மனுஸ்மிருதி – மோடியிசம் — ஒரு நாடகம் | வே .மீனாட்சிசுந்தரம்

மனுஸ்மிருதி – மோடியிசம் — ஒரு நாடகம் | வே .மீனாட்சிசுந்தரம்



மனுஸ்மிருதி தொடர்பாகப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது போலீஸ் குற்றவியல் குற்றம் என்று  வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தியன் பீனல் கோடு  பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்துள்ளது ஐ.பி.சி 153, 153A(1), 295A, 505(1)(b). 505(2). வேடிக்கை என்ன வென்றால் இப்படி வழக்குத் தொடுத்த பிறகே அப்படி அவர் என்ன பேசினார் என்று  வெகுமக்கள் தேட ஆரம்பித்தனர். முதலில் வெபினார்ல அவர் பேசியதை சில ஆயிரம் பேரே கேட்டிருப்பர் போலிஸ் வழக்குத் தொடுத்த பிறகே வெகுமக்கள் பார்வைக்கு வந்தது. இதனால் கலவரம் நடக்கவில்லை மாறாக மனுஸ்மிருதியை ஆதரித்தும் வெட்டியும் கருத்துக்கள் வலைத் தளங்களில் பரவுகின்றன

 உண்மையில் பா.ஜ.க வினர் கருத்தைப் பரப்ப திருமா உதவியதற்கு நன்றி கூற கடமைப்பட்டவர்கள் வலைத் தளத்தில் கீழ்க்கண்ட மனுஸ்ம்ருதி வாசகங்களை பா.ஜ.கவினர் பதிவு செய்துள்ளனர்.அதனை கீரீன் ஷாட்எடுத்து கீழே பதிவு செய்யப்பட்டுள்ளன.

    

 பெண்மையை மனுஸ்மிரிதி போற்றுகிறது என்று வாதிட மேற்கண்டதைப் பா.ஜ.க மூளைகள் பதிவு செய்துள்ளன.. மேலே உள்ள எந்த வாசகமும் ஆண்- பெண் சமத்துவத்தைப் பேசவில்லை. ஆணின் பாதுகாப்பில் பெண் இருக்க வேண்டும் என்று கூறுகிறதே தவிரப் பெண் சுயமாகச் சிந்திக்கவோ செயல்படவோ உரிமை இல்லை என்பதைத்  தெளிவாக்குகிறது

அதே வலைத் தளத்தில் மனுஸ்மிருதி பெண்ணை கேவலப்படுத்திக் கூறும் வாசகங்களை எதிர் தரப்பினர் வெளியிட்டுள்ளனர்

“ஸ்வாபவ் ஏவ் நரினம்….” – 2/213.

பெண்ணின் இயல்பு இவ்வுலகில் ஆணை வசியம் செய்வது. இதன் காரணமாக, அறிவு பெற்றவர்கள் பெண்களுடன் இருக்கும் கால் பாதுகாப்புடனேயே இருப்பர்.

“ஷுத்ர் ஐவ் பார்யா..……” – 3/12.

பிராமணன் ஒரு பிராமணப் பெண்ணையோ, க்ஷத்ரிய பெண்ணையோ, வைசிய பெண்ணையோ மட்டுமல்லாது ஒரு சூத்திர பெண்ணைக்கூடத் திருமணம் செய்ய முடியும். ஆனால் ஒரு சூத்திரன் ஓர் சூத்திர பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்.

“யஸ்தோ னா பாவேத்…..…..” – 3/10.

நல்லறிவு பெற்றோர் சகோதரன் இல்லாத பெண்ணையோ, சமூகத்தில் பிரபலமற்றவர்களின் பெண்களையோ திருமணம் செய்யக்கூடாது.

 “நா ப்ரஹ்மன் க்ஷத்ரியா……” – 3/14. 

பிராமண, க்ஷத்ரிய, வைசிய ஆண்கள் ஜாதி மாறி திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எந்தவொரு துன்பம் வந்தாலும் அவர்கள் ஒரு சூத்திரப்பெண்ணை திருமணம் செய்யவே கூடாது.

 “ஹீன் ஜதி ஸ்த்ரியம்……..” – 3/15. 

துவிப்பிறப்பு கொண்ட (பிராமண, க்ஷத்ரிய, வைசிய) ஆண்கள் அறியாமையால் ஓர் கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்க நேரிட்டால் அதனால் அவர்கள் குடும்பங்களுக்கு ஏற்படும் கேவலத்துக்கு அவர்களே பொறுப்பு. இதற்கமைய அவர்களின் பிள்ளைகள் அனைவரும் சூத்திரர்களின் அனைத்து கேவலங்களையும் தம்மில் கொண்டிருக்கும்.

 “சூத்திரம் ஷைனம்……” – 3/17. 

ஒரு கீழ்சாதி சூத்திர பெண்ணை மணக்கும் ஒரு பிராமணன் அவனையும் அவனது முழுக்குடும்பத்தையும் இழிவுபடுத்துவதோடல்லாமல் கண்ணியங்களை இழக்கிறான் அத்துடன் பிராமண அந்தஸ்தையும் இழக்கிறான். அவன் பிள்ளைகள் யாவும் சூத்திரர்களே.

