மாவோ கவிதை
ஆரஞ்சுத் தீவின் முனையில்
சியாங் நதி வடக்கே ஓடிக்கொண்டிருக்க
இலையுதிர் காலப் பனியில் தனித்து நிற்கிறேன் நான்.
நெருக்கமாய்ப் பற்றியிருக்கும் மரங்களால்
கருஞ்சிவப்பில் ஒளிரும் ஆயிரமாயிரம் மலைகள்
படிகமாய்த் தெளிந்திருககும் நீரில் வழுக்கி
வரிசை கட்டும் நூறு நூறு படகுகள்.
உயர்ந்த ஆகாயத்தில் சிறகடித்து மேலேறும் கழுகுகள்
தெள்ளிய ஆழத்தில் சட்டெனப் பார்த்து நழுவும் மீன்கள்
மையம் வரையில் குளிர் நடுக்கும் உறைந்த வானத்திற்குக் கீழே
சுதந்திரத்திற்காகப் போராடும் கோடானுகோடி உயிரிகள்.
எல்லையில்லா வெற்றிடத்தில் நம்பிக்கையிழந்தவனாய்
விரிந்த ஆளுமைப் பரப்பில் உன்னை நான் கேட்கிறேன்
எவரின் கண்காணிப்பில் இருக்கிறது இந்தப் புவியின் விதி?
இங்கே நான் இருந்திருக்கிறேன்
சகாக்களின் கூட்டத்தோடு
அந்தத் துடிப்பான மாதங்களும் ஆண்டுகளும்
இன்னமும் பசுமையோடு.
பள்ளித் தோழர்களாய் பருவத்திலிருந்த நாங்கள்
வாழ்வின் முழு மலர்ச்சியில்
எமது விதியை நாங்களே நிறேவேற்றுகிறோம்.
உணர்விலும் உறுதியிலும் அறிந்து தெளிந்தவர்களாய்
இளமையின் வீரியத்துடன் கவலை மறந்து
எங்களின் நதிகளையும் மலைகளையும் காட்டி
எங்களின் எழுத்தாற்றலால் போற்றுவோம் தூற்றுவோம்
பணத்திற்கோ புகழுக்கோ ஏங்கியதில்லை!
உன்னால் முடியுமானால் நினைவுகூர்ந்திடு
வெள்ளத்தின் நடுவே நாங்கள் நின்றதை
விரைந்தோடிய படகுகளை அடக்கியதை.
மொழிபெயர்ப்பு : அசாக்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

