நாயகியின் வீட்டுக்கு அவளது தோழி வந்திருக்கிறாள். இருவரும் தனித்திருக்கிறார்கள். பேசுகிற களிப்பில் தங்களை மறந்திருக்கிறார்கள். நாயகி தோழியை அழைத்துக் கொண்டு ஒரு அறைக்குள் வர தோழி தயங்கினாலும் அந்த அறையில் யாருமில்லை. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. டைரி ஒன்று, தோழி அதைப் பார்க்க நாயகி எடுத்துக் கொடுக்கிறாள். அது ஒரு கவிதை. ஆசையாக அதை பார்க்கிறவளிடம் பாடு என்கிறாள் மற்றவள். கொஞ்சம் பிகுவிற்கு அப்புறம் அந்தப் பாட்டு எழுகிறது. முறைப்படி அந்த அறை நாயகியின் அண்ணனுடையது. குளித்து விட்டு ஈரத்தலையை துவட்டிக் கொண்டவாறு அவன் தனது கவிதை உயிர் கொண்டிருப்பதைக் கேட்டு நிற்கிறான். பாடல் முடிந்து கதவு திறக்கிறது, அண்ணனுடைய கண்கள் தோழியின் கண்களைத் தொட்டு மீளும்போது தோழியின் மெல்லிய புன்னகையை அறிகிறோம். படம் – சுஜாதா. 1980 இல் வந்தது. அந்தப் பாட்டு, நீ வருவாய் என நானிருந்தேன் ! எல்லோரும் கேட்டும்,பார்த்தும் இருப்பீர்கள். இந்த நிமிடம் அந்தப் பாட்டை பார்க்க நேர்ந்தாலும் பாட்டுக்கு முந்தைய அந்தக் காட்சி எனக்கு நினைவில் வந்துவிடும். படம் பார்த்த அன்று மனசில் பதிந்த ஒன்றை பின்னால் மறக்கவே முடியவில்லை. அது ஏன் மனதில் நிற்க வேண்டும் என்பதற்கு பதில் கிடையாது. அந்தக் காட்சியை எழுதியவர் பத்மராஜன் என்பதுகூட அப்போதைக்கு தெரியாது.
VHS வந்தபோது தான் சாலினி என்டே கூட்டுக்காரி பார்க்கிறேன்.
சுஜாதா படத்தைக் காட்டிலும் மிகவும் சினிமா குறைவாக இருந்து இன்னமும் உண்மைக்குப் பக்கத்திலும் இருந்தது அது. மேலும் சாலினியாக ஷோபா.
இதா இவிட வரே, ரதிநிர்வேதம், சத்திரத்தில் ஒரு ராத்திரி, வாடகைக்கு ஒரு ஹிருதயம் போன்ற படங்கள் யாவும் மிக முக்கியமானவை. தான் தேர்ந்த பொருளில் அலசல் நிகழ்த்தினவை. உலகெங்கிலும் இருந்த புதிய அலை படங்கள் பற்றின ஓர்மையுடன் தம்மை படைப்பாக்கிக் கொண்டவை. ஆனால் கோணல் மனங்கள் இல்லாத சந்து பொந்து உண்டா ? செக்ஸ் என்று வந்து விட்டால் கண்களையும் மனதையும் அடைத்துக் கொள்கிற அப்பாவிப் பப்பாக்களின் பூதக்கண்ணாடிகள் தொழிற்பட்டதில் அவர்கள் பத்மராஜனுக்கு ஒரு ஸ்தானம் வைத்து இருந்திருப்பார்களில்லையா? இந்த இடத்தில் அவர் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருப்பார்.
யோசித்துப் பார்த்தால் ஒரு வரிக் கதை.
அதுவா, அது ஒரு கேன்சர் கதை அல்லவா என்று கேட்பவர்கள் இப்போதும் உண்டு.
நானும் கூட அக்கதையை ஒரு படைப்பாக அறியும்போதுதான் அதினுள் இருந்த திரைக்கதையின் வீரியம் அறிந்தேன். சமீபத்தில் ஜெயமோகன் இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருந்தார். அதில் இது ஒரு கேன்சர் கதை அல்ல என்று பத்மராஜன் சொன்னதாக சொல்லியிருந்தார். ரதிநிர்வேதம் படத்தில் ரதியைக் கொன்றது போல தான். சாலினி தப்பிக்க வேறு வழியில்லை, அவள் அதனால் மரணத்தைத் தேர்ந்து கொள்கிறாள் என்று சொன்னாராம்.