 “யம் ப்ரஹ்மன் ஸ்தோ…….” – 9/177. 

ஒரு பிராமணன் ஒரு சூத்திர ஸ்திரீயைத் திருமணம் செய்தால் அவர்களின் மகன் பர்ஷவ் என்றோ சூத்திரன் என்றோ அழைக்கப்படுவான் இதற்குக் காரணம் அவன் சமூகத்தில் ஒரு பிணத்தைப் போன்றவன்

 “தைவ் பித்ரியா………………” – 3/18. 

அத்துடன் (சூத்திரப்பெண்ணை மணமுடித்த) அந்த பிராமணனின் படையல்கள் எதுவும் பூஜைகளின் போது கடவுள்களாலோ அல்லது உயிரிழந்த ஓர் ஆத்மாவாலோ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. அதிதிகளும் அவனுடன் சேர்ந்து விருந்துண்ண மாட்டார்கள். மேலும் அவன் இறந்த பின் நரகத்தையே அடைவான்.

. “நா அஷ்னியாத்…………….” – 4/43. 

பிராமணியத்தைக் காக்கும் ஓர் உண்மையான பிராமணன் தன் மனைவியுடன் ஒன்றாக உண்ணமாட்டான். உண்ணும்போது அவளைப் பார்க்கமாட்டான். மேலும் அவள் உண்ணும்போதும், தும்மும்போதும், கொட்டாவி விடும்போதும் அவளை பார்க்கவும் மாட்டான்.

 “நா அஜ்யந்தி……………….” – 4/44. 



ஒரு பிராமணன் அவனுடைய வலிமையையும் அறிவையும் பாதுகாக்கும் வகையில் கண்ணுக்கு மை பூசும் பெண்களையோ, நிர்வாணமான தன் உடலை கைகளால் தேய்ப்பவளையோ, பிள்ளை பெற்றுக் கொண்டிருப்பவளையோ பார்க்கமாட்டான்.

 “பல்யே பிடோர்வஷே…….” – 5/151. 

பெண்கள் சிறுவயதில் தந்தைமாரின் பாதுகாப்பிலும், திருமணமானால் கணவன்மாரின் பாதுகாப்பிலும், விதவை ஆகும்போது ஆண் மக்களின் பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவள் தனியே தன் காரியங்களில் முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது.

 “அஷீலா கம்விர்தோ………” – 5/157. 

ஓர் கணவன் எந்தவொரு சிறப்புத் தன்மையும் இல்லாதவனாக இருப்பினும், விலைமாதரிடம் செல்பவனாக இருப்பினும், கெட்டவனாக இருப்பினும், நீதியற்றவனாக இருப்பினும் பெண்கள் அவனை வணங்கி சேவகம் புரிய வேண்டும்.

 “நா அஸ்த் ஸ்த்ரினாம்……..” – 5/158. 

பெண்கள் எந்தவொரு பூஜைகளையும் செய்யவோ அர்ப்பணிக்கவோ, விரதம் இருக்கவோ கடவுளின் அனுமதி மறுக்கப்படுகிறது. அவளின் ஒரே கடமை கணவனின் சொல் கேட்பதும் அவனை சந்தோஷப்படுத்துவதுமே; அந்த ஒரே காரணத்துக்காக அவள் சுவர்க்கம் செல்வாள்

 “கமாம் தோ……………” – 5/160. 

(கணவன் இறந்த பின்) அவள் தன்னுடல் அழியும் வரை தூய்மையான மலர்களிலும் காய்கறி மற்றும் பழங்களின் வேர்களிலும் அமர வேண்டும். தன் கணவன் இறந்த பின் எந்த ஒரு ஆணின் பெயரைக்கூட அவள் உச்சரிக்கக் கூடாது.

 “வ்யாபாச்சரே…………” – 5/167 (சில பதிப்புகளில் 5/164)

கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் ஒரு பெண் கேவலப்படுகிறாள், ஓர் தொழுநோயாளி ஆகுவாள், இறந்த பின் ஒரு குள்ள நரியின் கருப்பையை அடைவாள்.

“கன்யம் பஜந்தி……..” – 8/364. 

உயர் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரியும் ஒரு பெண் தண்டனைக்கு உள்ளாக்கப்படமாட்டாள். ஆனால் கீழ் ஜாதிக்காரன் ஒருவனுடன் விபச்சாரம் புரிந்தால் அவள் தண்டிக்கப்படுவதுடன் ஊர்விலக்கு செய்யப்பட வேண்டும்.

 “உத்மம் செவ்மந்த்சோ…….” – 8/365. 

கீழ் ஜாதிக்காரன் ஒருவன் உயர் ஜாதி பெண் ஒருத்தியுடன் விபச்சாரம் புரிந்தால் கீழ் ஜாதி ஆணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். பெண்ணும் கீழ் ஜாதியாக இருப்பின் அவன் அவளுக்குரிய இழப்பீட்டுக்குரிய தொகையைத் தந்தால் போதுமானது.

