இதுவரை உலகில் எண்ணற்ற பல மனிதர்கள் வாழ்ந்து இறந்துள்ளனர். ஆனால் ஒரு மரணம் மட்டும் உலக மக்களின் தூக்கத்தை தொலைத்தது‌. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலைநடுங்க செய்தது. ஒரு மரணம் இந்திய விடுதலைக்கு அடிகோலியது. ஒரு மரணம் எல்லோரையும் ஒரே மையப்புள்ளியில் சங்கமிக்க செய்தது. ஒரு மரணம் சாவையும் வாழவைத்தது. ஒரு மரணம் சூரியனை சுட்டெரித்தது. ஒரு மரணம் மரணத்தைக் கொன்று புதைத்தது. ஒரு மரணம் பிறிதொரு மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கியது. ஒரு மரணம் முழு பௌர்ணமி நாளை இருளாக்கியது. தன் மரணத்தை, மரணத்தாலே வாழவைத்தவர்தான் தோழர் பகத்சிங். பகத்சிங் மறைந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டாகப் போகிறது. இன்றும் மார்ச் 23ஆம் நாள் அன்று அவர் குறித்த வரலாறு நம் சிந்தனையை தழுவுகிறது. இந்தியர்கள் நாடு விடுதலை அடைந்ததை எந்த அளவிற்கு கொண்டாடுகிறோமோ? அதே அளவிற்கு பகத்சிங், சுகதேவ், ராஜகுருவின் மரணத்தை நினைக்கும் பொழுது சோகம் நம்முள் குடிகொள்கிறது.

தோழர் பகத்சிங், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக தன் உயிரைக் கொடுத்ததை போன்றே உள்நாட்டு பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தியவர். ஆனால் அவரை ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் என்று சொல்லியே நம் மூளையை சலவை செய்யப்பட்டுள்ளது.

அவர் இந்தியாவில் நிலவிய சாதி கொடுமையை எதிர்த்துள்ளார். சாதிக் கொடுமைக்கு காரணமாக இருந்த இந்து மதக்கொடுங்கோன்மையை எதிர்த்து களமாடினார். விடுதலைப் போராட்டங்களை இந்துத்துவ மற்றும் முஸ்லிம் மதவாத கிரிமினல் கும்பல்கள் பிளவுபடுத்துவதை கவனித்து அவற்றை கடுமையாக சாடியவர். நாட்டில் வெடித்த மத கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்கத் தொடங்கினார். ஒரே நேரத்தில் இந்திய விடுதலைப் போராட்ட களம் சாதி மத எதிர்ப்பு என்று தன்னுடைய இலக்கை தீர்மானித்து சனாதன சக்திகளை எதிர்த்தும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் தன்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை போராடினார். இந்தியாவில் மதவாத பிரச்சனைகளின் அடிப்படை எங்கிருந்து வருகிறது என்பதையும் சாதிய தீண்டாமை எவ்வளவு இழிவானது என்பதையும் இளைஞர்கள் மத்தியில் விரிவாக விளக்கினார். நாட்டில் வெடித்த மதக்கலவரத்தின் காரணமாக மத நம்பிக்கையை மறுக்கத் தொடங்கினார். இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்தும், உழைக்கும் மக்களுக்கும் விடுதலை பெற்றுத்தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திர குடியரசை நிறுவுவது ஓர் ஐக்கிய இந்திய அரசை நிறுவிட இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊட்டுவது மதவாத போக்குகள் அற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பது தொழிலாளர்களையும் விவசாயிகளையும் திரட்டுவது போன்ற அரசியல் நோக்கங்களுடன் இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களை அரசியல் படுத்த நினைத்த நினைத்தார். இவை எல்லாவற்றிற்கும் காரணம் அவரின் தெளிந்த அரசியல் பார்வை.

