உழவரைப் போற்றுவோம்
சாலையோர நிலங்களை
சதுர அடிகளாயாக்க
அனுமதித்தபின்னும்
எஞ்சிய வயலில்
ஏர் பிடித்தவர்கள்.
வானம் பார்த்து
வாகாய் விதைத்து
வாய்க்கும் கைக்கும்
எட்டாத மகசூலிலும்
வாடிப் போகாதவர்கள்.
கஜாவும் நிவருமாய்
கலங்கடித்தாலும்
மண்ணின் மேல்
மாறாக் காதல்
கொண்டவர்கள்..
வெள்ளாமை செய்து
வெறுங்கையாய்ப் போனாலும்
விளைநிலத்தை நேசிக்கும்
வெள்ளந்தி மனசுக்காரர்கள்.
உழுது ஊருக்கெல்லாம்
உணவளித்தாலும்
உழுநிலத்துக்கு ஊறு என்றால்
உரிமையை நிலைநாட்ட
உறுதியாயிருக்கும்
உன்னத போராட்டக்காரர்கள்.
–மதுரா