சாலினியின் தோழியான அம்மு கண்ணீருடன் சொல்வதாக கதை ஆரம்பிக்கிறது. அம்முவும் சாலினியும் உயிர் தோழிகள். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அமர்க்களமான ஒரு காலம் இருந்தது அங்கே. பெண்களிடம் பேசுவது போல ஆண்களிடமும் சாலினி கலகலப்பு கொள்வாள். அவளை காதலிக்கிற பையனைக் கூட அவளுக்கு தெரியும். புது ஆசிரியர் ஒருவர் வருகிறார். அவருக்கு அவளை பிடித்து விடுவதால் அவளுக்கு அவர் மீதும் ஒரு ஈர்ப்பு உண்டாகிறது. இதெல்லாம் இப்படி போனாலும் அவளது மறுபக்கம் வேறு. புன்னகைகள் மொத்தத்தையும் விட்டுவிட்டு தான் அவள் தனது வீட்டுக்கு செல்ல முடியும். அப்பா இரண்டாம் தாரம் கட்டிக்கொண்டவர். அந்த வகையில் அவர்களுக்கு ஒரு மகளும் உண்டு. சாலினியும் அவளது அண்ணனும் அந்த வீட்டில் நிம்மதியாக இல்லை. அண்ணன் கனவுலகவாசி. அவனது இருப்புக்கு, அவனது கொதிப்புக்கு எல்லாம் அவ்வீட்டில் எந்த மதிப்பும் இல்லாமலிருக்க, சாலினி கல்யாண விவகாரத்தில் கலவரம் முற்றி ஒருநாள் அவன் தற்கொலை செய்து கொள்கிறான். ஏற்கனவே சோர்வில் இருந்த சாலினிக்கு இந்த மரணம் ஒரு இடி. தோழியும் திருமணம் செய்து கொண்டு வெளியூர் போகிறாள். தனிமையில் மெல்ல மெல்ல அவள் தன்னை கை விடுகிறாள். வெறுமையில் திகைந்த பிரமைகளும் பயங்களும் அவள் மனக்கண்ணாடியில் எதிரொளித்து அவளை பீதியூட்டுகின்றன. ஒருநாள் அவள் இறந்து போக வேண்டிய நோயாளி என்று அவளும் அவளை சார்ந்தவர்களும் அறிகிறார்கள்.
மரணத்தின் மூலம் வாழ்விலிருந்து தப்பித்து சொல்லுகிறாள் சாலினி.
நானறிந்து இந்தத் திரைக்கதை முழுவதும் பூடகமாக இருந்து கொண்டதெல்லாம் மனிதருக்கு இருக்கிற தனிமையும், அதை விலக்குவதற்காக அவர்கள் செய்கிற போராட்டமும்தான். ஒரு உயிர் மறு உயிரில் தன்னை வைத்துக் கொள்ள அலைபாயும் போராட்டங்கள். சாலினியும் அவளுடைய அண்ணனும் அந்த வீட்டுக்குள் பிதுங்கி தங்களுக்குள் அடைக்கலம் காண்கிறார்கள். சாலினியும் அம்முவும் பெண்களாக இருப்பதில் பிதுங்கி தங்களுக்குள் அடைக்கலம் காண்கிறார்கள். சாலினியும் ஆசிரியரும் தங்களுடைய தனிமையில் பிதுங்கவே தான் ஒருவரில் ஒருவர் தொற்றிக் கொள்ள முந்துகிறார்கள். சில பாசிகளை விலக்கி குளம் பார்க்கும்போது எவ்வளவு பரிதாபகரமான மனித வாழ்க்கை என்று அஞ்சத் தோன்றுகிறது. இந்த உண்மையை நேரிடத் திராணி இல்லாமல் தானோ ஒருவேளை மனிதன் வஞ்சகங்களில் அநீதிகளில் தலை புதைத்துக் கொண்டு வெற்றிகளை தேடி ஒடியவாறு இருக்கிறான்?
படத்தை மோகன் இயக்கியிருந்தார்.
ரஜனா போன்ற முக்கியமான படங்களை இயக்கியவர்.
பத்மராஜன் போன்ற எழுத்தாளர்களை புரிந்து கொள்ள முடிந்தவர்.