அப்பொழுது மார்க்சியம் அவருக்கு வர்க பார்வையை ஊட்டியது. மதவாத பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒரே வழி வர்க போராட்டங்களை என தனது இருபதாவது வயதில் பிரகடனப்படுத்திக் கொண்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்தியா உழைக்கும் மக்கள் அவர்தான் இயற்கை வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை இந்த போர் தொடரும், தொடர வேண்டும். கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம் அல்லது பிரிட்டிஷ் முதலாளிகள், இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம். அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக் கூட இருக்கலாம் என்று தெளிந்த சிந்தனை கொண்டவர்.

அதன் அடிப்படையில் சிறையில் இருந்தபோது நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற நூலையும் படைத்தார்.

கடவுள் நம்பிக்கையும், மதக் கோட்பாடும் அவரிடம் எள்ளளவும் இருந்ததில்லை. தூக்கு கயிற்றின் முன்னாள் நின்ற பகத்சிங்கிடம் சிறை வார்டன் சரத் சிங் கடவுளை போற்றி துதிக்கும் சீக்கியர்களின் புனித வார்த்தையை நினைவில் கொள்ள வலியுறுத்தினார். அதற்கு பகத்சிங் அதை மறுத்து வாழ்க்கையில் நான் ஒருபோதும் கடவுளை வணங்கவும் இல்லை, போற்றவும் இல்லை. உண்மையில் ஏழைகளின் துயரம் கண்டு கடவுளை விமர்சித்துள்ளேன். அதற்காக இப்பொழுது மன்னிப்பு கேட்டால் என்னைவிட கோழை யாரும் இருக்க முடியாது. இறுதி காலம் வந்து விட்டதால் மன்னிப்புக் கேட்கிறான் என மக்கள் தூற்றுவர் என்று மறுத்துவிட்டார்.

தன் கொள்கையில் இத்தனை உறுதிப்பாடு மிக்க காரணமாக இருந்தது அவருடைய குடும்பம் என்று சொல்ல முடியும். அவருடைய குடும்பம் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக சிறை கம்பிகளுக்கு பின்னால் நின்றவர்கள். அதனால் அவருக்கு, இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்ட உணர்வும், உறுதியான கொள்கையும் பசுமரத்த அணியில் போல் ஆழமாக பதிந்தது. பகத்சிங் பிறந்தநாளில் தாத்தா மற்றும் அஜித் சிங், ச்வரவன் சிங் ஆகிய இரண்டு மாமாக்களும் சிறையில் இருந்து வெளியான நாளாகவே அமைந்தது.

ஆயுதம் தான் பிரிட்டிஷ் ஆட்சியை நாட்டை விட்டு துரத்தும் என்ற கொள்கை இளம் வயதிலேயே இருந்துள்ளது. பகத்சிங் சிறுவனாக இருந்தபோது தந்தை கிஷன் சிங்சந்துடன் வயலுக்கு சென்றார். அப்பொழுது இந்த தானியங்கள் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, தந்தை ஒரு விதையிலிருந்து இத்தனை மகசூல் கிடைத்தது என்றார். எல்லாவற்றையும் கவனமாக கேட்டு வந்த அந்தச் சிறுவன், சற்று நேரத்தில் அவனுடைய குரல் கேட்கவில்லை. அவருடைய தந்தை திரும்பி பார்த்தார். அப்பொழுது கொஞ்சம் தூரத்தில் அந்த சிறுவன் வயலில் குழிதோண்டி எதையோ நட்டு கொண்டு இருந்தான். அவனுடைய அப்பா என்ன செய்கிறாய் என்று கேட்டதற்கு, அச்சிறுவன் நான் ஒரு துப்பாக்கியை நடுகிறேன். அது இன்னும் சில நாட்களுக்குப் பிறகு மரமாகி எல்லா கிளைகளிலும் துப்பாக்கிகள் காய்த்து தொங்கும் என்று கூறினான். அப்படி சொல்லும் பொழுது பகத்சிங்குக்கு வயது ஐந்து.

