1)
சிவப்புப் பொறிகள் சிறு நேர்கோட்டில்
பறந்து மறைகிற தீத் துணுக்களை
இமைக்காமல் பார்க்கிறவனிடம்
மேலும் கத்திகள் கேட்கிற
சாணைப் பிடிப்பவனின்
இடப்பக்க தோள் பை
பழைய பனம்பாயை மாற்ற
சேமிப்பதற்காகவுமிருக்கும்
இல்லை
மகளுக்கு வாங்க நினைக்கிற
ரொட்டிகளுக்காகவுமிருக்கும்.
******
2)
மாட்டிற்கு அலங்காரம் செய்து
வண்ணத் துணி போர்த்தி
சாமிப் படம் ஏந்தியவளின்
இரந்த குரலுக்கில்லையேனும்
இரு முறை தலையசைத்து
ஒரு முறை வால் சுழற்றி
இருக்கிறதா இல்லையா
எனக் கேட்கும் பாங்கில்
நிற்கிற அதற்கேனும்
ஒரு பத்து ரூபாய்
தந்திருக்கலாம் ரங்கனாதா.
******
3)
அத்தனை எளிதல்லை
பிச்சைக் கேட்பவளின்
முந்தி பிடித்து
கண்களை உருட்டுகிற
சிறுமியைத் தவிர்ப்பது.
அதை விடச் சிரமமாயிருக்கிறது
அவள் இடுப்புக் குழந்தை
விரல் நீட்டி
வீட்டைக் காட்டும் போது.
இன்னும் மோசம்,
தருவதற்கு எதுவும்
தயாராகவில்லை என்கிற
பொய்யைக் கேட்கும் போது.
******
4)
அரண்மனையின் படத்தைப்
பார்க்க நேரிடுகையில்
ராஜ குரு தாடி வருடுகிறான்
குறுவாளின் நுனியில்
சொட்டிக் கொண்டிருக்கிறது
துரோகத்தின் குருதி.
கோப்பை மதுவில்
இறங்குகிறது துளி விஷம்
அந்தப்புரத்தில் அடிமைப் பெண்ணின்
ஆடை அவிழ்கிறது.
******
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.