ஏனென்றால் ஒரு எழுத்தாளனை புரிந்து கொள்ளுவது என்றால் அவனது மனசை புரிந்து கொள்வதாக அர்த்தம். அது கதையின் உருவாக்கத்தில், திரைக்கதையின் ஒரு வளைவில், வசன சேர்க்கையில் மிளிர்ந்து விட்டுப் போவது அல்ல. ஒட்டுமொத்தமாக அந்தப் படைப்பில் அவன்தான் நின்று நிலைத்திருக்கிறான். உண்மையை சொல்லுவது என்றால் நல்ல எழுத்தாளனை நல்ல இயக்குனர் பின்தொடர்வது என்பது அவனை உட்கொள்ளுவது தான்.
மோகன் அதை விழுங்கி செரிக்கக் கூடியவராக இருந்தார் என்று நான் நினைத்துக் கொள்ளக் கூடிய காரணங்கள் இருந்தன.
படத்தில் வருகிற அந்த ஆசிரியர், அவரை எடுத்துக் கொள்வோம். சாலினியின் அண்ணன் இறந்தபிறகு அவர் சாலினிக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். படித்தவர். பண்பாக நடந்து கொள்ள வேண்டியவர். ஆர்வக் கோளாறு போல உணர்ச்சி வசப்பட்டு அவளைக் குழப்பி விடக் கூடாது. இவைகள் எல்லாம் இருக்கின்றன. உனது அண்ணனை நான் சந்தித்ததே இல்லை, ஆனால் பல வருடம் நெருங்கிப் பழகி அவனை இழந்தது போல உணருகிறேன் என்கிறார். ஊருக்கே இளப்பமாயிருந்த உனது அண்ணனின் மனம் தெரியும், அவன் தன்னை சாகடித்துக் கொண்டதற்கான வேதனை தெரியும் என்பதல்லவா அதன் அர்த்தம்? இந்த சொற்களால் சாலினிக்கு அவர் கொடுக்கிற ஆறுதல், நெருக்கம், நம்பிக்கை சாதாரணமானது அல்ல. ஒரு பார்வையாளனுக்கு கிடைக்கிற ஆசுவாசமும் கூட. அப்புறம் எந்த நேரமும், தலைவலியால் சாலினி போர்த்திக் கொண்டு தூங்கும்போது கூட இவள் எனது மகள் அல்ல என்கிற உணர்வுடனே இருக்கிற சித்தி, தனது சித்தி, அம்மா போன்ற இருக்கைகைகள் விட்டு எழுந்து சாகப் போகிறவளிடம் பதறுகிறாள், பணிவிடை செய்கிறாள், வாய் விட்டு கதறி அழுகிறாள். பார்த்தீர்கள் என்றால் அம்மாவிலிருந்து அவள் வெறும் பெண்ணாக மாற்றப்பட்டிருப்பாள்.
எல்லாம் போகட்டும். மரணப் படுக்கையில் சாலினி அம்முவை அறியாமல் போகிறாள். அவள் இல்லாதபோது உணர்வு வந்து எல்லோரையும் கண் நிறைய கண்டு அழுது முடித்து இறந்து போகிற சாலினி, தனது உயிர் தோழிக்கு கொடுத்து விட்டு செல்லுவது எவ்விதமான துயர்?
ஒரு சொல்லும் இல்லாமல், நிறுத்தவே முடியாமல் அவள் அழுத இறுதி அழுகைக்கு என்ன பொருள்?
