“ஆகாயத்தின் அடிவாரத்தில் ஊஞ்சல் கட்டி
அனைவரையும் ஆனந்தமாக ஆடவிடுவோம்
அலைகளின் மேலே
நடை பழகும் வித்தையை
கண்டிப்பாகக் கற்றுத் தருவோம்
காற்றிலும் பறந்து மகிழ
வினோதமான சிறகுகளை
விலை குறைவாக வழங்குவோம்
பசி போக்கும் மாத்திரைகளை
இலவசமாக
வீடுகளிலேயே விநியோகிப்போம்
நகரும் வீடுகளை உருவாக்கி
எங்கேயும் வசிக்கும் உரிமையை
சட்ட வடிவமாக்குவோம்
ஒளியினைச் சேகரித்து
இருளில்லாப் பாதைகளில்
பயமின்றி உலவச் செய்வோம்
கார் மேகங்களைக் கட்டிப்போட்டு
ஒளிந்திருக்கும் மழைத்துளிகளை
அவிழ்த்து விடுவோம்”
இப்படித்தான்
முன்பும் சொன்னார்கள்
இப்போதும் சொல்கிறார்கள்
எப்போதும் சொல்வார்கள்
அவர்களுக்கு துல்லியமாகத் தெரியும்
எத்தனைமுறை ஏமாந்து போனாலும்
கரவொலிகளோடு
நாம்
காத்திருக்கும் இரகசியம்
நமது இரகசியமே
அவர்களின் முதலீடு
அவர்களின் முதலீடு
என்பது
நமது மறதி…
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக அருமை… தர்மரே… நம் இளிச்சவாய்த்தனத்தை… சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளீர்… வாழ்த்துகள்!