எண்ணம் தான் ஒரு மனிதனை உருவாக்கும். எண்ணம் தான், தான்யார் என்பதை இவ்வுலகிற்கு உணர்த்தும். எண்ணம் தான் மாற்றத்தை உண்டாக்கும். எண்ணம் தான் போராடும் எண்ணத்தை உருவாக்கும். போராடும் எண்ணம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் பகத்சிங் வரலாற்றை எளிதாக கடக்க முடியாது. இந்திய விடுதலைக் கனவு பகத்சிங் கண்களில் மின்னியது. எப்படியாவது தன் காலத்திலேயே இந்தியா சுதந்திரம் பெற்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தவர். அதன் தாக்கம் தான் புரட்சி என்பது மனித சமுதாயத்தில் பிரிக்க முடியாத ஓர் அங்கம். சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை அதை யாரும் தடுக்க முடியாது என்ற கொள்கைக் கோட்பாட்டுடன் செயலாற்றியவர்.

தன்னுடைய 14 வது வயதில் நெஞ்சு உறுதியுடன் நாட்டு விடுதலைக்காக காந்தியடிகளுடன் இணைந்து பணியாற்றியவர். ஆனால் அவருடைய ஒத்துழையாமை இயக்கம் காந்தியை விட்டு விலகுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. அதன்பிறகு இளம் புரட்சியாளர்கள் இயக்கத்தில் இணைந்து மக்கள் விடுதலைக்காக பணியாற்றியவர்.

பகத்சிங்கின் திசைவழி பயணத்தை மாற்றியது ஜாலியன் வாலாபாக் படுகொலை. 1919 ஏப்ரல் 13 இல் நடந்த அந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் அவர் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த படுகொலைக்குப் பிறகு அவர் நிம்மதி இன்றி இருந்தார். அன்று அவருக்கு வயது பனிரெண்டு. பனிரெண்டு வயது சிறுவனாக இருந்த பகத்சிங் அந்தப் படுகொலை நடந்த சில மணித்துளிகளிலேயே காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைப் போல் மனித சடலங்கள் மிதந்துக் கிடந்தன. மனித சடலங்களின் இருந்து ஒழுகிய ரத்தம் மண்ணில் கலந்து உறைவதற்கு முன்பாகவே அந்த ரத்தம் கலந்த மண்ணை ஒரு பிடி எடுத்து ஒரு பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டார். இந்த மண் தான் அவரை உறங்கவிடாமல் செய்தது. இந்த மண்தான் அவரை விடுதலைக்கான பாதையை சமைக்கச் சொல்லி கற்றுத்தந்தது. இந்த மண்தான் அவர் கண்களை சிவப்பாக்கியது. இந்த மண்தான் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்த வெள்ளைப் பரங்கியர்களின் துப்பாக்கிகளிலிருந்து வெளியேறிய ரவைகளுக்கு பதில் சொல்லத் தூண்டியது.

ஒரு பக்கம் ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றொரு பக்கம் லாலா லஜபதிராயின் மரணம். லாலா லஜபதி ராய் சைமன் கமிஷனை எதிர்த்து போராடிய காரணத்திற்காக அன்றைய பிரிட்டிஷ் ஏவலர்கள் அவரை அடித்து கொலை செய்தனர். இந்த கோர சம்பவம் இன்னும் கோபத்தின் உச்சாணிக்கையே அவரை கொண்டு சென்றது. அல்லது அவரை மரணத்துடன் இணைத்தது என்று சொல்ல முடியும்.

லாலா லஜபதிராயை அடித்து கொன்ற காட் என்ற வெள்ளையனை சுட்டுக் கொள்வதற்கு நாள் குறிக்கப்பட்டது. லாலா லஜபதிராயை கொலை செய்யப்பட்டது நவம்பர் 17. லாலா லஜபதி ராய்டிசம்பர் 17 ஸ்காட்டுக்கு தேதி குறிக்கப்பட்டது. ஆனால் விதி அவனை வேறு திசையில் அழைத்துச் சென்றது. ஸ்காட்டுக்கு விரித்த வலையில் சாண்டர்சன் விழுகிறான். அவன் கொலை செய்யப்படுகிறான்.