தான் இருப்பதை கூட தெரிவித்து விடாமல் அவரது எல்லா திரைக்கதைகளும் தனது காத்திரத்தை எடுத்துக் கொண்டிருந்தன என்கிற மாதிரி அஞ்சலி மேனன் ஒரு பேட்டியில் சொன்னதை கொஞ்ச நாட்கள் முன்பு பார்த்திருக்கிறேன்.அவர் இந்தத் தலைமுறையை சேர்ந்தவர். நான் தொடர்ந்து அவரது படங்களை வரிசையாக பார்த்து வந்தவாறே இருந்தபோது திடுக்கிட்டதுண்டு.அப்புறம் ஏறக்குறைய இதை வெகு காலமாகவே நான் பர்னிச்சர் உடைத்ததுண்டு. இந்தப் படத்தில் கூட அது எவ்வளவு இருந்தது என்பதை ஊடுருவிப் போனால் யாரும் வியக்கலாம். அதைப் போல பத்மராஜன் எப்படிப்பட்டவர் என்கிற வியப்பு தீரப்போவதில்லை. இந்தப்படம் என்றில்லாமல் பல படங்களிலும் அவருடையதான பல மடிப்புகள் உள்ளன. அவை மௌனமானவை. ஆரம்பம் முதலே ஆவலுடன் சிரித்துப் பேசிப் பழகியிருந்த ஒருவன் காதல் கடிதம் கொடுக்க வரும்போது சாலினி மிக ஸ்ட்ரிக்ட்டாக சாரி சொல்கிறாள். அது அவளது இயல்பான நடத்தையே அல்ல. விசேஷமான இளமை அதற்கான நன்மதிப்பை பெறும் அந்தக்கட்டத்தில் அவள் கொள்ளுகிற பெருமிதத்தை பார்வையாளர்கள் எவ்விதம் எடுத்துக் கொண்டார்கள் என்று யோசனை வந்தது. கண்களில் காதலுடன் அவனை அவ்வளவு கறாராக நடத்தி இருக்கத் தேவையில்லை என்று அவளே உருகுவதையும் தான்.அவன் அவளிடம் அவளது கூந்தலின் நீளம் பற்றி பேசியிருக்கிறான். பாடியே கூட இருக்கிறான். மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு போவதற்கு முன்பு அவன் அவளைக் காண வரும்போது அதைப்பற்றி சொல்லி சாலினி தனது மொட்டையடித்த தலையை காட்டுவதில் ஒரு குரூரம் இருந்தது, எப்படி அது? சினிமா நடைமுறையில் இதெல்லாம் எழுதப்படுவது தானா?
சாலினிக்கு இந்த மாதிரிக் கூந்தல் இடுப்பு வரைக்கும் இருந்தது, அதை சிரைத்து எடுத்து அவளை மூளியாக்கி விட்டார்கள் என்பதை பிற கதாபாத்திரங்களுக்கு சொல்வதன் மூலம் பார்வையாளர்களுக்கு துக்கம் கொடுக்காமல் மெல்ல நழுவி சொல்லாமல் சொல்லி, குறிப்பிட்ட அந்தக் கதாபாத்திரத்தை வரவழைத்து அவனிடம் அவள் தன்னைக் காட்டியபின்னர் அவனைக் கிளம்பிப் போக சொல்லும் காட்சி அது. சொல்லப் போனால் அவன் அந்த அறைக்குள் வரும்போதே சாலினி உற்சாகமாக வரவேற்பதில் ஒரு எள்ளல் இருக்கும். வா வா என்றிருக்கும். ஏதோ ஒரு தஸ்தயேவ்ஸ்கி காட்சி படிப்பது போல பட்டது அது எனக்கு.
சாலினியின் இறுதி நிமிடங்களில் அவளுடைய அப்பாவும் சித்தியும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எவ்வளவோ குற்ற உணர்வுகள் காரணமாக இருக்கலாம். பாசமும் கூட இருக்கிறது. ஆனால் ஒருபோதும் சாலினி அவர்களை ஏறிடுவதில்லை. கடைசி நேரத்தில் அவர்களை மன்னித்த தோரணை இல்லை. இன்னும் சொல்லப் போனால் மரணத் தருவாயில் தனது காதலனின் கரம் பற்றி தனக்கு சொல்ல வேண்டியதை எல்லாம் பேசி முடிக்கிறாள், நான் இதற்கு மேல் யாரிடமும் பயம் கொள்ள வேண்டியதில்லை !நான் உள்பட எல்லோரும் விரும்புகிற சாலினி மரணத்தின் போது தலை திரும்புகிறாள். அவளுக்குள் மூர்க்கங்கள் இருக்கின்றன. எல்லோரிடமும் முட்டி மோதி அதைத் தீர்த்துக் கொண்டிருக்க முடியாது என்பதால் விடுதலை வாங்கிக் கொண்டு பறந்து விட்டாளா? அவர் சொன்னது போலவே அதைத்தவிர அவளுக்கு வேறு வழி இல்லை தானாஎன்னவோ?
நிறுத்தாமல் அவள் அழுகிற அந்த அழுகையை படம் முடிந்த பின்னர் நாம் தான் மனதில் ஏந்திக் கொண்டு வருகிறோம்.
-மணி எம்.கே மணி