 “யா தோ கன்யா…………….” – 8/369. 

கன்னித்திரை கிழிந்திருப்பவளுக்குரிய தண்டனையாவது அவளை மொட்டை அடித்து அவளின் இரண்டு விரல்களை வெட்டிவிட வேண்டும். அத்துடன் அவளைக் கழுதை மேல் ஏற்றிப் பவனிவரச்செய்ய வேண்டும்.

 “பர்தரம்…………….” – 8/370. 

ஒரு பெண் தன் உயர்வையோ தன் குடும்பத்தின் உயர்வைப் பற்றியோ பெருமைகொண்டு தன் கணவனுக்குரிய கடமைகளை உதாசீனப்படுத்தினால் அரசன் அவளுக்கு வழங்கும் தண்டனையாவது எல்லோரும் பார்க்குமிடத்தில் அவளை வெறிநாய்களுக்கு முன்னால் எறிதலாகும்.

இத்தகைய மனு நீதியை மோடி அரசு சட்டமாக்க முடியுமா? அதை விமர்சிப்பதை ஏன் காவல்துறை தண்டனைக்குரிய குற்றமெனக் கருத வேண்டும்.

Burning Manusmriti, anything Sangh doesn't agree with is anti-national

இந்த சர்ச்சை இன்று அவசியமா?

 மனுஸ்மிருதி ஒரு பழமையான சமஸ்கிருத மொழியில் ஓசைவடிவில் இருந்த ஆவணம். சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சமூகம் பலகணவ குடும்ப உறவிலிருந்து நகர்ந்து ஆணாதிக்க பல தார குடும்ப உறவு உருவாகி வந்த காலத்து நீதி நூல் ஆகும். இன்று அந்த நீதி  பொருந்தாது என்பதை  சங்கிகளும் நன்கறிவர். வரலாறும், மனுஸ்மிருதியின்  வாசகங்களும் உணர்த்துவதென்ன? அந்த காலத்திலும் பெண் தனது அந்தஸ்தை நிலை நிறுத்த  போராடியிருக்கிறாள் இன்றும் போராடுகிறாள். 

 ஏன்  தாராளமய முதலாளித்துவத்தைப் பேணுகிற பா.ஜ.க  சனாதனத்தை அரசியலுக்காக முன் நிறுத்துகிறது. நம் நாட்டில் பெரும்பாலான ஏழைகள் தெய்வங்களை நம்புகிறவர்கள். சமஸ்கிருத மொழிக்கு மந்திர சக்தி இருப்பதாக நம்புகிறவர்கள். படித்த கூட்டம் கூட கிரக மற்றும் ராசி பலனைத் தேடுபவர்கள். மோடியும் – சங்பரிவாரங்களும் அம்மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க நடத்தும் நாடகத்தின் காவல்துறை வழக்கு காட்சி.  மோடியின் அரசியல் பொருளாதார நடவடிக்கைகளால் வரும் கேடுகளை எதிர்க்கும் அரசியல் விழிப்புணர்வைத் தடுக்குமென அரங்கேற்றுகின்றனர்.     

 மோடியிசம் என்றால் ஜனநாயக மறுப்பு- உழைப்பாளி மக்களின் வாழ்வைச் சீரழிக்கும் பொருளாதார கோட்பாடு,- பங்கு மற்றும் சரக்கு சந்தையில் ஊக வாணிபத்திற்குப் பணத்தை அள்ளிக் கொடுக்கும் பணக் கோட்பாடு-  அண்டை நாடுகளுடன் பகைமை-, பாதுகாப்பு பெயரில் அந்நிய ஆயுதங்களை விலை கொடுத்து வாங்குவது-  அந்நிய கடன்சுமையைப் பெருக்குவது.- அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த மறுப்பது.- குலத் தொழில் கட்டமைப்பு மூலம் வேலை வாய்ப்பை உருவாக்குவது- கல்வியையும், மருத்துவத்தையும் தனியார் கொள்ளைக்குப் பலியிடுவது- இந்து சாம்ராஜ்ய கூறுகளை உருவாக்குவது ஆகியவைகளே மக்கள் மனதில் முதலில் ஓடும். 

இந்த பிற்போக்கான அரசியலுக்கும்  பொருளாதார அணுகுமுறைக்கும் எதிராக மக்கள் திரளாமல் தடுக்கவே அதிகாரம்- பணம் இரண்டையும் வைத்து ஆட்டம் போடுகிறது.

சங்கிகள் மோடியிசத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்ப

 இஸ்லாமிய எதிர்ப்பு-  மாட்டுச் சாணி மகாத்மியம்,- மனுஸ்மிருதி,- ராமர் கோவில்,- புராணங்களுக்கு அறிவியல் சாயம் பூசுவது. இவைகளை ஊடக வழியாக பரப்பி வருகிறது. அதனை அம்பலப்படுத்துவோரைச் சட்டம் ஒழுங்கு என்று மிரட்டுகிறது. அ.தி.மு.க வும் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பேணுகிற கட்சி. சங்கிகளுக்கு ஜலரா போடுகிறது.  



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *