நேற்று இரவு
ஒரே மழை
நனையாமல் இருக்க
மரத்தடியில் ஒதுங்கி நிற்கிறார் அப்பா நனையாமல்
தூங்கிக் கொண்டிருக்கிறது மரக்கன்றுகளை வைத்த
அப்பாவின் நிழல்.
*
ஒரு வேளையாவது
உணவு கிடைக்குமென்று
உணவகத்தில்
வேலைக்குச் சேருகிறான்
ஏழைச் சிறுவன்
மூன்று வேளையும்
உணவு
பரிமாறிக்கொண்டிருக்கிறான் பசியோடு.
*
நிலத்தை
உழுது கொடுத்துவிட்டு
திரும்பிப் பார்க்கும்
உழவனின் தன் நிழல்
ஒரு கட்டடத்தின் வாசலில்
வரிசையில் நிற்கிறது உணவுக்காக.
*
நேற்றைய
கனவில் அப்பா
இறந்து போனார்
இன்றைய கனவில்
நான் இறந்து போனேன்
நாளைய கனவில்
யார் இறந்து போவார்களென்று
கண்களைத் திறந்து பார்க்கிறேன் கனவுகள்
இறந்து போய் கிடக்கின்றன கண்களுக்குள்ளே.
*
நீங்கள்
எதை வேண்டுமானாலும்
உங்கள் உள்ளங்களில்
வரைந்து கொள்ளுங்கள்
அதற்கு முன்பாக
உங்கள் உள்ளங்களை
அழகாக வரைய முற்படுங்கள்.
*
கோவிலின் வாசலில்
பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தையினைக்
கண்டும் காணாமல்
கடந்து செல்லும் யாரோ ஒருவரின் நிழலில் மறைந்தவாறு
கருவறையின்
உள்ளே சென்று
மறைந்து
கொள்கிறார் கடவுள்.
*
பலர்
முன்னேறுவதற்கு
தன் விரல்கள் வீங்கப்
பாதைகளைத்
தைத்துக்கொடுத்தவர்கள் பாதையில்லாமலே பாதையோரங்களிலே
வாழ்கிறார்கள் பாதங்கள் இல்லாமலே.
*
கூரை வீட்டின்
மேலே அமர்ந்தவாறு
விடியும் வரை
விழித்திருக்கிறது நிலா
உள்ளே பென்சிலால்
நிலாவை வரைந்து
கொண்டிருக்கிறது குழந்தை
இருட்டில் நிலவின் வெளிச்சத்திலே.
கவிஞர் ச.சக்தி,
அழகு பெருமாள் குப்பம்,
பண்ருட்டி,
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

