பரா ஒரு பத்திரிக்கையில் பணி புரிகிறார். தந்தை வேலை தேடிக் கொண்டு இருக்கிறார். லூக்காவை எப்படியாவது குணப்படுத்த வேண்டுமென்று பார்பரா முயற்சி செய்கிறாள். இந்தியாவில் சைட்ரோடிரான் எனும் கருவியைக் கொண்டு இதற்கான ஒரு சோதனை முயற்சியில் மருத்துவர் குமார் என்பவர் உள்ளார் எனக் கேள்விப்பட்டு மெக்சிகோவில் வசிக்கும் அவர்கள் இந்தியாவிற்கு பயணமாகிறார்கள். வீட்டை அடமானம் வைத்தே அதற்கான செலவை ஈடுகட்டுகிறார்கள். இந்தியாவில் கொடுக்கப்படும் சிகிச்சையில் லூக்கா ஓரளவிற்கு குணமாகிறான்.
அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர். சைட்ரோட்ரான் கருவிகள் மெக்சிகோவில் நிறுவப்படுவதற்கு சட்ட ரீதியான அனுமதி இல்லை. பார்பெரா அதற்கான முயற்சிகளில் இறங்குகிறாள். அவளுக்கு உதவுவதுபோல் செயல்படும் ஒரு மருத்துவர் இதற்கு எதிராக இருக்கிறார். இறுதியில் புற்றுநோய் சிகிச்சைக்கு மட்டும் அனுமதி கிடைக்கிறது. சைட்ரோட்ரான் கருவியை வெளிக்கொணர்ந்த பார்பெராவின் முயற்சிகளுக்காக இந்திய மருத்துவர் லூக்காவிற்கு இலவசமாக சிகிச்சை செய்ய முன்வருவதுடன் கதை நிறைவு பெறுகிறது.
கதையை மிக கவனமாக கையாண்டிருக்கிறார்கள். லூக்காவின் நோயின் தீவிரத்தையும் காட்ட வேண்டும். அதே சமயம் அது பார்ப்பவர்கள் பயந்தோ வெறுத்தோ ஒதுங்கிவிடாமல் இருக்க வேண்டும். மருத்துவ விசயங்களையும் சொல்ல வேண்டும். ஆனால் எல்லோருக்கும் புரியும்படியும் இருக்க வேண்டும். இந்தியாவை காட்டுகிறேன் என்கிற போர்வையில் நிர்வாண சாமியார்களையும் குரங்குகளையும், பாம்பையும் காட்டாமல் அதே சமயம் ஒரு இந்திய கடைத்தெரு, மாடுகள் சுற்றிக்கொண்டிருப்பது, கோவில், பூசை, நம்பிக்கைகள் ஆகியவற்றையும் காட்டுகிறார்கள்.
லூக்காவின் சிகிச்சை தொடர்பாக கணவன், மனைவி இடையே நடைபெறும் ‘லூக்காவை கவனிக்க வேண்டும்; அதே சமயம் மற்றவர்களையும் கவனிக்க வேண்டாமா?’ போன்ற விவாதங்கள் ஒரு மோதலாக முடியாமல் அவர்களுக்கிடையேயான அன்பும் புரிதலும் அந்த தருணங்களை நெகிழ்ச்சியானதாக மாற்றுகின்றன. அதேபோல் லூக்காவிற்குப் பிறகு பிறந்த தம்பி சாதாரண குழந்தையாக உற்சாகமான பையனாக வளர்வது, அண்ணனிடம் காட்டும் பரிவு, அவனை குணப்படுத்துவதில் தானும் பங்கெடுப்பது, அதே சமயம் அவனுடய குழந்தமையும் தொலையாமல் அவ்வப்போது காட்டுவது ஆகியவை சிறப்பு.
லூக்கா சற்று குணமடையும்போது இந்திய மருத்துவர் குமார் ‘ 33% பெற்றோர்கள் கவனிப்பு, 33% மருத்துவம்,33% கடவுள்’ என்று சொல்லுவது கையறு நிலையிலுள்ள பெரும்பான்மை மக்கள் கூறுவதுதான். லூக்காவிற்கு தன் தவறினால்தான் இந்த நிலை ஏற்பட்டது என்று பார்பரா நினைப்பதும் அதனால் அவனை எவ்வாறாவது குணப்படுத்திவிட வேண்டும் என்று அசாதாரணமாக முயற்சி செய்வதும் தனி மனித ஆளுமை அம்சங்களை வெளிப்படுத்துகிறது. மருத்துவ உண்மைகள், அது தொடர்பான அரசு சட்டங்கள், அதில் நடைபெறும் வணிக தலையீடுகள், தனி மனித உணர்வுகள் ஆகியவை கலந்த ஒரு நல்ல திரைப்படம்.
எழுதியவர் :
– ஆர். ரமணன்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.