மஞ்சும்மல் பாய்ஸ் கதை நிஜக்கதை. 2006 ஆம் ஆண்டு கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி அருகே உள்ள மஞ்சும்மல் எனும் பகுதியிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக வந்த நண்பர்கள் குழு, அனைத்து பகுதிகளையும் சுற்றிவிட்டு இறுதியாக அவர்கள் பார்த்த இடம் தான் குணா குகை. இயற்கை எவ்வளவு அழகியலை தன்னுள் வைத்து வைத்திருக்கிறதோ, அதே அளவிற்கு அது ஆபத்தையும் தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது. அதன் ஆபத்தை உணராமல் அதனுள் சென்று மாட்டிக்கொண்ட நண்பனை காப்பாற்ற போராடும் நண்பர்களின் கதை தான் இது.
ஒரே ஒரு திரைப்படம் எடுத்தனுபவமுள்ள மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் எனும் நேரடி மலையாள திரைப்படம் தற்போது தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. அதற்கு மிக முக்கிய காரணம் திரைப்படத்தில் வரும் “கண்மணி அன்போடு காதலன்” என துவங்கும் நடிகர் கமலின் குணா திரைப்பட பாடல் மட்டுமின்றி அத்திரைப்படத்தின் கதை, வசனம், உண்மையான குணா குகை போல் ஒரு செட்டை உருவாக்கி இயற்கையாகவே சம்பவத்தை காட்சிப்படுத்தியது உள்ளிட்டவை நேரடியாக பார்ப்பவரின் இதயத்தை தொட்டதால் தான் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறி இருக்கிறது. “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல, அதையும் தாண்டி புனிதமானது” என்ற காதலன் காதலியை பார்த்து பாடிய பாட்டு, எப்படி முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் நடித்திருக்கும் படத்திற்கு பொருந்தியது என எண்ணிக்கொண்டு சென்ற பல பார்வையாளர்களுக்கு இறுதி காட்சியின் சிலிர்ப்பான ஒரு உணர்வுக்கிடையே எழுந்த கைதட்டலும், விசில் சத்தமும் தான் இப்படத்தின் வெற்றியை பறைசாற்றியது. நாமாக உருவாக்கிக் கொள்ளும் இந்த நண்பனிடம் இருந்து அவனுடைய இருக்கும் அன்பார்ந்த இந்த பிணைப்பு இந்த மனித சமுதாயம் உணர்ந்து கொள்ள முடியாத அளவில் நெருக்கமானதும் இறுக்கமானதாகவும் இருக்கிறது என்பதுதான் உண்மை.
ஏனெனில் தன் உயிரையும் பொருட்படுத்தாது நண்பன் உயிர் காக்க சண்டையிடும், போராடும் நண்பனை பெற்ற அனைவருக்கும் இக்கதை நெருக்கமானதாக இருக்கும். நல்ல நண்பர்கள் சூழ வாழும் ஒருவன் கண்டிப்பாக வாழ்க்கையில் வெற்றி பெற்று சிறந்த இடத்திற்கு செல்வான். இத்திரைப்படத்தில் கூட ஒரு காட்சி வரும் அதில் “இந்த குழியில் விழுந்த யாரும் மீண்டு வந்ததாக சரித்திரம் இல்லை, எனவே உங்கள் நண்பன் இருந்திருப்பான்” என சுற்றுலா வழிகாட்டி, உணவகத்தை நடத்தி வரும் நபர், போட்டோகிராபர், போலீஸ் என அனைவர் சொன்னாலும் அவன் உயிரோடுதான் இருக்கிறான் என்கிற உணர்வோடு அவனை மீட்க போராடும் போது வெளிவரும் கண்ணீர் மழைநீராக பெய்து குழியில் விழுந்து கொண்டிருக்கும்போது அதை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டத்தை அவர்கள் நடத்துவார்கள் அது மிகவும் இயற்கையாக எழுந்து ஒரு உணர்வாக தான் இருக்கிறது. அப்படிப்பட்ட அன்புடன் கூடிய நெருங்கிய பிணைப்பு தான் நண்பர்களுக்கு இடையேயான காதல் தான் இம்மனிதர் உணர்ந்துகொள்ளா காதல், அது புனிதமானதும் கூட என்ற உணர்வு வரும்.
மேலும் இத்திரைப்படத்தில் சவுபின் சாஹீர், ஸ்ரீநாத் பாசி என இரண்டு சிறந்த குணசித்திர நடிகர்களின் எளிமையான மற்றும் மிரட்டலா நடிப்பும், நம் அனைவரும், நம்மை அவர்களோடு நேரடியாக தொடர்புபடுத்தி பார்க்கும் அளவிற்கு இருந்தது. சமீபத்தில் முகநூலில் ஒரு வீடியோ காணொளி பார்க்கும் போது, அதில் இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கரகரா தனது ஓய்வை அறிவிக்கையில், தனது பெற்றோர் உரித்து குறித்து உணர்வுபூர்வமாக பேசிக் கொண்டிருந்தார். “இந்த உலகில் நாம் தீர்மானிக்காமல் உறவுகளாக வருவது நமது தாய் தந்தையர் மற்றும் நமது சகோதர சகோதரிகள்’ என தெரிவித்தார். ஆனால் “நண்பர்கள் என்பது கூட நாம் உருவாக்கிக் கொள்ளும் உறவு” என அவர் போகிற போக்கில் முக்கியத்துவம் அளிக்காத வகையில் தெரிவித்தார். இப்படி நாமாக உருவாக்கிக் கொள்ளும் உறவான நமது நண்பன் எப்படி ஆபத்பாந்தவனாக (ஆபத்திலிருந்து காப்பவராக) இருப்பான் என இத்திரைப்படம் நமக்கு உணர்த்தும். நம்ம ஊர் சினிமா, நாயகன் நாயகியை தேடி, தேடி உருகி, உருகி காதலிக்க வேண்டும். பின்னர் நாயகன் ஒரு குத்தாட்டம் போட வேண்டும் என்ற கமர்சியல் விஷயங்கள் எல்லாம் இல்லாமல் இருக்கும் இப்படம் எப்படி தமிழ் ரசிகர்களுக்கு நெருக்கமாய் போனது என்பதுதான் மிக ஆச்சரியமான ஒரு விஷயம். ஏனெனில் இத்திரைப்படம் பெரிய நாயக பின்பங்களோ, காதல் பாடலோ, காதல் காட்சிகளோ ஏதும் இல்லாமல் இத்திரைபடம் வெறும் கதையையும், கதைகளத்தையும், கதை மாந்தர்களை மட்டுமே நம்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் இசக்கிபாண்டி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

