நீல விழியாள் என்ற மாக்சிம் கார்க்கி அவர்களின் சிறுகதைத் தொகுப்பை தமிழில் சோ சண்முகம் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார். இதில் நீல விழியாள்,செமாகா, கவிஞர், குறும்புக்காரன், வாசகன் என ஐந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளது..
அதில் இருக்கும் ஒவ்வொரு கதைகளும் மிகவும் அழகாக வாசிக்கும்போதே காட்சிகளை கண் முன் கொண்டு வருகிறது.
நீல விழியாள் கதையில் விபச்சாரம் செய்ய அவள் அனுமதி சீட்டு கேட்பதும், விபச்சாரியாக வரும் அவள் கூறும் காரணங்களைக் ஏற்றுக்கொள்ளாத காவல் அதிகாரியும் தன்னை விபச்சாரி என்று கூறியதற்காக விபச்சாரம் செய்யும் பெண்ணை அடித்து உதைப்பதும் என அவளின் உண்மை நிலை அறிய விறுவிறுப்புடன் கதை நகர்கிறது..
செமகா ஒரு போர்வீரன்அது மட்டும் அல்ல திருடனும் கூட போலீஸ் அவனை தேடிக்கொண்டிருந்தது சாராயக் கடையில் இருந்து தப்பித்து மறைந்து மறைந்து பனி படரந்த பாதைகளில் நடந்து கொண்டிருந்தான். ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது தனியாகவே வாழ்ந்த அவனுக்கு அந்த குழந்தையை விட்டுவிட்டு தெருவில் போக மனமில்லை அவனுக்கும் குழந்தைக்கும் இடையில் நடைபெறக்கூடிய இன்னல்களும் மன வேதனைகளும் இந்த குழந்தை அவனது மார்பை தேடும்பொழுது அவனுக்கு ஏற்பட்ட உணர்வும் குழந்தையின் தாயை வேசி என அவன் திட்டுவதும் குழந்தை என்ன ஆனது போலீசாரிடம் அவன் மாட்டிக் கொள்கிறானா என்று உணர்வுகளின் பிரதிபலிப்பபோடு கதை நகர்கிறது.
![]()
எனக்கு மிகவும் பிடித்த கதை என்று சொல்வது என்றால் வாசகன் ஒரு நடுஇரவில் தன்னை அறிமுகம் படுத்திக் கொள்ளாமல் அறிமுகம் தேவையில்லை கருத்துக்களே தேவை என ஆரம்பிக்கும் உரையாடலும் ஏதோ ஒன்றை சாதித்தது போல் எப்பொழுதும் இருக்கக்கூடிய எழுத்தாளனின் கர்வத்தையும் அவனது எழுத்தில் புத்தகத்தின் விமர்சனங்களை நேரடியாக முன் வைக்கிறான் வாசகன். அவனது கேள்விகளும் அவனது வார்த்தைகளும் இரண்டு மூன்று முறைக்கு மேல் அவனை விட்டு செல்ல முயன்ற போதும் தோற்று பிறகு அவனிடமே வந்து உட்கார்ந்து எழுத்தாளர் அவன் சொல்வதைக் கேட்க முற்படுவதும், அவன் கேட்கும் கேள்விகளில் ஓரு சிலவற்றை உங்கள் முன் வைக்க நான் விரும்புகிறேன்.
இலக்கியத்தின் நோக்கம் என்ன? மக்களுக்கு நீங்கள் போதிப்பது என்ன?போதிக்கும் உங்கள் உரிமையை பற்றி நீங்கள் எப்பொழுதாவது உங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? பயனுள்ள வற்றை நீங்கள் உலகிற்கு வழங்குவதற்காகவும் வாழ்க்கையை வளப் படுத்துவதற்காகவும் அழகிய எண்ணங்கள் சொற்கள் உருவாக்குவதற்காக நீங்கள் எழுதுவதில்லை, புகழ் என்னும் வட்டியை பெறவே உங்கள் அனுபவத்தின் சிறு துணுக்குகளை கொடுக்கின்ற வட்டிக் கடைக்காரர் நீங்கள் என்கிறான்.உங்கள் பேனா நுனிப்புல் மேய்கிறது. சாதாரண மக்களின் சாதாரண உணர்ச்சிகளை நீங்கள் வர்ணிக்கும் பொழுது பல அற்பமான உண்மைகளை போதிக்கிறீர்கள்.மனித மாண்புகளை உயர்த்தக் கூடிய கற்பனை படைப்புகளை ஆக்க உங்களுக்கு திறமை உண்டா? மக்களின் உணர்ச்சியற்ற வாழ்க்கையை, நிழல் படம் பிடிப்பது போல் சித்தரித்து,அதை மக்களின் உள்ளங்களில் திணிப்பதன் மூலம், நீங்கள் எவ்வளவு தீமை செய்கிறீர்கள் என்று சிந்தித்தது உண்டா?
இழிந்த வாழ்க்கையினால்,கேடுற்று, இதயம் இழந்தவர்களை உயிர்ப்பிக்க கூடிய சொற்களை உச்சரிக்க முடியுமா? இன்னும் ஏராளமான வியப்பூட்டும் கேள்விகளை முன் வைக்கும் வாசகனும் அதற்கு பதில் தர இயலாமல் இருக்கும் எழுத்தாளரும் என கதை நம்மை சிந்திக்க தூண்டுகிறது.எழுத்தாளர்கள் வாசகர்களும் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்…வாசகனின் கேள்விக்கனைகளும்..
நீல விழியாள்
மாக்சிம் கார்க்கி
தமிழில் சோ சண்முகம்
வ உ சி நூலகம்
ஜி-1 லாயிட்ஸ் காலனி, இராயப்பேட்டை, சென்னை-14
044-28476273/9840444841
முதற் பதிப்பு 2003
பக்கங்கள் 80
விலை 30 ரூபாய்
நா.விஜயகுமார்
வாசகன்