இந்தக் கொலையை ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் அமைப்பு முன்னெடுத்தது. அதை முன் நின்று நடத்தியவர் இருவர் ஒருவர் பகத்சிங் மற்றொருவர் சுகதேவ். இந்தக் கொலையை அந்த அமைப்பும் நியாயப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. சாண்டர்சன் ஒரு துருப்பாக இருந்தான் அதனால் அவனை கொலை செய்தோம். இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்களோடு முடியப்போவதுமில்லை மனிதனை மனிதன் சுரண்டும் அமைப்பு முறை மாறும் வரை இந்த போராட்டம் தொடரும் நாளைய இளைஞர்கள் தொடர்வார்கள் என்று எழுதி ஆங்காங்கே சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டு இருந்தது. இந்தியாவை விடுதலை அடையச் செய்வது மட்டுமல்ல இந்திய முதலாளிகளிடமிருந்து உழைக்கும் மக்களும் விடுதலைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தவர்.

ஒரு மனிதனை கொலை செய்வது எந்த அளவுக்கு தவறானதோ அதே அளவிற்கு இந்திய சுதந்திர கனல் அவர் நெஞ்சில் எரிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் நாடாளுமன்றத்தில் குண்டு வீசுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு பகத்சிங்கே தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். சுகதேவ் பகத்சிங்கடம் பாராளுமன்ற குண்டு வீசற்கு செல்லக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த பின்பும் பகத்சிங் மற்றும் டெட் இருவரும் பாராளுமன்ற குண்டு வீச்சில் தேர்வாகினர்.

1929 ஏப்ரல் 8ஆம் நாள் காலை 11.00 மணி அளவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் யாருக்கும் எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் குண்டு வீசப்பட்டது. அந்த குண்டு வீச்சு காட்சியைப் பார்த்தவர்கள் சிதறி ஓடினர். பகத்சிங் கையில் வைத்திருந்த துப்பாக்கியும் அவர் எரிந்த குண்டும் அவருக்கு மரண தண்டனைக்கு ஆளானது.

அவரை குற்றம் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்டாலும் சிறைச்சாலையை கூட ஒரு போராட்டக் களமாக மாற்றியவர். சிறையில் மற்ற கைதிகளுக்கு இருக்கும் நெருக்கடியை கண்டு அவர்களுக்காகவும் போராடினார்.

அவர் சிறையில் இருந்த பொழுது 151 புத்தகங்களை வாசித்துள்ளார். நானூறு பக்கங்களுக்கு மேலாக குறிப்புகளை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். கனவுலகத்திற்கு ஓர் அறிமுகம் நான் ஏன் நாத்திக நானே இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு சோசியலிச கோட்பாடு சுயமரியாதை மரண வாசலில் உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருந்தாலும் இன்று நமக்கு கனவுலகத்திற்கு ஓர் அறிமுகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற இரண்டு புத்தகங்கள் தான் நம் கரங்களில் தவழ்கிறது. இதில் why am I atheist என்று ஆங்கிலத்தில் எழுதிய நூலை தோழர் ஜீவானந்தம் அவர்கள் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். அதை நூலாக வெளியிட்டவர் பெரியார்.

பெரிய அளவிற்கு பள்ளிக்கூடம் செல்லாதவர் என்றாலும் அவர் பஞ்சாபி உருது இந்தி ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை மிக்கவராக இருந்தார். புத்தகம் வாசிப்பதில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார்.

பகத்சிங் இடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார் அவரின் உதவியாள்தான் லாகூரின் துவாரகா தாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கத்திற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தன. புத்தகப் பிரியரான பகத்சிங் தன்னுடைய பள்ளி தோழர் ஜெயதேவ் கப்ருக்கு எழுதிய கடிதத்தில் கார்ல் லிப்னேக்கின் மிலிட்டரி எஸ் எம் லெனின் இடதுசாரி கம்யூனிசம் அப்ஸன் சின்க்லேயரின் தி ஸ்பை ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

முனைவர் எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
இலயோலா கல்லூரி,
சென்னை – 600 034.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *